68. சக்திக்கேற்ற சட்டங்கள்

திருக்குர்ஆனின் 2:233, 2:236, 2:286, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7 ஆகிய வசனங்களில் சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்தச் சொற்றொடர் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லக் கூடியதாகும்.

நாம் வாழ்கின்ற காலம், நாடு, பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து இஸ்லாத்தின் சில கட்டளைகளை நிறைவேற்ற முடியாமல் போகலாம். உண்மையிலேயே இயலாத போது அதைச் செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி ஏதும் கேட்க மாட்டான்.

அல்லது ஒருவரது உடல் நிலை, நோய், முதுமை போன்றவை காரணமாக சில கட்டளைகளைச் செயல்படுத்த முடியாமல் போகும். உண்மையாகவே அவருக்கு இயலவில்லை என்ற நிலையில் சில கட்டளைகளைச் செயல்படுத்தாமல் இருந்தால் அவரை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

குர்ஆன் கூறும் அரசியல் சட்டங்களை இந்தியாவில் நடைமுறைப்படுத்த இயலுமா? என்றெல்லாம் யாராவது கேள்வி கேட்டால், இந்தியாவில் உள்ள சூழ்நிலையில் இதை நடைமுறைப்படுத்தாமலிருப்பதும் இஸ்லாத்தின் கட்டளைப்படியே எனக் கூறிட முடியும். இந்தச் சொற்றொடர் இன்னும் பல பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடியதாகும்.