மிக உயர்ந்தவன்

மொத்த வசனங்கள் : 19

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மிக உயர்ந்தவன் என்ற அடைமொழி இறைவனுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
87:1. மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
87:2. அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான்.
87:3. அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்.
87:4. அவனே மேய்ச்சலுக்குரியதை வெளிப்படுத்தினான்.
87:5. பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக்கினான்.
87:6, 7. (முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம்.152 & 312 நீர் மறக்க மாட்டீர்.220 அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான்.26
87:8. (முஹம்மதே!) எளியதை உமக்கு மேலும் எளிதாக்குவோம்.
87:9. அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக!
87:10. (இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான்.
87:11. துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக் கொள்வான்.
87:12. அவனே பெரும் நெருப்பில் கருகுவான்.
87:13. பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.
87:14. தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான்.
87:15. அவன், தனது இறைவனின் பெயரை நினைத்து தொழுதான்.
87:16. ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள்.
87:17. மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும்.
87:18, 19. இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது.26