170. பிற மதத்தவர்களுடன் நல்லிணக்கம்

பிற மதக் கடவுள்களைத் திட்டக் கூடாது என்று இவ்வசனம் (6:108) கூறுகின்றது.

அகில உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கையில் முழு அளவுக்கு இஸ்லாம் உறுதியாக நிற்கின்றது.

அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் அனைத்தும் கற்பனைகளே தவிர கடவுள்கள் அல்ல எனவும் இஸ்லாம் அடித்துக் கூறுகிறது.

ஆனாலும் முஸ்லிமல்லாதவர்கள் தெய்வமாக நம்புவோரைப் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதோ, ஏசுவதோ கூடாது என்று திட்டவட்டமாக இஸ்லாம் அறிவிக்கிறது.

முஸ்லிமல்லாதவர்கள் எவ்வளவு தான் வம்புக்கு இழுத்தாலும் அவர்கள் புனிதமாகக் கருதுவோரை எக்காரணம் கொண்டும் ஏசக் கூடாது எனக் கூறி பல்சமய மக்களிடையே நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கிறது.

அதே சமயத்தில் அல்லாஹ் மட்டும் தான் கடவுளாக இருக்க முடியும்; பல கடவுள்கள் இருக்க முடியாது என்று அறிவுப்பூர்வமாக விமர்சிப்பது பிற மத தெய்வங்களைக் குறை கூறியதாக ஆகாது. (பார்க்க: திருக்குர்ஆன் 3:64, 3:79, 4:171, 5:72, 5:73, 6:71, 6:100, 6:108, 9:31, 12:39, 12:40, 13:16, 16:51, 17:22, 17:111, 21:22, 21:24, 23:91, 23:117)