373. பெயர் சூட்டச் சடங்குகள் இல்லை

மர்யம் (அலை) அர்களின் தாயார் தமது குழந்தையை இறைப் பணிக்காக அர்ப்பணம் செய்ய நேர்ச்சை செய்த போது ஆண் குழந்தை பிறக்கும் என்ற எண்ணத்தில் தான் நேர்ச்சை செய்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு மாற்றமாகப் பெண் குழந்தை பிறந்ததால் அதிர்ச்சியடைகிறார். "பெண் குழந்தை ஆண் குழந்தை போன்றதல்ல" என்று கூறுவதற்குப் பதிலாக "ஆண் குழந்தை பெண் குழந்தையைப் போன்றது அல்ல" என்று அவர் மாற்றிக் கூறுவதிலிலிருந்து அவர் எந்த அளவு அதிர்ச்சியடைந் திருந்தார் என்பதை ஊகம் செய்யலாம்.

மேலும் இவ்வசனத்தில் (3:36) இன்னொரு செய்தியையும் நாம் அறிந்து கொள்ளலாம். மர்யம் (அலை) பிறந்த போது அவ்வூரின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக ஸக்கரியா நபி திகழ்ந்தார்கள். அவர்கள் தாம் மர்யம் (அலை) அவர்களைப் பொறுப்பேற்று வளர்த்தவர்கள். அல்லாஹ்வின் தூதரும், முக்கியப் பிரமுகருமான ஸக்கரியா நபி அவ்வூரில் இருந்தும் தமது குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்காக ஸக்கரியா நபியை மர்யமின் தாயார் அழைக்கவில்லை. தாமே தமது குழந்தைக்குப் பெயர் சூட்டுகிறார்கள். பெயர் சூட்டுவதற்கு எந்தச் சடங்கும் இல்லை என்பதை இதிலிலிருந்து அறிந்து கொள்ளலாம்.