இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் பய்யினா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆனது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
98:1. (ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும்27 இணை கற்பிப்போரும் தெளிவான சான்று தம்மிடம் வரும் வரை தவறில் நீடித்துக் கொண்டே இருந்தனர்.
98:2. இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளை461 ஓதுகிறார்.
98:3. அதில் நேரான சட்டங்கள் உள்ளன.
98:4. வேதம் கொடுக்கப்பட்டோர்27 தமக்குத் தெளிவான சான்று வந்த பின்பே தவிர பிளவுபடவில்லை.
98:5. வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டு மாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
98:6. (ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும்27 இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.
98:7. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
98:8. அவர்களது இறைவனிடம் அவர்களின் கூலி சொர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது.