50. நபிவழியும், மாற்றப்பட்ட நோன்பின் சட்டமும்
நோன்பு நோற்றிருப்பவர் பகலில் மட்டுமின்றி இரவிலும் தம்பத்யத்தில் ஈடுபடக் கூடாது என்ற சட்டம் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் இருந்தது. அது மாற்றப்பட்டு நோன்பாளிகள் இரவில் தாம்பத்தியத்தில் ஈடுபட இவ்வசனத்தின் (2:182) மூலம் அனுமதிக்கப்படுகிறது.
"குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து சட்டங்கள் வந்தன" என்ற கொள்கை விளக்கமும் இவ்வசனத்துக்குள் அடங்கியுள்ளது.
நோன்பாளிகள் இரவிலும் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று அல்லாஹ் தடை செய்தபோது அத்தடையை நபித்தோழர்களால் கடைப்பிடிக்க முடியவில்லை. அந்தத் தடையை அவர்கள் மீறினார்கள். மக்களின் பலவீனத்தைக் கருத்தில் கொண்டு அந்தத் தடையை அல்லாஹ் நீக்கி இப்போது முதல் இரவில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்று அனுமதி வழங்கினான் என்பது இவ்வசனத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
நோன்பு நோற்றிருக்கும் போது பகலிலும், இரவிலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்று ஒரு கட்டளை இருந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? அந்த ஆதாரம் இந்த வசனத்துக்குள்ளேயே அடங்கியுள்ளது.
அனுமதிக்கப்பட்ட ஒன்றைச் செய்யும் போது அதைத் துரோகம் எனக் கூற முடியாது. தடை செய்யப்பட்டிருந்த ஒரு செயலை அம்மக்கள் செய்திருந்தால் தான் அது துரோகம் எனச் சொல்ல முடியும். "நீங்கள் உங்களுக்கே துரோகம் செய்தீர்கள்" என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுவதால் இரவில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்தது என்பதை அறிய முடியும்
"எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான்" என்ற சொற்றொடரிலிருந்தும் இதை அறியலாம். தடை செய்யப்பட்டதைச் செய்தால் தான் மன்னிக்க முடியும். அனுமதிக்கப்பட்ட ஒன்றைச் செய்யும் போது மன்னிக்கும் பேச்சுக்கே அதில் இடமில்லை.
இரவில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்ததால் தான் "இப்போது முதல் குடும்ப வாழ்வில் ஈடுபடலாம்" எனக் கூறி தடையை அல்லாஹ் நீக்குகிறான்.
நோன்புக் காலத்தில் இரவில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற தடை இருந்ததையும், அந்தத் தடை இப்போது முதல் நீக்கப்படுகிறது என்பதையும் இம்மூன்று சொற்றொடர்களைப் பயன்படுத்தி அல்லாஹ் கூறுகிறான்.
இவற்றை இணைத்துப் பார்க்கும் போது குர்ஆன் எப்படி இறைச்செய்தியாக உள்ளதோ அது போல் நபிகள் நாயகத்தின் வழிகாட்டலும் இறைச்செய்தி தான் என்ற விஷயமும் இதனுள் அடங்கியுள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம்.
குர்ஆன் மட்டும் தான் இறைச்செய்தி என்ற வாதம் உண்மையாக இருந்தால் இரவில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற தடை குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் குர்ஆனில் எந்த வசனத்திலும் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற தடை காணப்படவில்லை. ஏற்கனவே தடை இருந்தது என்ற தகவல் தான் உள்ளதே தவிர எந்த வசனம் இதைத் தடைசெய்தது என்பது கூறப்படவில்லை.
"குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி; ஹதீஸ்கள் இறைச் செய்தி அல்ல" என்று வாதிடுவோரிடம் நாம் கேட்க விரும்புவது இது தான்:
பகலிலும், இரவிலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே தடை இருந்ததாக அல்லாஹ் கூறுகிறானே அவ்வாறு தடை விதிக்கும் வசனம் எது? குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி என்று வாதம் செய்வோர் அந்தக் கட்டளையைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மற்றொரு வஹீ மூலம் இவ்வாறு தடை செய்ய அதிகாரம் இல்லாமல் இருந்து அவர்கள் தடை செய்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டிக்கவில்லை.
"நீங்கள் இரவில் அவ்வாறு நடந்து கொண்டது குற்றமில்லை, முஹம்மது தவறாகக் கூறி விட்டார்" என்று இறைவன் கூறிóருக்க வேண்டும். அவ்வாறு கூறாமல் "நீங்கள் செய்து கொண்டிருந்தது குற்றம் தான்; நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டிருக்கும் போது அது குர்ஆனில் இல்லாவிட்டாலும் அதை மீறுவது பாவம் தான்; என்றாலும் உங்களை நான் மன்னித்து விட்டேன்" என்ற பொருள்பட மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளியுள்ளான்.
இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ குர்ஆன் மட்டுமல்ல. நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் இறைவன் போடுகின்ற கருத்துக்களும் வஹீ தான். அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதை இவ்வசனம் நிரூபிக்கின்றது.