384. அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல்
இஸ்லாத்தை ஒரு மனிதன் நம்பி ஏற்றுக் கொண்டால் எது வரை அது ஏற்கப்படும் என்ற எல்லை இவ் வசனத்தில் (6:158) விளக்கப்படுகிறது.
இறைவன் வரும் வரை அல்லது வானவர்கள் வரும் வரை என்பது, அல்லாஹ்வின் வேதனை இறங்கும் போது எனப் பொருள்படும்.
ஒரு சமுதாயம் தொடர்ந்து புரியும் அக்கிரமத்திற்காக இறைவனின் தண்டனை அவர்கள் மீது இறங்கும் போது "இப்போது நம்பிக்கை கொள்கிறோம்" எனக் கூறினால் அந்த நம்பிக்கை சிறிதளவும் பயனளிக்காது.
இதன் காரணமாகத் தான் ஃபிர்அவ்ன் கொண்ட நம்பிக்கை அவனுக்குப் பயனளிக்காமல் போனது. ஏனெனில் அழிந்து கொண்டிருக்கும் போது தான் நம்பிக்கை கொண்டதாக அவன் கூறினான். (திருக்குர்ஆன் 10:91)
மேலும் மற்றொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை கொள்வது பயன் தராமல் போகும்.
"அல்லாஹ்வின் சில அத்தாட்சிகள் வரும் நாளில்" என்பது அந்தச் சந்தர்ப் பங்களையே கூறுகிறது. அல்லாஹ்வின் சில அத்தாட்சிகள் என்பது என்ன? அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் வரை யுக முடிவு நாள் வராது. அவ்வாறு உதிக்கும் போது யாரேனும் நம்பிக்கை கொண்டால் அந்த நம்பிக்கை பயன் தராது. அதைத் தான் இவ்வசனத்தில் (6:158) அல்லாஹ் கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கியுள்ளனர். (புகாரி 6506, 6535, 7121)