272. இறைவன் அனுமதித்ததை தடை செய்யக் கூடாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியின் திருப்தியை நாடி ஒரு பொருளை விலக்கிக் கொண்டதாக இவ்வசனத்தில் (66:1) கூறப்படுகிறது.

இது பாவமான காரியம் என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) விலக்கிக் கொள்ளவில்லை. மாறாக, தம் அளவில் இதைச் சாப்பிடு வதில்லை என்று முடிவு செய்தார்கள்.

ஒருவர் தமக்குப் பிடிக்காத உணவை விலக்கிக் கொண்டால் அது மார்க்கத்தில் குற்றமில்லை. ஆயினும் பிடித்த உணவை ஏதேனும் ஒரு காரணத்திற்காக தனக்குத் தானே தடை செய்து கொண்டால் அது குற்றமாகும். ஏனெனில் அல்லாஹ் அனுமதித்ததைத் தடை செய்யும் அம்சம் இதில் அடங்கியுள்ளது.

இந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் இவ்வசனத்தின் மூலம் கண்டிக்கிறான்.

இதைப் பற்றி அதிக விபரத்தை 186வது குறிப்பில் காணலாம்.