18. மூஸாவின் நாற்பது இரவுகள்

எழுத்து வடிவிலான வேதத்தை முப்பது நாட்களில் வழங்குவதற்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான். பின்னர் மேலும் பத்து நாட்கள் அதிகமாக்கி நாற்பது நாட்களாக நிறைவு செய்தான். நாற்பதாம் நாளில் பலகைகளில் எழுதப்பட்ட வேதத்தை அவர்களுக்கு இறைவன் வழங்கினான் என்று திருக்குர்ஆன் 2:51, 7:142 வசனங்கள் கூறுகின்றன.

மூஸா நபிக்கு வேதம் வழங்கப்படுவதற்கு முன்பே அவர்கள் இறைத்தூதராக ஆக்கப்பட்டிருந்தார்கள். தமது சமுதாயத்திற்குப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். ஃபிர்அவ்னை எதிர்த்துப் போராடினார்கள். இதன் பிறகே அவர்களுக்கு வேதம் அருளப்பட்டது.

பலகையில் எழுதப்பட்ட வேதம் மூஸா நபி அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் பல ஆண்டுகள் அவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர். வேதம் வழங்கப்படாவிட்டாலும் அவர்களுக்கு இறைவன் புறத்தில் இருந்து செய்திகள் கிடைத்தன. அதன் அடிப்படையில் அவர்கள் பிரச்சாரம் செய்தனர் என்பதை இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம். வேதம் என்ற வகையில் மட்டும் தான் இறைவனிடமிருந்து இறைத்தூதர்களுக்குச் செய்திகள் கிடைக்கும் என்பது கிடையாது. வேறுவகையிலும் இறைச் செய்தி கிடைக்கும் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.

இது குறித்து மேலும் விபரம் அறிய 27வது குறிப்பையும் காண்க!