270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல்
ஐந்து நேரத் தொழுகைகளில் சில தொழுகைகளில் சப்தமிட்டும், சில தொழுகைகளில் சப்தமில்லாமலும் ஓதி நாம் தொழுது வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டி உள்ளனர்.
இவ்வசனத்தில் (17:110) "உமது பிரார்த்தனையை" என்று நாம் குறிப்பிட்டுள்ள இடத்தில் "ஸலாத்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"ஸலாத்" என்பதற்குத் தொழுகை எனவும் பொருள் உண்டு. பிரார்த்தனை எனவும் பொருள் உண்டு. தொழுகை என்று சிலர் பொருள் கொண்டு "தொழுகையில் சப்தமிட்டு ஓதுவதும் தவறு; சப்தமில்லாமல் ஓதுவதும் தவறு; நடுத்தரமாகத் தான் ஓத வேண்டும்" எனக் கூறுகின்றனர்.
ஆனால் "ஸலாத்" என்ற வார்த்தை திருக்குர்ஆனில் தொழுகை அல்லாத பிரார்த்தனையைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஸகாத்தை வசூலிக்குமாறு நபிகள் நாயகத்திற்கு கட்டளையிட்ட இறைவன் "அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக" எனக் குறிப்பிடுகிறான். (திருக்குர்ஆன் 9:103)
பிரார்த்தனையைக் குறிக்க ஸலாத் என்ற சொல்லையே இறைவன் இங்கு குறிப்பிட்டுள்ளான். அகராதியில் இச்சொல்லின் நேரடிப் பொருளும் அது தான். இஸ்லாமிய மார்க்கத்தில் தொழுகை என்ற குறிப்பிட்ட வணக்கம் ஏற்படுத்தப்படுவதற்கு முன் "பிரார்த்தனை" என்ற பொருளில் தான் இச்சொல் பயன்படுத்தப்பட்டது.
(பல அர்த்தங்கள் கொண்ட சொற்களுக்கு எவ்வாறு பொருள் கொள்வது என்பது பற்றி மேலும் விபரம் அறிய 151வது குறிப்பைப் பார்க்கவும்.)
இந்த வசனத்தில் பிரார்த்தனை என்று நாம் அகராதிப் பொருளையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை செயல் முறை விளக்கம் ஆதாரமாக அமைந்துள்ளது.
"சப்தமிட்டுப் பிரார்த்தனை செய்வதை மறுத்து அருளப்பட்ட வசனமே இது" என்று ஆயிஷா (ரலி) விளக்கம் அளித்திருப்பதும் (ஆதாரம்: புகாரி 6327) இது தொழுகையைக் குறிப்பிடவில்லை என்பதற்குச் சான்றாகும்.
இந்த வசனத்தின் துவக்கத்தில் கூட பிரார்த்தனை செய்வதைப் பற்றித் தான் கூறப்படுகிறது. "அல்லாஹ் என்று பிரார்த்தனை செய்யுங்கள்! ரஹ்மான் என்று பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கூறி விட்டு, அதன் தொடர்ச்சியாக ஸலாத் என்ற சொல் வருவதால், நிச்சயமாக இது தொழுகையைக் குறிக்கவில்லை; பிரார்த்தனையைத் தான் குறிக்கிறது என்பதில் சந்தேகமில்லை.