29. இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள்

"ராஇனா" என்ற சொல் இரண்டு அர்த்தங்களுடைய சொல்லாகும். "எங்களைக் கவனித்து வழி நடத்துங்கள்" என்பது ஒரு பொருள். "எங்களின் ஆடு மேய்க்கும் இடையரே" என்பது மற்றொரு பொருள்.

யூதர்களில் நயவஞ்சகர்கள் இரண்டாவது அர்த்தத்தைத் தம் மனதுக்குள் நினைத்துக் கொண்டு "ராஇனா" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறி அற்ப திருப்திப்பட்டுக் கொண்டார்கள். முஸ்லிலிம்களோ முதல் அர்த்தத்தில் இதனைப் பயன்படுத்தி வந்தனர்.

எனவே தான் முதல் அர்த்தத்தை மட்டும் தரக் கூடிய "உன்ளுர்னா" என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பயன்படுத்துமாறு முஸ்லிம்களுக்குத் திருக்குர்ஆன் கட்டளையிட்டது.

அது போலவே "அதஃனா" என்ற சொல் "கட்டுப்பட்டோம்" என்ற ஒரு பொருளைக் கொண்ட சொல்லாக இருந்தாலும் "அதஃனா" என்று கூறுவது போல் பாவனை செய்து "அஸய்னா" என்று நயவஞ்சகர்கள் நபிகள் நாயகத்தை நோக்கிக் கூறி வந்தனர். இதன் பொருள் "மாறு செய்தோம்" என்பதாகும். இவர்களின் இந்தப் போக்கு தான் இவ்வசனங்களில் (2:104, 4:46) சுட்டிக்காட்டப்படுகிறது.