123. முரண்பாடில்லாத திருக்குர்ஆன்

மனிதன் எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும் அவன் கூறியதை அவனே மறந்து முரண்பாடாகக் கூறி விடுவான். அல்லது தவறாகப் புரிந்து கொண்டு முதலில் ஒன்றைக் கூறி விட்டு பிறகு சரியாகப் புரிந்து கொண்டு வேறொன்றைக் கூறுவான்.

அவன் சந்திக்கின்ற பிரச்சனைகள், துன்பங்கள் போன்றவற்றால் ஏற்படும் மன இறுக்கம் காரணமாகவும் நேற்று கூறியதையே இன்று மறந்து முரண்பட்டுப் பேசி விடுவான்.

ஆனால் கடவுளுக்கு மறதியோ, அறியாமையோ, மன இறுக்கமோ ஏற்படாது என்பதால் கடவுளின் வார்த்தையில் முரண் இருக்காது.

அதுவும் திருக்குர்ஆன் ஒரே நேரத்தில் மொத்தமாக அருளப்படவில்லை. மாறாக 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்டதாகும்.

இதை முஹம்மது நபி சுயமாகக் கூறியிருந்தால் 23 ஆண்டுகளில் எத்தனையோ விஷயங்களில் முரண்பட்டுப் பேசியிருப்பார்கள். ஆனால் இதில் எந்த முரண்பாடும் இல்லை என்பதே திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு முக்கியமான சான்றாகவுள்ளது.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 4:82, 41:42)