23. குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்?

மீன்பிடித் தொழில் செய்து வந்த முன்னர் வாழ்ந்த ஒரு சமுதாயத்துக்கு சனிக்கிழமை தோறும் மீன்பிடிக்கக் கூடாது என்று இறைவன் கட்டளை இட்டான். ஆனால் அவர்கள் இக்கட்டளையை மீறினார்கள். இதனால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர்.

மீன் பிடித்தது குரங்குகளாக மாற்றும் அளவுக்குப் பெரும் குற்றமா? என்று சந்தேகம் எழக் கூடும். இதற்கான விளக்கத்தை 146வது குறிப்பில் காணலாம்

இன்றைய குரங்குகளுக்கும், அவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ? என்று சிலர் நினைக்கலாம்.

யாரை அல்லாஹ் உருமாற்றி விட்டானோ அவர்களுக்குச் சந்ததிகளை ஏற்படுத்த மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூற்கள்: முஸ்லிம் 4814, 4815, அஹ்மத் 3517, 3910)

எனவே குரங்குகளாக மாற்றப்பட்ட அவர்கள் இனப்பெருக்கம் செய்யாமல் மரணித்து விட்டார்கள்.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:65, 5:60, 7:166.)