104. இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவானவை

மறைவானவை அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். வானவர்களுக்கோ, நபிமார்கள் உள்ளிட்ட மனிதர்களுக்கோ, ஜின்களுக்கோ மறைவானவை தெரியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

(இது பற்றிய விரிவான சான்றுகளை பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில் மறைவான ஞானம் எனும் உள் தலைப்பில் காண்க!)

ஆயினும் குர்ஆனில் இரண்டே இரண்டு இடங்களில் "மறைவானவற்றைத் தனது தூதர்களுக்கு இறைவன் அறிவித்துக் கொடுப்பான்" எனக் கூறப்படுகிறது. (திருக்குர்ஆன் 3:179, 72:26-27)

இவ்விரு வசனங்களையும் சான்றாகக் கொண்டு மறைவானவை பற்றிய விளக்கம் நபிகள் நாயகத்திற்குத் தெரியும் என்று முஸ்லிம்களில் மார்க்கத்தை அறியாத சிலர் கூறி வருகின்றனர்.

நபிகள் நாயகத்திற்கு மறைவான செய்திகள் தெரியாது என்று தெளிவாகக் கூறும் வசனங்களை (திருக்குர்ஆன் 6:50, 7:188, 11:31) அலட்சியம் செய்து விட்டு இவ்வாறு கூறுகின்றனர்.

இவ்விரு வசனங்களும் கூறுவது என்ன?

3:179 வசனத்தில் மறைவானவற்றைத் தனது தூதருக்கு இறைவன் அறிவித்துக் கொடுப்பதாகக் கூறுவது பொதுவானதல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நயவஞ்சகர்கள் முஸ்லிம்களைப் போலவே வேடமிட்டு முஸ்லிம்களுடன் இரண்டறக் கலந்திருந்தனர்.

இத்தகைய நயவஞ்சகர்களைப் பற்றி நபிகள் நாயகத்திற்கு அறிவித்துக் கொடுப்பதையே இவ்வசனம் (3:179) குறிப்பிடுகிறது. இவ்வசனத்தின் துவக்கத்தில் முஸ்லிம்களையும், நயவஞ்சகர்களையும் இரண்டறக் கலந்திருக்குமாறு இறைவன் விட்டு வைக்க மாட்டான்" எனக் கூறிய பிறகே தூதர்களுக்கு மறைவானதை அறிவிப்பதாக அல்லாஹ் கூறுகிறான். எனவே நயவஞ்சகர்கள் யார் என்ற விபரத்தை நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான் என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும். அனைத்து மறைவான விஷயங்களையும் அறிவித்துக் கொடுத்தான் என்று பொருள் கொள்ள இந்த வசனம் இடமளிக்கவில்லை

அது போல் 72:26,27 வசனங்களில் அனைத்து மறைவான விஷயங்களையும் இறைத்தூதர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான் என்று கூறப்படவில்லை. மாறாக நம்பிக்கை கொள்ள வேண்டிய மறுமை, சொர்க்கம், நரகம் போன்ற மறைவானவைகளைப் பற்றி இறைத் தூதர்களுக்கு அறிவிப்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன. இதைப் புரிந்து கொள்வற்கு இவ்வசனங்களிலேயே போதுமான சான்றுகள் உள்ளன.

தமக்கு அறிவிக்கப்படுகின்ற செய்திகளைத் தூதர்கள் மக்களுக்கு அறிவிக்கிறார்களா? என்று கண்காணிப்பதற்காக, கண்காணிக்கும் வானவர்களை அனுப்புவதாக இவ்வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். எனவே நம்பிக்கை கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களை இறைத்தூதருக்கு அறிவித்துக் கொடுத்து அதை அவர் மக்களுக்கு அறிவிப்பார் என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

எனவே நபிகள் நாயகத்திற்கு இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவான விஷயங்கள் அனைத்தும் அவர்களால் மக்களுக்குச் சொல்லப்பட்டு விட்டன. மக்களுக்குச் சொல்லப்படுவதற்காகவே அதை அறிவித்ததாக அல்லாஹ் குறிப்பிடுவதால் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட மறைவானவற்றில் ஒன்றைக் கூட மக்களுக்கு அறிவிக்காமல் விட்டதில்லை.

இவற்றைத் தவிர வேறு மறைவான விஷயங்கள் எதுவும் யாருக்கும் இறைவனால் அறிவிக்கப்படுவதில்லை.