17. பரிந்துரை பயன் தருமா?

மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன.

1. அறவே பரிந்துரை கிடையாது.

2. நல்லடியார்களும், நபிமார்களும் தாம் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்.

3. நிபந்தனையுடன் கூடிய பரிந்துரை உண்டு.

இம்மூன்று கருத்துக்களில் முதல் இரண்டு கருத்துக்களும் குர்ஆனைப் பற்றிப் போதிய அறிவு இல்லாதவர்களின் கருத்தாகும்.

பரிந்துரை இல்லை என்ற கருத்தில் உள்ள வசனங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பரிந்துரையை அடியோடு மறுப்பவர்கள், பரிந்துரை பற்றிய அனைத்து வசனங்களையும் பார்ப்பதில்லை.

பரிந்துரை பற்றிக் கூறும் சில வசனங்களை ஆழமான பார்வை யில்லாமல் பார்ப்பதால் இரண்டாம் கருத்துக்குச் சிலர் வந்துள்ளனர்.

எனவே இரண்டும் தவறாகும்.

திருக்குர்ஆன் 2:48, 2:123, 2:254, 6:51, 6:70, 6:94, 26:100, 32:4, 36:23, 39:43,44, 74:48 ஆகிய வசனங்களை மட்டும் காண்பவர்கள் மறுமையில் பரிந்துரை என்பதே இல்லை எனவும், பரிந்துரை பயன் தராது எனவும் கூறுகின்றனர்.

அவன் அனுமதியின்றி யார் பரிந்து ரைக்க முடியும்? (திருக்குர்ஆன் 2:255)

அவன் அனுமதி பெறாமல் எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. (திருக்குர்ஆன் 10:3)

ஆகிய வசனங்களில் இறைவனிடம் அனுமதி பெறாமல் பரிந்துரை செய்ய முடியாது என்பதை அறியலாம். இறைவன் இதற்கு அனுமதியளிக்க மாட்டான் என்றால் இவ்வாறு கூற மாட்டான்.

அவன் பொருந்திக் கொண்டவர்களுக்கே தவிர அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். (திருக்குர்ஆன் 21:28)

ரஹ்மானிடம் உடன்படிக்கை எடுத்தவர் தவிர மற்றவர்கள் பரிந்துரைக்கு உரிமையாளர் அல்லர். (திருக்குர்ஆன் 19:87)

அவன் யாருக்கு அனுமதி அளிக்கின்றானோ அவருக்கே தவிர மற்றவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது. (திருக்குர்ஆன் 20:109)

அவன் யாருக்கு அனுமதி அளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது. (திருக்குர்ஆன் 34:23)

சத்தியத்துக்குச் சாட்சி கூறியவர்கள் தவிர மற்றவர்கள் பரிந்துரைக்கு உரிமையாளராக மாட்டார்கள். (திருக்குர்ஆன் 43:86)

தான் நாடியவருக்கு அல்லாஹ் அனுமதியளித்த பின்பே தவிர அவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது. (திருக்குர்ஆன் 53:26)

சிலருக்குப் பரிந்துரை செய்ய அனுமதியளிக்கப்படும் என்பதையும், அந்தப் பரிந்துரை பயன் தரும் என்பதையும் இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

குர்ஆனைப் பற்றி போதிய அறிவு இல்லாத ஒரு சிறு கூட்டத்தினர் மறுமையில் பரிந்துரை இல்லை எனக் கூறுகின்றனர். அது தவறு என்பதற்கு இவ்வசனங்கள் போதிய சான்றாகும்.

எவரது பரிந்துரையும் இன்றி நல்ல மதிப்பெண் பெற்று எடுத்த எடுப்பிலேயே சொர்க்கம் செல்லத் தான் ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும். அதைத் தான் இறைவனிடம் கேட்க வேண்டும்.

"இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையைத் தா!" என்று கேட்பது தவறாகும்.

"என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும் கூறினார்கள்.

மறுமையில் அல்லாஹ் யாருக்கு அனுமதியளிப்பான் என்பது யாருக்கும் தெரியாது. எனவே "மகானே! எனக்கு மறுமையில் பரிந்துரை செய்யுங்கள்" என்று இங்கே வாழும் போது கேட்கக் கூடாது. அது அல்லாஹ்வின் அதிகாரத் தில் தலையிடுவதாக அமையும்.

மக்காவில் வாழ்ந்தவர்கள் இவ்வாறு பரிந்துரை வேண்டிய காரணத்தினால் தான் இணைவைப்போர் ஆனார்கள். (பார்க்க திருக்குர்ஆன் 10:18)

யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் என்பதையும் அல்லாஹ் தான் தீர்மானிப்பான் என்பதால் பரிந்துரையை யாரிடமும் வேண்டக் கூடாது.

அல்லாஹ்வே நம்மை மன்னிக்க முடிவெடுக்கும் போது ஒருவரை அழைத்து "இவருக்குப் பரிந்துரை செய்" என்பான். பெயரளவில் தான் இது பரிந்துரையே தவிர தீர்மானம் அல்லாஹ்விடத்தில் மட்டுமே உள்ளது.

(பார்க்க புகாரி: 99, 335, 448, 3340, 4476, 4712, 6304, 6305, 6565, 6566, 6570, 7410, 7440, 7474, 7509, 7510)