விவாகரத்துக்குப் பின் மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை. பெண்களுக்கு அநீதி இழைப்பதற்காக அல்ல. மாறாக அவர்களுக்கு நன்மை செய்யவும், இதை விடச் சிறந்த ஏற்பாட்டைச் செய்யவுமே இதை நிராகரிக்கின்றது.
மாதாமாதம் ஜீவனாம்சம் பெறுவதற்காக அதில் பாதியளவு வழக்கிற்குச் செலவிடப்படுகிறது. இச்சுமையைப் பெண் சுமக்கிறாள்.
கள்ளக் கணக்குக் காட்டி ஜீவனாம் சம் கொடுப்பதிலிருந்து பெரும்பாலான கணவர்கள் தப்பித்துக் கொள்கின்ற னர். அல்லது அற்பமான தொகையைக் கொடுத்து ஏமாற்றுகின்றனர்.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள நாடுகளில் அப்பெண் மறுமணம் செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் ஜீவனாம்சம் கொடுக்கப்படுகின்றது. மறுமணம் செய்து விட்டால் முந்தைய கணவன் ஜீவனாம்சம் கொடுக்கத் தேவையில்லை என்று இந்த நாடுகளிலுள்ள சட்டம் கூறுகின்றது.
எனவே, ஜீவனாம்சம் முறையாகக் கிடைத்து வந்தால் அந்தப் பெண் மறுமணம் செய்ய மாட்டாள். ஏனெனில் மறுமணம் செய்தால் ஜீவனாம்சம் பெற முடியாது. ஜீவனாம்சத்தின் மூலம் பொருளாதாரப் பிரச்சனை ஓரளவு தீர்ந்து விட்டாலும், அவளது உணர்வுகளுக்காக தீர்வு ஏதுமில்லை. இதனால் சிலர் தவறான நடத்தையில் ஈடுபடவும் இது தூண்டும்.
பெண்களுக்கு இரண்டு வகையான பாதுகாப்பை இஸ்லாம் ஏற்படுத்து கின்றது. ஒன்று திருமணத்தின் போது கணிசமான தொகையை மஹராகப் பெற்று அவள் தனது பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து ஒரு பெருந்தொகையை, சொத்தை ஜமாஅத்தினர், அல்லது இஸ்லாமிய அரசு அவளுக்குப் பெற்றுத் தர வேண்டும். திருக்குர்ஆன் 2:241, 33:49 ஆகிய வசனங்கள் இதைத் தான் கூறுகின்றன. இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
ஆயினும் முஸ்லிம்களில் பலர் இத்தா காலத்துக்கு, அதாவது, மூன்று மாத காலத்துக்கு அவளுக்கு ஜீவனாம்சம் வழங்குவதையே இவ்வசனங்கள் குறிக்கின்றன என்று நினைக்கின்றனர்.
இதை "இத்தா காலத்தில்" என்று எளிதாகச் சொல்லியிருக்கலாம். இறைவன் அவ்வாறு கூறாமல் "அழகிய முறையில்" "நியாயமான முறையில்" என்று கூறுகிறான்.
ஒரு பெண்ணுடன் வாழ்ந்து, அவளது இளமையை அனுபவித்து விட்டு மூன்று மாதம் செலவுக்குப் பணம் கொடுப்பது அழகிய முறையாகவோ, நியாயமான முறையாகவோ இருக்காது.
தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இப்படி நேர்ந்தால் எது நியாயமானதாகப்படுகிறதோ அது தான் நியாயமானது.
திருக்குர்ஆன் 2:236 வசனம் கூறுவதை இதற்கு அளவுகோலாக எடுத்துக் கொள்ள வேண்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்பவும், ஏழை தனது வசதிக்கேற்பவும் பாதுகாப்புத் தொகை கொடுக்க வேண்டும் என்பதே இவ்வசனத்தின் கருத்தாக இருக்க முடியும்.
விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவன் என்றால் அவனது வசதிக்கேற்ப கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.
விவாகரத்துக்குப் பின் பெண் வீட்டாரிடமிருந்து கணவன் வீட்டார் வாங்கிய வரதட்சணையை மட்டும் தான் ஜமாஅத்தினர் பெற்றுத் தருகிறார்கள். அது உண்மையில் அவளுக்குச் சேர வேண்டியது. விவாகரத்துக்காக எதையும் வாங்கிக் கொடுப்பதில்லை.
முஸ்லிம் சமுதாயம் இந்த இறைக் கட்டளையை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தான் பலவிதமான விமர் சனங்களைச் சந்திக்கின்றது, இஸ்லாத் திற்கு எதிரான பிரச்சாரத்துக்கு இது பயன்படுத்தப்படுகிறது. மாதந்தோறும் வழங்கும் போலி ஜீவனாம்சத்தை முஸ்லிம்கள் மீதும் திணிக்க முயற்சிக்கப்படுகிறது.
எனவே ஜமாஅத்தினர் இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லையும் கவனித்து அல்லாஹ்வுக்கு அஞ்சி பெண்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.
திருக்குர்ஆன் 65:6 வசனத்தில் கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை செலவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தா காலம் வரை தான் ஏதும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
அவனது கருவை அவள் சுமந்திருப்பதால் அதற்காக மேலதிகமாக அவன் செய்ய வேண்டிய செலவைத் தான் அவ்வசனம் கூறுகிறது. அதைக் காரணம் காட்டி இவ்வசனங்களில் (2:241, 33:49) கூறப்படும் கட்டளையைப் புறக்கணிக்க முடியாது.