234. நபிகள் நாயகத்துக்கு மறைவானவை தெரியுமா?
இவ்வசனங்களில் (72:26-28) இறைவன் தனது மறைவான விஷயங்களை, தான் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான் என்று கூறப்படுகின்றது.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான அனைத்து விஷயங்களும் தெரியும்; அவர்களுக்குத் தெரியாத மறைவான விஷயங்களே கிடையாது"" என்று கூறுபவர்கள் இவ்வசனங்களைத் தமக்குரிய சான்றாகக் கருதுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியாது என்று தெளிவாகக் கூறும் 6:50, 7:188, 11:31 போன்ற பல்வேறு வசனங்களைப் புறக்கணித்து விட்டு, இவ்வசனங்களைத் தவறாக விளங்கிக் கொள்கின்றனர்.
இவர்களின் வாதத்திற்கு இவ் வசனத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. ஏனெனில், இவ்வசனத்தில் எந்த மறைவான விஷயங்கள் அனைத்து முஸ்லிம்களுக்கும் சொல்லப்பட வேண்டுமோ அந்த மறைவான விஷயங்களை, தான் பொருந்திக் கொண்ட தூதர் வழியாக அறிவிப்பான் என்றே கூறப்பட்டுள்ளது.
அந்த மறைவான விஷயங்களை மக்களுக்குச் சரியாக அந்தத் தூதர்கள் சொல்லி விட்டார்களா என்பதைக் கண்காணிக்க அவர்களுக்கு முன்னும் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்தி இருப்பதாகவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.
எனவே மறுமை, சொர்க்கம், நரகம், மண்ணறை வாழ்வு போன்ற முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டிய மறைவான செய்திகளை மக்களுக்குச் சொல்வதற்காகத் தூதர்களுக்கு இறைவன் அறிவித்துக் கொடுப்பானே தவிர, இறைவனுக்குத் தெரியும் அனைத்து மறைவான செய்திகளையும் தூதர்களுக்கு அறிவித்துக் கொடுக்க மாட்டான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவான விஷயங்களை அவர்கள் கூட்டாமல் குறைக்காமல் அப்படியே நமக்கும் சொல்லிச் சென்று விட்டதால் அவர்களுக்குத் தெரிந்த மறைவான செய்திகள் அனைத்தும் நமக்கும் தெரிந்ததாகி விடுகின்றன.
இந்தக் கருத்துக்களெல்லாம் இவ்வசனங்களுக்கு உள்ளேயே அடங்கியிருந்தும், இல்லாத கருத்தை இவர்கள் வலிந்து திணிக்கிறார்கள். இவர்களின் வாதத்திற்கு இந்த வசனங்களில் எந்த ஆதாரமும் இல்லை.
மேலும் விபரத்திற்கு இதே பகுதியில் 104வது குறிப்பைக் காண்க!