அரபு மொழியின் 14 வது எழுத்து

மொத்த வசனங்கள் : 88

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஸாத் என்ற எழுத்து இடம் பெற்றுள்ளதால் இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
38:1. ஸாத்2. அறிவுரை அடங்கிய இக்குர்ஆன் மீது ஆணையாக!
38:2. (ஏக இறைவனை) மறுத்தோர் கர்வத்திலும், முரண்பாட்டிலும் உள்ளனர்.
38:3. இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம். அப்போது அவர்கள் கூப்பாடு போட்டனர். அது தப்பிக்கும் நேரமாக இல்லை.
38:4. அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். "இவர் பொய்யர்; சூனியக்காரர்" என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர்.
38:5. "கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்தி தான்."
38:6. "(இவரை விட்டும்) சென்று விடுங்கள்! உங்கள் கடவுள்கள் விஷயத்தில் உறுதியாக இருங்கள்! இது ஏதோ எதிர்பார்ப்பில் கூறப்படும் விஷயமாக உள்ளது" என்று அவர்களில் பிரமுகர்கள் கூறினர்.
38:7. "இதை வேறு மார்க்கத்தில் நாம் கேள்விப்பட்டதில்லை. இது கட்டுக்கதை தவிர வேறில்லை."
38:8. "நமக்கிடையே இவர் மீது (மட்டும்) அறிவுரை அருளப்பட்டு விட்டதா?" (என்றும் கேட்கின்றனர்.) மாறாக எனது அறிவுரையில் சந்தேகத்தில் உள்ளனர். இவர்கள் எனது வேதனையைச் சுவைத்துப் பார்த்ததில்லை.
38:9. மிகைத்தவனும், வள்ளலுமாகிய உமது இறைவனது அருட்கொடையின் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா?
38:10. அல்லது வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் ஆட்சி அவர்களுக்கு உள்ளதா? அப்படியாயின் ஏணிகளில் ஏறிச் செல்லட்டும்.
38:11. இங்கிருக்கும் இந்த அற்பப் படை தோற்கடிக்கப்படும் படை.
38:12, 13. இவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயம், ஆது சமுதாயம், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்ன், ஸமூது சமுதாயம், லூத்துடைய சமுதாயம், (மத்யன்) தோப்பு வாசிகள் ஆகியோரும் பொய் யெனக் கருதினர். அவர்களே (தோற்கடிக்கப்பட்ட) அந்தச் சமுதாயத்தினர்.26
38:14. (அவர்களில்) ஒவ்வொருவரும் தூதர்களைப் பொய்யரெனக் கருதாமல் இருந்ததில்லை. எனவே எனது வேதனைக்கு உரித்தானார்கள்.
38:15. ஒரே ஒரு பெரும் சப்தத்தைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதற்கு எந்தத் தாமதமும் இல்லை.
38:16. "எங்கள் இறைவா! விசாரிக்கப்படும் நாளுக்கு முன்பே எங்கள் பங்கை (இவ்வுலகில்) விரைந்து வழங்கி விடு" என்று கேட்கின்றனர்.
38:17. (முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! பலம் பொருந்திய நமது அடியார் தாவூதை நினைவூட்டுவீராக! அவர் (நம்மிடம்) திரும்புபவராக இருந்தார்.
38:18, 19. மாலையிலும், காலையிலும் மலைகளும், ஒன்று திரட்டப்பட்ட பறவைகளும் அவருடன் இறைவனைத் துதிக்கு மாறு நாம் வசப்படுத்திக் கொடுத்தோம். ஒவ்வொன்றும் அவனை நோக்கித் திரும்பக் கூடியவையாக இருந்தன.26
38:20. அவரது ஆட்சியைப் பலப்படுத்தினோம். அவருக்கு ஞானத்தையும், தெளிவான விளக்கத்தையும் கொடுத்தோம்.
38:21, 22. வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா? தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். "பயப்படாதீர்!" நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! தவறிழைத்து விடாதீர்! நேரான வழியில் எங்களை நடத்துவீராக!" என்று அவர்கள் கூறினர்.26
38:23. "இவர் எனது சகோதரர். இவருக்கு தொண்ணூற்று ஒன்பது ஆடுகள் உள்ளன. எனக்கோ ஒரே ஒரு ஆடு தான் உள்ளது. அதையும் என் பொறுப்பில் விடு என்று இவர் கூறுகிறார். வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்" என்று ஒருவர் கூறினார்.
