385. உறவுகளுக்கு முன்னுரிமை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் சொந்த ஊரான மக்காவை விட்டு மதீனாவுக்கு விரட்டப்பட்டனர். அவ்வாறு விரட்டப்பட்டு அகதிகளாக வந்தவர்களையும், உள்ளூர் வாசிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். அதாவது மதீனாவைச் சேர்ந்த ஒருவர் மக்காவிலிலிருந்து அகதியாக வந்தவரைத் தமது சகோதரராக ஆக்கிக் கொள்ள வேண்டும் எனப் பணித்தார்கள். (பார்க்க: புகாரி 2292, 4580, 6747)
இதன் பின்னர் மதீனாவாசி ஒவ்வொரு வரும் தமது வீடு, தொழில், நிலம், ஆடை மற்றும் அனைத்து உடமைகளையும் சரி பாதியாகக் கொடுத்து சகோதரத்துவத்தை நிலைநாட்டினார்கள். அந்த நிலை தான் இவ்வசனத்தின் மூலம் மாற்றப்படுகிறது.
நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்தவர்கள் என்ற தகுதியை விட இரத்த சம்பந்தமான உறவுகளுக்குத் தான் சொத்துக்களைப் பொறுத்தவரை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இவ்வசனம் (33:6) தெளிவாகக் கட்டளை பிறப்பிக்கிறது. இதன் மூலம் 8:72 வசனத்தில் கூறப்பட்ட சட்டம் மாற்றப்பட்டது.