71. நடுத் தொழுகை எது?
இவ்வசனத்தில் (2:238) நடுத் தொழுகையைப் பேணுமாறு கூறப்படுகிறது. நடுத் தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளனர். (நூல்: புகாரி 6396)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடுத் தொழுகைக்கு விளக்கம் தந்த பின் மற்றவர்களின் கருத்தை நாம் கவனத்தில் கொள்ளக் கூடாது.
இவ்வசனம் மற்றொரு விஷயத்தையும் கூறுகிறது.
முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழ வேண்டும் என்பதையும், இதற்கு ஏராளமான நபிமொழிகள் சான்றாகவுள்ளதையும் நாம் அறிவோம். ஆயினும் குர்ஆனில் ஐந்து வேளைத் தொழுகை என்று கூறப்படவில்லை. எனவே ஐந்து வேளைத் தொழுகை என்பது குர்ஆனுக்கு எதிரானது என்று சிலர் நினைக்கின்றனர்.
இவ்வசனம் ஐந்து வேளைத் தொழுகை இருப்பதை நேரடியாகக் கூறாவிட்டாலும் குறைந்தது ஐந்து வேளைத் தொழுகை இருப்பதை மறைமுகமாகக் கூறுகிறது.
தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணுமாறு இவ்வசனம் கூறுகிறது.
தொழுகைகள் என்பது பன்மையாகும். அரபு மொழியில் இரண்டைக் குறிக்க தனிச்சொல் உள்ளதால் பன்மைக்கு குறைந்தது மூன்று இருக்க வேண்டும். மூன்றுக்கும் குறைந்து அரபு மொழியில் பன்மை இல்லை.
"(குறைந்தபட்சம் மூன்று) தொழுகைகளையும் நடுத் தொழுகையையும்" என்று கூறும் போது மொத்தம் நான்கு தொழுகைகள் என்றாகி விடுகின்றது.
நடு என்று கூறுவதாக இருந்தால் அது ஒற்றைப் படையாகத் தான் இருக்க வேண்டும். நான்கில் எதையும் நடு எனக் கூற முடியாது. ஐந்து இருந்தால் தான் அதில் ஒன்றை நடு எனக் கூற முடியும். எனவே மொத்த தொழுகைகள் ஐந்து என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
மூன்று தொழுகைகள் என்று வைத்துக் கொண்டாலும் நடுத் தொழுகை என ஒரு தொழுகையைக் குறிப்பிட முடியுமே என்று சிலர் நினைக்கலாம். மூன்றில் ஒன்றை நடு எனச் சொல்ல முடியும் என்பது உண்மையே. ஆனால் தொழுகைகள் என்று பன்மையாகக் கூறப்படுவதுடன் நடுத் தொழுகை பற்றி தனியாகக் கூறப்படுவதால் நடுத் தொழுகையை நீக்கி விட்டுக் குறைந்தது மூன்று இருந்தாக வேண்டும்.
பன்மையையும் கவனிக்க வேண்டும்; நடு என்ற சொல்லையும் கவனிக்க வேண்டும். இப்படி இரண்டையும் ஒரு சேரக் கவனிக்கும் போது ஐந்து வேளைத் தொழுகை உண்டு என்பதை அறியலாம்.
அதிக விபரத்திற்கு 226, 361 ஆகிய குறிப்புகளையும், 30:17,18 வசனங்களையும் காண்க!