383. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல்

ஆடு, மாடு போன்றவைகளை இறைவனுக்காகப் பலரும் நேர்ச்சை செய்கின்றனர். அது போல் குர்பானி கொடுப்பதற்காக பிராணிகளை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள் வார்கள். இவ்வாறு இறைவனுக்காக என்று அர்ப்பணிக்கப்பட்ட பிராணிகள் நம்மிடம் இருக்கும் வரை அதனால் கிடைக்கும் லாபத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிலிருந்து கிடைக்கின்ற பால் போன்றவற்றைப் பருகலாம். அதன் மேல் ஏறிச் செல்லலாம்.

இறைவனுக்காக என்று அர்ப்பணிக் கப்பட்டவைகளை அறுத்துப் பலியிட்டு ஏழைகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்னால் அதை மற்ற பிராணிகளைப் போலவே பயன்படுத்திக் கொள்ள இவ்வசனம் (22:33) தெளிவான அனுமதியை அளிக்கிறது.

இறைவனுக்கு என்று நேர்ச்சை செய்து யாருக்கும் பலனில்லாமல் பிராணிகள் விடப்படுவதை இஸ்லாம் மறுக்கிறது. இறைவனுக்காக என ஒரு பிராணியை அர்ப்பணிக்க முடிவு செய்தால் அதை ஏழைகள் பயன்பெறும் வகையில் விநியோகித்து விட வேண்டும். அது வரை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யாருக்கும் பயன்படாத வகையில் பிராணிகளை உலகப் பொதுஉடமையாக விட்டு விடக்கூடாது என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிகின்றது.