265. ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க முடியாது
திருக்குர்ஆன் ஒருவர் மற்றவரின் பாவத்தைச் சுமக்க முடியாது என்று பல வசனங்களில் கூறுகிறது.
இது இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கை. குறிப்பாக இந்த அடிப்படையில் தான் கிறித்தவ மார்க்கத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது. எல்லோரும் பாவி களாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது.
"ஒருவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் அவரைத் தான் சாரும். ஆதம் (அலை) பாவம் செய்தால் ஆதமுடைய பிள்ளைகள் யாரும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை. எனவே பிறக்கும் போதே யாரும் பாவியாகப் பிறக்க மாட்டார்கள்" என இஸ்லாம் கூறுகிறது.
அனைவரது பாவங்களையும் சுமப்பதற்காக ஏசு பலி கொடுக்கப்பட்டாரா என்றால் அதையும் இஸ்லாம் மறுக்கிறது.
மற்றவர்கள் செய்த பாவங்களுக்காக அந்தப் பாவத்தில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பலி கொடுப்பது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது.
இறந்து விட்ட உறவினர்களுக்காகவோ, மற்றவர்களுக்காகவோ நாம் நன்மைகள் செய்து அவர்களுக்குச் சேர்த்து விட முடியாது என்பதற்கும் இவ்வசனங்கள் சான்றுகளாக உள்ளன.
(இக்குறிப்புக்கான வசனங்கள்: 2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38)