38:24. "உமது ஆட்டைத் தனது ஆடுகளுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அநீதி இழைத்து விட்டார். உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர. அவர்கள் மிகவும் குறைவு தான்" என்று தாவூத் கூறினார். அவரைச் சோதித்தோம்484 என்பதை தாவூத் விளங்கிக் கொண்டார். தமது இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். பணிந்து விழுந்தார். திருந்தினார்.337 & 396
38:25. எனவே அதை அவருக்கு மன்னித்தோம். அவருக்கு நம்மிடத்தில் நெருக்கமும், அழகிய தங்குமிடமும் உள்ளது.
38:26. தாவூதே! உம்மைப் பூமியில் வழித் தோன்றலாக46 நாம் ஆக்கினோம். எனவே மக்கள் மத்தியில் நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! மனோ இச்சையைப் பின்பற்றாதீர்! அது அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழி கெடுத்து விடும். அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுப்போர் விசாரணை நாளை1 மறந்ததால் அவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு.
38:27. வானத்தையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது.
38:28. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைப் பூமியில் குழப்பம் செய்வோரைப் போல் ஆக்குவோமா? அல்லது (நம்மை) அஞ்சுவோரைக் குற்றம் புரிந்தோரைப் போல் ஆக்குவோமா?
38:29. இது பாக்கியமான வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு அருளினோம்.
38:30. தாவூதுக்கு ஸுலைமானை அன்பளிப்பாக வழங்கினோம். அவர் நல்லடியார். (இறைவனிடம்) திரும்புபவர்.
38:31, 32. பயிற்சி பெற்ற உயர்ந்த ரக குதிரைகள் அவர் முன்னே மாலை நேரத்தில் நிறுத்தப்பட்டு, முடிவில் அவை திரைக்குப் பின் மறைந்த போது "எனது இறைவனை நினைக்காமல் இந்த நல்ல பொருளை விரும்பி விட்டேன்" எனக் கூறினார்.26
38:33. அவற்றை என்னிடம் மீண்டும் கொண்டு வாருங்கள்! (எனக் கூறி) அவற்றின் கால்களையும், கழுத்துக்களையும் தடவிக் கொடுத்தார்.
38:34. ஸுலைமானை நாம் சோதித்தோம்.484 அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம். பின்னர் அவர் திருந்தினார்.338
38:35. "என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்" எனக் கூறினார்.
38:36. அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.
38:37, 38. ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம்.26
38:39. "இது நமது அருட்கொடை! கணக்கின்றி மற்றவருக்குக் கொடுக்கலாம்! அல்லது நீரே வைத்துக் கொள்ளலாம்!" (என்று கூறினோம்.)
38:40. அவருக்கு நம்மிடம் நெருக்கமும், அழகிய தங்குமிடமும் உள்ளது.
38:41, 42. நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! "ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்" என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, "உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!" (எனக் கூறினோம்).26
38:43. அவருக்கு அவரது குடும்பத்தின ரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் வழங்கினோம். இது நம்மிடமிருந்து கிடைக்கப் பெறும் அருளும், அறிவுடையோருக்கு அறிவுரையுமாகும்.
38:44. உமது கையால் புல்லில் ஒரு பிடியை எடுத்து அதன் மூலம் அடிப்பீராக! சத்தியத்தை முறிக்காதீர்!339 (என்றோம்.) நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் நல்லடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.
38:45. வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக!
38:46. மறு உலகை நினைப்பதற்காக அவர்களைச் சிறப்பாக நாம் தேர்வு செய்தோம்.
38:47. அவர்கள் நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்தவர்கள்.
38:48. இஸ்மாயீல், அல்யஸஃ, துல்கிஃப்ல் ஆகியோரையும் நினைவூட்டுவீராக! அனைவரும் சிறந்தோராக இருந்தனர்.
38:49, 50. இது அறிவுரை! (இறைவனை) அஞ்சுவோருக்கு வாயில்கள் திறக்கப்பட்ட நிலையான சொர்க்கச் சோலைகளான சிறந்த தங்குமிடம் உள்ளது.26
38:51. அதில் சாய்ந்து கொண்டு அதிகமான கனிகளையும், பானத்தையும் கேட்பார்கள்.
38:52. ஒத்த வயதுடைய பார்வைகளைத் தாழ்த்திய கன்னியரும்8 அவர்களுக்கு உள்ளனர்.
38:53. விசாரணை நாளுக்காக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது இதுவே.
38:54. இது நமது செல்வம். இதற்கு முடிவே கிடையாது.
38:55. இதோ! வரம்பு மீறியோருக்குக் கெட்ட தங்குமிடம் உள்ளது.
