பிளந்துவிடுதல்

மொத்த வசனங்கள் : 19

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றி பேசப்படுவதால் அதையே பெயராக ஆக்கப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
82:1. வானம் பிளந்து விடும் போது,
82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது,
82:3. கடல்கள் கொதிக்க வைக்கப்படும் போது,
82:4. மண்ணறைகள் புரட்டப்படும் போது,
82:5. ஒருவன் தான் முற்படுத்தியதையும், பிற்படுத்தியதையும் அறிந்து கொள்வான்.
82:6. மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது?
82:7. அவனே உன்னைப் படைத்து, உன்னைச் சீராக்கி, உன்னைச் செம்மைப்படுத்தினான்.
82:8. அவன் விரும்பிய வடிவத்தில் உன்னை அமைத்தான்.
82:9. ஆனால் நியாயத் தீர்ப்பு நாளை1 பொய்யெனக் கருதுகிறீர்கள்.
82:10, 11. உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.26
82:12. நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.
82:13. நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.
82:14. பாவிகள் நரகில் இருப்பார்கள்.
82:15. தீர்ப்பு நாளில் அதில் அவர்கள் கருகுவார்கள்.
82:16. அதை விட்டும் அவர்கள் மறைந்து விடுவோர் அல்லர்.
82:17. தீர்ப்பு நாள்1 எதுவென (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?
82:18. பின்னரும் தீர்ப்பு நாள்1 எதுவென உமக்கு எப்படித் தெரியும்?
82:19. அந்நாளில் எவரும் எவருக்கும் சிறிதளவும் நன்மை செய்ய முடியாது. அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே.