232. துரோகம் செய்யவில்லை' என்று கூறியது யார்?

12:51 வசனத்தில் கூறப்படுவது அஜீஸின் மனைவியுடைய கூற்று என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. தொடர்ந்து வருகின்ற இரு வசனங்கள் யாருடைய கூற்று என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

சிலர் அஜீஸின் மனைவியுடைய கூற்றுத் தான் என்று கூறுகின்றனர். ஆனால் இவ்வசனங்களில் இடம் பெற்றுள்ள சொற்கள் இது அவருடைய கூற்றாக இருக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

"அவர் மறைவாக இருக்கும் போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காக" என்ற சொற்றொடர் 52வது வசனத்தில் இடம் பெற்றிருக்கிறது. இதை நிச்சயமாக அஜீஸின் மனைவி கூறியிருக்கவே முடியாது.

ஏனென்றால் அவர் துரோகம் செய்திருக்கிறார். தான் செய்த தவறை முந்தைய வசனத்தில் ஒப்புக் கொண்டும் இருக்கிறார். "நான் தான் தவறு செய்திருக்கிறேன், இவர் உண்மை சொல்கிறார்" என்று கூறிவிட்டு, நான் எந்தத் துரோகமும் செய்யவில்லை என்றும் கூறுவாரானால் முதலில் கூறியதற்கு முரணாக ஆகிவிடும். எனவே "மறைவில் துரோகம் செய்யவில்லை" என்று கூறுவதற்கு யூஸுஃப் தான் தகுதி படைத்தவர்.

52 வது வசனம் யூஸுஃபுடைய கூற்று என்றால் அதற்கடுத்த (12:53) வசனமும் அவரது கூற்றாகத் தான் இருக்க முடியும். இதை அஜீஸின் மனைவியின் கூற்று என்று கூறுவது தவறு என்பதை 52வது வசனத்தைக் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.