431. நிர்பந்தம் என்றால் என்ன?

நிர்பந்தத்துக்கு ஆளானவர்கள் தடை செய்யப்பட்டதை உண்பதால் அவர்கள் மீது குற்றம் இல்லை என்று இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:119, 6:145, 16:115) கூறப்படுகிறது.,

நிர்பந்தத்திற்கு ஆளாவது என்றால் என்ன? என்பதை நபி வழியில் ஆராயும் போது பிறரால் நிர்பந்திக்கப் படுவதும், உயிர் போகும் நிலையை அடைவதும் எவ்வாறு நிர்பந்தமாக உள்ளதோ அது போல் அன்றாட உணவுக்கு வழியில்லாத நிலையும் நிர்பந்தம் தான் என்று அறிய முடிகிறது. இதற்கு அனேகச் சான்றுகள் கிடைக்கின்றன.

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்குப் பஞ்சம் ஏற்படுகிறது. எந்த நிலையில் தாமாகச் செத்தவை எங்களுக்கு ஹலாலாகும்?" என்று நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலையில் அருந்தும் பால், மாலையில் அருந்தும் பால் உங்களுக்குக் கிடைக்காவிட்டால் அதை உண்ணலாம் என்றனர்.

(நூல்கள்: அஹ்மத் 20893, 20896, தாரமி 1912)

ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு, அல்லது பால் போன்ற திரவ உணவு கூட கிடைக்காதவர்களும், எந்தத் தாவரமும் கிடைக்காதவர்களும் தடை செய்யப்பட்டதை உண்ணலாம் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று "தாமாகச் செத்தவை எப்போது எங்களுக்கு ஹலாலாகும்?" என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "உங்கள் உணவு என்ன?" எனக் கேட்டனர். "காலையிலும், மாலையிலும் (சிறிதளவு) பால்" என்று நான் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாகச் செத்தவற்றை அந்த நிலையில் எங்களுக்கு ஹலாலாக்கினார்கள்.

(நூல்: அபூதாவூத் 3321)

அல்லாஹ்வின் தூதரின் விளக்கத்தின் அடிப்படையில் திருக்குர்ஆனைப் புரிந்து கொள்வோர் இந்த முடிவுக்குத் தான் வர முடியும்.

நிர்பந்தத்திற்கு ஆளானோர் தடை செய்யப்பட்ட உணவுகளை உண்ணலாம் எனக் கூறிய இறைவன் அதற்கு இரண்டு நிபந்தனைகளையும் கூறுகிறான். அவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

"வலிலியச் செல்லாமலும்" "வரம்பு மீறாமலும்" என்பதே அந்த இரு நிபந்தனைகள்.

தடுக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட ஆவல் கொண்டு, இது போன்ற நிலையைத் தேடிச் செல்லக் கூடாது. பஞ்சத்தில் அடிபட்ட பகுதிக்குச் சென்றால் தடுக்கப்பட்ட உணவுகளை ருசி பார்க்கலாம் என்று எண்ணுவது வலியச் செல்வதாகும்.

நிர்பந்தமான நிலையை அடைந்தோர் அதிலேயே நீடிக்கும் வகையில் நடக்கக் கூடாது. அந்த நிர்பந்த நிலையிலிலிருந்து விடுபடுவதற்கான வழி வகைகளை ஆராய வேண்டும்; அதற்காக முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சோம்பி இருந்து கொண்டு தடை செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் அது வரம்பு மீறலாகும்.

இந்த இரு நிபந்தனைகளின் அடிப்படையில் நிர்பந்த நிலையை அடைந்தவர்கள் தடை செய்யப்பட்டவற்றை உண்ணலாம். அதில் எந்தக் குற்றமுமில்லை.

இது போலவே இரத்தம் நமக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. விபத்துக்களில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்போருக்கும், அறுவை சிகிச்சைக்குப் போதிய இரத்தமில்லாதவர்களுக்கும் மற்றவர்களின் இரத்தம் செலுத்தப் படுகிறது.

சாதாரண வயிற்றுப் பசியைப் போக்குவதற்காகவே தடை செய்யப்பட்டவைகளை உண்ணலாம் எனும் போது உயிரைக் காக்கும் இது போன்ற சூழ்நிலையில் மற்றவர்களின் இரத்தத்தைச் செலுத்தலாம். உயிர் காப்பதை விடப் பெரிய நிர்பந்தம் ஏதுமிருக்க முடியாது.