மார்க்க அறிஞர்களிடம் எந்த எதிர்க் கேள்வியும் கேட்கக் கூடாது என்று கூறுவோர் இவ்வசனத்தை (5:101) தமக்குச் சான்றாகக் காட்டுவார்கள்.

ஆனால் இவ்வசனம் இறைத்தூதரிடம் இறைச் செய்தி அருளப்படும் போது கேள்வி கேட்கக் கூடாது என்று தான் கூறுகிறது. ஏன் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்கான காரணமும் கூறப்படுகிறது.

என் தந்தை யார் என்று கூட சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். (நூல் புகாரி 4621, 4622)

இது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டால், இவர் யாரைத் தந்தை என நினைக்கிறாரோ அவர் அல்லாதவர் தந்தையாக இருந்து விட்டால் தேவையற்ற மனச் சங்கடத்தை அவர் சந்திப்பார்.

எனவே தான் இறைத்தூதரிடம் சில விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.

பொதுவாக அறிஞர்களிடம் கேள்வி கேட்பதை திருக்குர்ஆன் அதிக அளவில் ஊக்குவிக்கிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 16:43, 21:7)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதை கீழ்க்காணும் வசனங்களில் காணலாம்.

(திருக்குர்ஆன் 2:189, 2:215, 2:217, 2:219, 2:220, 2:222, 5:4, 8:1, 17:85, 18:83, 20:105, 33:63, 51:12, 70:1)

அதிக விளக்கத்திற்கு இதே பகுதியில் 31வது குறிப்பைக் காண்க!