235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று யஃகூப் நபி கூறியது ஏன்?

இவ்வசனங்களில் (12:67,68) ஒரு வாசல் வழியாக நீங்கள் நுழையாதீர்கள். பல வாசல் வழியாக நுழையுங்கள் என்று யஃகூப் நபியவர்கள் சொல்லியனுப்பியது, கண் திருஷ்டி பட்டுவிடக் கூடாது என்பதற்காக என்று சிலர் விளக்கம் கூறியுள்ளனர். இந்த விளக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய விளக்கம் அல்ல.

இவ்வசனத்தைப் பார்க்கும் போது, இது கண் திருஷ்டியைப் பற்றிக் கூறவில்லை என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியும்.

பொருள்கள் விநியோகிக்கப்படும் இடங்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஒன்று திரண்டு பெற முயற்சிக்கும் பொழுது மற்றவர்கள் அதை வெறுப்புடன் பார்க்கும் நிலைமை ஏற்படும். இது போன்ற நிலைமையைத் தவிர்ப்பதற்காகவே யஃகூப் நபி அவர்கள் ஒரு வாசல் வழியாக நீங்கள் செல்ல வேண்டாம். பிரிந்து பிரிந்து செல்லுங்கள் எனக் கூறியிருக்க வேண்டும்.

எதைத் தவிர்ப்பதற்காக யஃகூப் நபி அவர்கள் சொல்லி அனுப்பினார்களோ அதை அவர்களால் தவிர்க்க இயலவில்லை. அனைவரும் யூஸுஃபுடைய சகோதரர்கள் தான் என்ற உண்மை வெளிப்பட்டு விட்டது. எனவே இவ்வசனங்களுடன் கண் திருஷ்டியை தொடர்புபடுத்திக் கூறுவது ஏற்கத்தக்கதாக இல்லை.