163. மக்கா வெற்றி பற்றிய முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த ஊரில் இருந்து சொந்த ஊர் மக்களால் விரட்டப்பட்டனர். அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களையும் விரட்டி அடித்தனர். இப்படி விரட்டி அடிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரும்பவும் தமது ஊருக்குள் வெற்றி வீரராக நுழைவார்கள் என்று கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருந்த போது நபிகள் நாயகம் மக்காவை வெற்றி கொண்டு உள்ளே நுழைவார்கள் என்பதைக் கனவின் மூலம் அல்லாஹ் காட்டினான். அந்தக் கனவில் கூறப்பட்டது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டார்கள். அதைத் தான் இவ்வசனம் சொல்லிக் காட்டுகிறது.
இவ்வசனத்தில் (48:27) கூறப்பட்டவாறு அந்த முன்னறிவிப்பு நிறைவேறியது.