இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், ஆட்சி அவன் கையில் எனத் துவங்குவதால் இதற்கு அதிகாரம் என்று பெயரிடப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
67:1. எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
67:2. உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக484 மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
67:3. அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! எதேனும் குறையைக் காண்கிறீரா?
67:4. இரு தடவை பார்வையைச் செலுத்து!களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும்.
67:5. முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம்.307 அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
67:6. தமது இறைவனை மறுத்தோருக்கு நரகத்தின் "வேதனை உள்ளது". (அது) கெட்ட தங்குமிடம்.
67:7. அதில் அவர்கள் போடப்படும் போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கடும் இரைச்சலைச் செவியுறுவார்கள்.
67:8. கோபத்தால் அது வெடித்து விட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் "எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?" என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.
67:9. அதற்கவர்கள் "ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழி கேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம்" எனக் கூறுவார்கள்.
67:10. நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.
67:11. மேலும் தமது குற்றங்களை ஒப்புக் கொள்வார்கள். அப்போது நரகவாசிகளுக்குக் கேடு தான்.
67:12. தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.
67:13. உங்கள் கூற்றை இரகசியமாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்.
67:14. படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
67:15. அவனே பூமியை (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்! அவனது உணவை உண்ணுங்கள்! அவனிடமே மீளுதல் உள்ளது.
67:16. வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்.
67:17. அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அப்போது அறிந்து கொள்வீர்கள்.
67:18. அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். அப்போது எனது பதிலடி எவ்வாறு இருந்தது?
67:19. அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை.260 அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்488.
67:20. அளவற்ற அருளாளனையன்றி உங்களுக்கு உதவி செய்யும் உங்களுக்குரிய படையினர் உள்ளனரா? (அவனை) மறுப்போர் ஏமாற்றத்திலேயே உள்ளனர்.
67:21. அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா?463 மாறாக வரம்பு மீறுவதிலும், வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கி விட்டனர்.
67:22. முகம் குப்புற விழுந்து கிடப்பவன் நேர் வழி பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவனா?
67:23. அவனே உங்களைப் படைத்தான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள் என்று கூறுவீராக!
67:24. அவனே பூமியில் உங்களைப் பரவச் செய்தான். அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்றும் கூறுவீராக!
67:25. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த எச்சரிக்கை எப்போது?" எனக் கேட்கின்றனர்.
67:26. "அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே" என (முஹம்மதே) கூறுவீராக!
67:27. அதை அருகில் அவர்கள் பார்க்கும் போது (ஏக இறைவனை) மறுத்தோரின் முகங்கள் கெட்டு விடும். "நீங்கள் தேடிக் கொண்டிருந்தது இதுவே" எனக் கூறப்படும்.
67:28. "என்னையும், என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து (ஏக இறைவனை) மறுப்போரைக் காப்பவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்" என்றும் கூறுவீராக!
67:29. அவனே அளவற்ற அருளாளன். அவனை நம்பினோம். அவனையே சார்ந்திருக்கிறோம். தெளிவான வழி கேட்டில் உள்ளவர் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள்" எனக் கூறுவீராக!
67:30. "உங்கள் தண்ணீர் வற்றி விட்டால் ஊறி வரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!" எனக் கேட்பீராக!