189. ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து...
இவ்வசனத்தில் (7:172) ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவரது சந்ததிகளை வெளிப்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான்.
"ஆதமின் முதுகுகளிலிருந்து" என்று மட்டும் கூறினால் அவருடைய நேரடிப் பிள்ளைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும். ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து என்று கூறினால் ஆதமுடைய நேரடி மக்களையும், அந்த மக்கள் வழியாகத் தொடர்ந்து வரக் கூடிய அனைத்து மனிதர்களையும் குறிக்கும்.
எனவே மிகவும் பொருத்தமாகவே இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மனிதர்கள் தமது தோற்றம், அறிவு, மற்றும் குண நலன்கள் அனைத்தையும் தமது முன்னோர்களின் மரபணுக்களில் இருந்தே பெற்றுக் கொள்கிறார்கள் என்று இன்றைய அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ளது. தனது தாய் அல்லது தந்தை அல்லது பல தலைமுறைக்கு முன் மரணித்து விட்ட முப்பாட்டன்களின் தன்மையுடன் மனிதன் பிறக்கிறான். அவனது தாய் தந்தையிடம் அவர்களின் முப்பாட்டன்மார்களின் குணநலன்களை முடிவு செய்யும் மரபணுக்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவதே இதற்குக் காரணம்.
உலக மக்கள் அனைவரின் தோற்றம், குண நலன்களைத் தீர்மானிக்கும் மரபணுக்கள் முதல் மனிதரிடமிருந்தே கடத்தப்படுகின்றன என்பது இதில் இருந்து உறுதியாகிறது. அந்த உண்மையையும் இந்த வசனம் (7:172) உள்ளடக்கி இருக்கிறது.