38:56. நரகத்தில் தான் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம்.
38:57. இதோ கொதி நீரும், சீழும் உள்ளது. இதை அவர்கள் சுவைக்கட்டும்.
38:58. இது போன்ற வேறு பல வகைகளும் உள்ளன.
38:59. "இது உங்களுடன் சேரும் கூட்டமாகும்" (என்று நரகத்தில் கிடக்கும் தலைவர்களிடம் கூறப்படும்.) "அவர்களுக்கு எந்த வரவேற்பும் இல்லை. அவர்களும் நரகில் கருகுபவர்கள் தானே" (என்று நரகத்தில் கிடக்கும் தலைவர்கள் கூறுவார்கள்)
38:60. "அவ்வாறில்லை! நீங்களும் தான்! உங்களுக்கும் வரவேற்பு இல்லை. இதற்கு எங்களைக் கொண்டு வந்தவர்களே நீங்கள் தான். இது கெட்ட தங்குமிடம்" என்று இவர்கள் கூறுவார்கள்.
38:61. "எங்கள் இறைவா! இதை எங்களுக்குக் கொண்டு வந்தோருக்கு நரகில் பன் மடங்கு வேதனையை அதிகமாக்குவாயாக!" என்றும் கூறுவார்கள்.
38:62. "தீயோர் என்று நாங்கள் கருதி வந்த மனிதர்களை (நரகில்) ஏன் காணாமல் இருக்கிறோம்?" என்று கேட்பார்கள்.
38:63. (அவர்கள் நல்லோராக இருந்தும்) அவர்களை ஏளனமாகக் கருதினோமா? அல்லது அவர்களை விட்டும் (நமது) பார்வைகள் சாய்ந்து விட்டனவா?
38:64. நரக வாசிகளின் இந்த வாய்ச் சண்டை உண்மை!
38:65. "நான் எச்சரிக்கை செய்பவனே. அடக்கியாளும் ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை" என்று (முஹம்மதே!) கூறுவீராக!
38:66. (அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன். மிகைத்தவன்; அதிகம் மன்னிப்பவன்.
38:67. "இது மகத்தான செய்தியாகும்" என்று கூறுவீராக!
38:68. இதை நீங்கள் புறக்கணிக்கின்றீர்கள்.
38:69. (வானவர்களான) மேலான கூட்டத் தார் விவாதம் செய்த போது அவர்களைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை.380
38:70. நான் தெளிவாக எச்சரிப்பவன் என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு அறிவிக்கப்படவில்லை.
38:71, 72, 73, 74. "களிமண்ணால் மனிதனைப் படைக்கப் போகிறேன்;368 அவரைச் சீர்படுத்தி எனது உயிரை அவரிடம் நான் ஊதும் போது அவருக்குப் பணிந்து விழுங்கள்!"11 என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது இப்லீஸைத் தவிர வானவர் அனைவரும் பணிந்தனர். அவன் அகந்தை கொண்டான். (ஏக இறைவனை) மறுப்போரில் ஆனான்.26
38:75. "எனது இரு கைகளால்488 நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?" என்று (இறைவன்) கேட்டான்.
38:76. "நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்" என்று அவன் கூறினான்.
38:77, 78. "இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள்1 வரை உன் மீது எனது சாபம் உள்ளது"6 என்று (இறைவன்) கூறினான்.26
38:79. "என் இறைவா! அவர்கள் உயிர்ப்பிக் கப்படும் நாள்1 வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!" என்று அவன் கேட்டான்.
38:80, 81. "அறியப்பட்ட நேரத்தை உள்ளடக் கிய நாள்1 வரை நீ அவகாசம் கொடுக்கப்பட்டவன்" என்று இறைவன் கூறினான்.26
38:82, 83. "உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர அவர்கள் அனைவரையும் வழி கெடுப்பேன்" என்று (ஷைத்தான்) கூறினான்.26
38:84. "இதுவே உண்மை. உண்மையையே கூறுகிறேன்" என்று (இறைவன்) கூறினான்.
38:85. உன்னையும், அவர்களில் உன்னைப் பின்பற்றியோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன் (என்று இறைவன் கூறினான்)
38:86. "இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. நான் சுயமாக உருவாக்கிக் கூறுபவனல்லன்" என்று (முஹம்மதே!) கூறுவீராக!
38:87. இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை.
38:88. சிறிது காலத்திற்குப் பின் இதனுடைய செய்தியை அறிந்து கொள்வீர்கள்!