42. தடை செய்யப்பட்ட உணவுகள்

நான்கு வகையான உணவுகள் தடை செய்யப்பட்டதாக இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:119, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது.

"அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை" என்று நாம் தமிழாக்கம் செய்துள்ள இடத்தில் அரபு மூலத்தில் "உஹில்ல" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சப்தமிடப்பட்டவை என்பது இதன் நேரடிப் பொருள்.

அன்றைய அரபுகள் தமது கடவுளின் பெயரைச் சப்தமிட்டுக் கூறி பிராணிகளை அறுத்து வந்ததால் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் கருத்து "அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை" என்பது தான். திருக்குர்ஆன் 5:3 வசனத்தில் இதே விஷயத்தைக் கூறும் போது "துபிஹ" (அறுக்கப்பட்டது) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தான் இங்கும் அறுக்கப்பட்டவை எனக் குறிப்பிட்டுள்ளோம்.

சிலைகள், சமாதிகள், மகான்கள் போன்றோருக்காக அறுக்கப்பட்டவையும் இதில் அடங்கும். அல்லாஹ்வின் பெயர் கூறிவிட்டு, "இந்த மகானுக்காக அறுக்கிறேன்" என ஒருவர் கூறினாலும் அதுவும் இதில் அடங்கும்.

இவ்வசனங்களில் கூறப்படும் நான்கு வகையான உணவுகளைத் தவிர வேறு எதுவும் தடை செய்யப்பட்டவை அல்ல என்ற கருத்தையே இவ்வசனங்கள் தருகின்றன.

இவற்றைத் தவிர நாய், நரி, கழுதை போன்றவற்றை உண்ணலாமா? என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்.

இஸ்லாமியச் சட்டங்கள் படிப்படியாகத் தான் மக்களுக்கு அருளப்பட்டன. ஒரு காலத்தில் எதுவுமே தடுக்கப்படாத நிலை இருந்தது. பின்னர் மேற்கண்ட நான்கு வகையான உணவுகள் மட்டும் தடுக்கப்பட்டன. இந்தக் கால கட்டத்தில் வேறு எதுவும் தடுக்கப்படவில்லை.

இதன் பின்னர் தூய்மையானவை அனைத்தும் அனுமதிக்கப்பட்டன; தூய்மையற்றவை அனைத்தும் தடை செய்யப்பட்டன.

தூய்மையற்றவை யாவை? என்பதை விளக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. திருக்குர்ஆன் 7:157, 9:29 வசனங்களில் இதைக் காணலாம்.

எனவே இந்த நான்கைத் தவிர எவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்களோ அவையும் தடை செய்யப்பட்டவையாகும்.

திருக்குர்ஆனில் தடை செய்யப்பட்ட இந்த நான்குடன் வேறு சில உயிரினங்களை உணவாக உட்கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். அந்தத் தடையும் இறைவன் புறத்திலிலிருந்து வந்த தடை தான். அதையும் நாம் விளங்கிக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும்.

உயிரினங்களில் எவற்றை உண்ணலாம்? எவற்றை உண்ணலாகாது? என்ற பிரச்சனை மிகவும் சிக்கலானதாக மக்கள் மத்தியில் கருதப்படுகிறது.

உண்மையில் இது மிகவும் எளிதான விஷயமாகும். சில அடிப்படைகளை மட்டும் நாம் அறிந்து கொண்டால் உயிர்ப் பிராணிகளில் எவற்றை உண்ணலாம்; எவற்றை உண்ணக் கூடாது என்பதை நாமாகவே அறிந்து கொள்ள இயலும்.

கடல் வாழ் உயிரினங்கள்

கடல் வாழ் உயிரினங்களில் தடை செய்யப்பட்டவை ஒன்று கூட இல்லை. கடல் வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஹலால் தான்.

நண்டு, சுறா, திமிங்கலம் ஆகியவற்றை உண்ணக் கூடாது என்று சில மார்க்க அறிஞர்கள் கூறுவதை ஏற்கத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறு கூறுவதற்கு குர்ஆனிலும், ஹதீஸிலும் எந்தச் சான்றும் இல்லை. அவர்களாகவே கற்பனை செய்து தான் கூறியுள்ளார்கள்.

கட-லில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 5:96)

பசுமையான மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காக அவன் தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (திருக்குர்ஆன் 16:14).

கடல் நீரில் செத்தவைகளும் கூட ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூற்கள்: திர்மிதீ 64, அபூதாவூத் 76, இப்னு மாஜா 380, நஸயீ 59, 330, 4275 அஹ்மத் 6935, 8380, 8557, 8737, 14481, 22017 முஅத்தா)

கடல் வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ணத் தடை செய்யப்பட்டிருந்தால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் கூற வேண்டும். வேறு எவருக்கும் தடை செய்யும் அதிகாரம் கிடையாது. அல்லாஹ்வும், அவனது தூதரும் கடல்வாழ் உயிரினங்களில் எந்த ஒன்றையும் உண்ணத் தகாதது என அறிவிக்கவில்லை.

ஆனால் மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் அனைத்தும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளன. கடல் வாழ் உயிரினங்களில் மனிதனுக்குக் கேடு விளைவிப்பவை இருந்தால் அவை மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை என்பதில் சந்தேகம் இல்லை.

பறவையினம்

பறவையினத்தின் பெயர்களைப் பட்டியல் போட்டு இவை ஹலால், இவை ஹராம் என்று குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படவில்லை. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பறவையினத்தில் எவை ஹராம் என்பதற்குப் பொதுவான அளவுகோலைத் தந்துள்ளனர்.

