26. பொருத்தமில்லாத வசன எண்கள்

திருக்குர்ஆனின் வசன எண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலோ, நபித்தோழர்களாலோ இடப்படவில்லை. பிற்காலத்தில் வந்தவர்கள் தான் எண்களிட்டனர். பல இடங்களில் ஏற்கத்தக்க வகையில் எண்கள் இட்டாலும், சில இடங்களில் பொருத்தமில்லாமலும் எண்கள் இட்டுள்ளனர்.

அதனால் தான் இது போன்ற வசனங்களை ஒன்றாக இணைத்துத் தமிழாக்கம் செய்துள்ளோம்.

உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் ஒவ்வொரு வசனம் முடிவுறும் போது அதன் இறுதியில் வசனத்தின் எண் குறிப்பிடப் படவில்லை. எந்தவொரு வசனத்தின் முடிவும் மூலப் பிரதியில் அடையாளமிடப்படவில்லை.

எனவே தான் வசனங்களை எண்ணும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எண்ணிக்கையைக் கூறுகிறார்கள். எண்ணிக்கை எத்தனை என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும் எந்த எண்ணிக்கையைக் கூறினாலும் குர்ஆனில் எதுவும் அதிகரிப்பதோ, குறைவதோ இல்லை.

ஒருவர் இரண்டு வசனங்களை ஒரு வசனமாகக் கருதுவார்; இன்னொருவர் ஒரு வசனத்தை இரண்டு வசனங் களாகக் கருதுவார். எங்கே வசனத்தை முடிப்பது என்பதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தி வருகின்ற குர்ஆனில் இப்போது போடப்பட்டிருக்கின்ற எண்களை நாம் ஆய்வு செய்தால் எண்களிடுவதில் அறிஞர்களால் போதுமான கவனம் செலுத்தப் படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

சில இடங்களில் எழுவாயை ஒரு வசனமாகவும், பயனிலையை இன்னொரு வசனமாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டையும் சேர்த்து ஒரு வசனமாகக் கூறும் போது தான் அதனுடைய பொருள் முழுமை பெறும்.

சில இடங்களில், ஒரு கருத்து ஒரு வசனமாகவும், அந்தக் கருத்திலிருந்து விதிவிலக்கு இன்னொரு வசனமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டையும் சேர்த்து ஒரு எண்ணாக அவர்கள் அமைத்திருந்தால் அதைப் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்கும்.

உதாரணத்திற்காகச் சில வசனங்களை நாம் காண்போம்.

நான்காவது அத்தியாயத்தில் 168, 169 ஆகிய இரு வசனங்களை எடுத்துக் கொள்வோம்.

இதில் "அவர்களுக்கு வழி காட்ட மாட்டான்" என்பது 168வது வசனத்திலும், "நரகத்தின் வழியைத் தவிர" என்பது 169வது வசனத்திலும் உள்ளது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு வாக்கியம் என்பதை யாரும் விளங்க முடியும். ஆனாலும் இதை இரண்டு வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.

7வது அத்தியாயத்தின் 121, 122 ஆகிய வசனங்களை எடுத்துக் கொண்டால், 121-ல் "நாங்கள் அகிலத்தின் இறைவனை நம்பினோம் எனக் கூறினார்கள்" என்றும் 122-ல் "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய" என்றும் உள்ளது.

"மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய" என்பதில் எந்தவொரு கருத்தும் முழுமை பெறவே இல்லை. "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நாங்கள் நம்பினோம்" என்று சொன்னால் தான் வாக்கியம் முழுமை பெறுகிறது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு வாக்கியம் என்பதை யாரும் விளங்க முடியும். ஆனாலும் ஒரு வசனமாக இருக்கத் தகுந்த இதையும் இரண்டு வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.

இதே போல் 11வது அத்தியாயத்தில் 96, 97 வசனங்களை எடுத்துக் கொண்டால் 96வது வசனத்தில் "மூஸாவைத் தகுந்த சான்றுகளோடு அனுப்பினோம்" என்று இருக்கிறது. 97வது வசனத்திலே "ஃபிர்அவ்னிடம்" என்று இருக்கிறது.

"ஃபிர்அவ்னிடம்" என்பது இந்த 96 வசனத்துடன் இணைய வேண்டிய சொல். ஆனாலும் ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும் என்பதை தனியாகப் பிரித்ததால் அதற்குப் பொருள் இல்லாமல் போய் விடுகிறது.

இப்படி ஏராளமான வாக்கியங்களைக் கருத்து முழுமை பெறாத வகையில் வசனங்களாகப் பிரித்திருப்பதை நாம் பார்க்கிறோம். சில இடங்களில் ஒரு வாக்கியத்தை நான்கு, ஐந்து வசனங்களாகக் கூட பிரித்து வைத்திருக்கிறார்கள். கருத்து முழுமை பெறாத ஒரே ஒரு சொல்லைக் கூட ஒரு வசனம் என்று சில இடங்களில் கணக்கிட்டிருக்கிறார்கள்.

வசனங்களைப் பிரிப்பதென்றால் அதற்கு இரண்டு அளவு கோல்கள் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதும் போது எந்த இடத்தில் நிறுத்தினார்களோ அந்த இடத்தை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தால் அது ஏற்கத் தக்கதாக இருக்கும். அல்லது ஒரு கருத்து எந்த இடத்தில் முழுமை பெறுகிறதோ அதை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தால் அது அறிவுப்பூர்வமானதாக இருந்திருக்கும். ஆனால் இந்த இரண்டு அளவு கோலின் அடிப்படையில் வசனங் களுக்கு எண்கள் இடப்படவில்லை.

மாறாக ஒவ்வொரு வசனத்தையும் குறிப்பிட்ட ஒரு எழுத்தைக் கொண்டு முடிக்க வேண்டும் என்பதைத் தான் வசனங்களைப் பிரிப்பதற்கு அளவு கோலாகக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக "யஃலமூன்" "தஃலமூன்" "யஃப்அலூன்" இப்படி வருகிறதா என்பதைப் பார்த்து அந்த இடங்களில் வசனங்களை முடித்தார்கள்.

ஆனால் உண்மையிலேயே அவர்கள் கருத்தைத் தான் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

எனவே முழுமை பெறாத அந்த வசனங்களை எல்லாம் சேர்த்து தமிழாக்கம் செய்து தேவையற்ற அடைப்புக் குறிகள் வருவதைத் தவிர்த்திருக்கிறோம்.

(இது பற்றி மேலும் விபரம் அறிய முன்னுரையில் இடம் பெற்றுள்ள "திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" என்ற தலைப்பில் காண்க!)