72. அச்சமற்ற நிலையில் தொழுவது எப்படி?

திருக்குர்ஆன் 2:239 வசனத்தில் எதிரிகள் பற்றியோ, வேறு எதைப் பற்றியுமோ அச்சம் இருந்தால், நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழலாம் எனக் கூறப்படுவதை எளிதாக யாரும் விளங்கிக் கொள்ளலாம்.

அச்சம் தீர்ந்து விடுமானால் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவாறு அல்லாஹ்வை நினைவு கூருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் அச்சமில்லாத போது தொழும் முறை என்ன என்பது கூறப்படவே இல்லை. "ஆயினும் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் தந்தவாறு" என்று அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

அச்சமில்லாத சாதாரண நிலையில் எவ்வாறு தொழுவது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் கற்றுத் தந்ததைத் தான் அல்லாஹ், தான் கற்றுத் தந்ததாகக் கூறுகிறான்.

நபிகள் நாயகத்தின் விளக்கமும் இறைவன் புறத்தி-ருந்து பெறப்பட்டவை என்பதற்கும், குர்ஆனைப் போலவே நபிகள் நாயகத்தின் விளக்கமும் அவசியம் என்பதற்கும் இது சான்றாகவுள்ளது.