"மிக்லப்" உடைய ஒவ்வொரு பறவையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்பதற்குத் தடை செய்தார்கள். (நூல்கள்: முஸ்லிலிம் 3574, 3575 திர்மிதீ 1394, 1398, நஸயீ 4273, அபூதாவூத் 3309, 3311, 3312, இப்னுமாஜா 3225, அஹ்மத் 1189)

"மிக்லப்" என்ற சொல்லுக்கு நகம் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். பாய்ந்து பிடித்து வேட்டையாடுவதற்குரிய நகங்கள் என்பது தான் இதன் சரியான பொருளாகும். ஏனைய உயிரினங்களை வேட்டையாடுவதற்குப் பயன்படும் நகங்கள் எந்தப் பறவை களுக்கு உள்ளனவோ அவை உண்ணத் தடை செய்யப்பட்டவையாகும்.

கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பறவைகள் ஏனைய உயிரினங்களைத் தமது நகங்களால் வேட்டையாடு கின்றன. இவை போன்ற பறவையினங்களை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கோழி போன்ற பறவையினங்களுக்கு கூரிய நகங்கள் இருந்தாலும் அவை செத்தவற்றை உண்ணும் போது தான் துணைக்கு நகங்களைப் பயன்படுத்துகின்றன. உயிரினத்தை (புழு பூச்சிகளை) வேட்டையாட தமது வாயையே பயன்படுத்துகின்றன.

எனவே ஏனைய உயிரினங்களை வேட்டையாட நகங்களைப் பயன்படுத்தும் பறவைகள் தவிர மற்ற அனைத்துப் பறவைகளும் உண்ண அனுமதிக்கப்பட்டவையாகும்.

விலங்கினங்கள்

விலங்கினங்களைப் பொறுத்தவரை பன்றி ஹராம் எனக் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுக் கழுதை ஹராம் என்று புகாரி 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, 5527, 5528 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

புகாரி 4215வது ஹதீஸில் வீட்டுக் கழுதை ஹராம் எனவும், குதிரை ஹலால் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர மற்ற விலங்கினங்களைப் பற்றி எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவான அளவுகோலைத் தந்துள்ளனர்.

விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல்: புகாரி 5781, 5530)

மேல் பகுதியில் அமைந்துள்ள பற்களில் வலப்பக்கம் ஒரு பல்லும், இடப்பக்கம் ஒரு பல்லும் மற்ற பற்களை விட அதிக நீளமாக இருக்கும்.

இந்தக் கோரைப் பல் எவற்றுக்கு உள்ளதோ அவற்றை நாம் உண்ணக் கூடாது.

இந்த அளவுகோலை விளங்கிக் கொண்டால் எவற்றை உண்ணலாம் என்பது எளிதில் விளங்கி விடும். கழுதையைப் பொறுத்த வரை அதன் பற்கள் வரிசையாக இருந்தாலும் அதைக் குறிப்பிட்டு ஹராமாக்கி விட்டதால் கழுதைக்கு இந்த அளவு கோலைப் பொருத்தக் கூடாது.

புழு, பூச்சியினங்களைத் தடை செய்யும் விதமாக எந்த ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை. எந்த ஒரு ஹதீஸும் இல்லை. மாறாக பூச்சியினத்தைச் சேர்ந்த வெட்டுக் கிளியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களின் முன்னிலையில் நபித் தோழர்கள் சாப்பிட்டுள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து வெட்டுக் கிளியைச் சாப்பிட்டுக் கொண்டு ஆறு ஏழு யுத்தங்கள் செய்துள்ளோம். (நூல்: புகாரி 5495)

கடல் வாழ் பிராணிகளிலோ, புழு பூச்சியினத்திலோ எத்தனையோ விஷ ஜந்துக்கள் உள்ளன. அவற்றைச் சாப்பிட்டு விட்டு மனிதன் சாக வேண்டுமா என்று சிலர் நினைக்கலாம்.

உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள். (திருக்குர்ஆன் 2:195)

உங்களை நீங்களே சாகடித்துக் கொள்ளாதீர்கள். (திருக்குர்ஆன் 4:29)

என்று அல்லாஹ் கூறுவதால் கேடு விளைவிக்கும் அனைத்தும் ஹராம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தாவரத்தைச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும் என்றால் அதை உண்பது ஹராம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாம்பு, பல்லிலி, கடல் வாழ் விஷ ஜந்துக்கள் ஆகியவை இந்த அளவு கோலுக்குள் அடங்கும்.

இது உயிரினங்களுக்கு மட்டுமின்றி தாவரத்துக்கும், தானியத்துக்கும், ஏனைய உணவு வகைகளுக்கும் பொதுவானதாகும்.

உயிரினங்களில் தடை செய்யப்பட்டவை இவை மட்டுமே. இவை தவிர மற்ற எல்லா உயிரினங்களும் மனிதர்கள் உண்ண அனுமதிக்கப்பட்டவையாகும்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவைகளில் சில நமக்கு அருவருப்பாக இருக்கலாம். அப்படி இருந்தால் அதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடும்புக் கறியை விரும்ப மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் முன்னே மற்றவர்கள் அதைச் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை. (நூல்: புகாரி 2575, 5391, 5400, 5402, 5536, 5537, 7267)

நிர்பந்தத்திற்கு ஆளானவர்கள் தடை செய்யப்பட்ட உணவுகளை உண்ணலாம் என்றும் இவ்வசனங்கள் கூறுகின்றன. இது பற்றி 431வது குறிப்பில் விளக்கம் காணலாம்.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:173, 5:3, 6:119, 6:145, 16:115).