80. மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக்கலாமா?
திருக்குர்ஆனின் 2:267, 3:92 ஆகிய இவ்வசனங்களை உரிய விதத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தர்மம் செய்யும் பொருட்களில் பெருமளவுப் பொருட்கள் நமக்கு வேண்டாதவையாகவே உள்ளன. மற்றவர்கள் அது போன்ற பொருட்களைக் கொடுத்தால் அதை நாம் பெற்றுக் கொள்ள மாட்டோம். இது போன்ற பொருட்களை தர்மம் செய்வதை இவ்வசனங்கள் தடுப்பது போல் அமைந்துள்ளது.
இப்படிப் புரிந்து கொண்டால் நாம் பயன்படுத்திய பொருட்கள், மிஞ்சிய உணவுப் பொருட்கள் போன்றவற்றை மற்றவருக்குக் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்யும் நிலை ஏற்படும்.
ஆனால் இதன் பொருள் அதுவல்ல. மாறாக நமது நிலையில் இருந்து பார்த்தால் நாம் பெற்றுக் கொள்ளாத சில பொருட்களை தர்மம் பெறுபவனது நிலையில் நாம் இருந்தால் பெற்றுக் கொள்வோம். இது போன்ற பொருட்களை நாம் தர்மம் செய்யலாம்.
தர்மம் பெறுபவனின் நிலையில் நாம் இருந்தால் எதை நாம் பெற்றுக் கொள்ள மாட்டோமோ அது போன்ற பொருட்களைத் தான் தர்மம் செய்யக் கூடாது. நாம் போட்ட சட்டையை ஒருவருக்குக் கொடுக்கிறோம். நாம் அவரைப் போன்ற வறிய நிலையில் இருந்தால் அதைப் பெற்றுக் கொள்வோம்.
நாம் உபயோகப்படுத்திய சில உள்ளாடைகளைக் கொடுக்கக் கூடாது. ஏனெனில் அவரது நிலையில் நாம் இருந்தாலும் அது போன்ற பொருட்களைப் பெற்றுக் கொள்ள மாட்டோம். இவ்வசனங்களையும், இது போல் அமைந்த மற்ற வசனங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும்.