ஷுஐப்:

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததுடன் அவரது சமுதாயத்தில் நிலவிய பொருளாதாரச் சுரண்டலையும், அளவு நிறுவைகளில் மோசடி செய்ததையும் கண்டித்துப் பிரச்சாரம் செய்தார்.(இவரைப் பற்றி பொருள் அட்டவணை பகுதியில் என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க.)

ஷைத்தான்:

இப்லீஸ் என்னும் சொல்லைப் பார்க்கவும்.

ஸஃபா, மர்வா:

இவ்விரண்டும் மக்காவில் உள்ள இரு மலைக் குன்றுகளாகும். இந்தப் பாலைவனம் ஊராக உருவாவதற்கு முன் முதன் முதலில் இப்ராஹீம் நபி தமது மனைவியையும், கைக் குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார். அப்போது குழந்தை தாகத்தால் தவித்த போது இஸ்மாயீலின் தாயார் இவ்விரு மலைக் குன்றுகள் மீதும் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி ஏதாவது வணிகக் கூட்டம் செல்கிறதா? என்று பார்த்தார்கள். அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின் தாகத்தைத் தணிக்க எண்ணினார்கள். அதற்கிடையே அல்லாஹ் குழந்தை கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை ஏற்படுத்தினான். (புகாரி 3364, 3365)

எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாத தன்மை இதற்கு உண்டு. இங்கே கால் கோடிக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தியும், கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் அது ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த இரு மலைகளில் இஸ்மாயீலின் தாயார் ஓடியது போல் ஹஜ் செய்வோர் ஓடி அந்தத் தியாகத்தை மதிக்க வேண்டும். ஒரு பெண் தன்னந்தனியாக கைக் குழந்தையுடன் ஆள் அரவமற்ற வெட்ட வெளியில் தங்கிய தியாகத்தை இறைவன் மதித்து அவரைப் போலவே அவ்விரு மலைகளுக்கும் இடையே நம்மையும் ஓடச் செய்கிறான்.

(திருக்குர்ஆன் 2:158)

ஸகாத்:

கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொருத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது.

87 கிராம் தங்கம் அல்லது அதன் மதிப்புக்குரிய பணம், வெள்ளி, மற்றும் வர்த்தகப் பொருட்கள் வைத்திருப் போர் அதில் கட்டாயமாக இரண்டரை சதவிகிதம் வழங்குவது ஸகாத் எனப்படும்.

அது போல் விளை பொருட்களில் நீர் பாய்ச்சி, விளைபவற்றில் ஐந்து சதவிகிதத்தை அறுவடை தினத்தில் வழங்கி விட வேண்டும். நீர் பாய்ச்சாமல் மானாவாரியாக விளைபவற்றில் பத்து சதவிகிதம் அறுவடை தினத்தில் வழங்கி விட வேண்டும். அழுகும் பொருட்கள் மட்டும் விதிவிலக்குப் பெறும்.

நாற்பது ஆடுகள், முப்பது மாடுகள், ஐந்து ஒட்டகங்களுக்கு மேல் வைத்திருப்போர் அதற்கென நிர்ணயிக்கப்பட்டதைக் கொடுக்க வேண்டும். (உதாரணமாக நாற்பது ஆடுகளுக்கு ஒரு ஆடு)

இஸ்லாமிய அரசாக இருந்தால் கட்டாயமாக வசூலிக்கப்படும்.

(திருக்குர்ஆன் 9:103)

ஸகாத்தை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் உள்ளன.

ஸகாத் குறித்த ஏனைய சட்டங்கள் நபிமொழிகளில் தான் காணக் கிடைக்கிறது.

ஸகாத் என்பது கட்டாயக் கடமையான தர்மம். இது தவிர உபரியாக நாமாக செலவிடும் தர்மம் ஸதகா எனப்படும். அதையும் திருக்குர்ஆன் பல இடங்களில் ஆர்வமூட்டுகிறது.

(ஸகாத் பற்றி பொருள் அட்டவணை பகுதியில் வணக்கங்கள் என்ற தலைப்பில் காண்க!)

ஸக்கரிய்யா:

இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஈஸா நபியின் தாயாரை எடுத்து வளர்த்தவர் என்பதற்கு குர்ஆனில் சான்றுகள் உள்ளதால் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் எனலாம்.

இவரை யூதர்கள் கொலை செய்தார்கள் என்று கூறப்படுவதுண்டு. யூதர்கள் இவரை விரட்டி வரும் போது ஒரு மரத்திடம் பாதுகாப்புத் தேடியதாகவும், மரம் பிளந்து அவரை உள்ளே மறைத்துக் கொண்டதாகவும், ஆடை மட்டும் வெளியே தெரிந்தததால் மரத்துடன் அவரை இரண்டாக அறுத்துக் கொலை செய்ததாகவும் ஒரு கட்டுக்கதை நிலவுகிறது.

யூதர்கள் பல நபிமார்களைக் கொன்றது உண்மை என்றாலும் அவர்களில் ஸக்கரியா, நபி இருந்தார் என்பதற்கு எந்த ஹதீஸிலும் ஆதாரம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) கூறாமல் இருக்கும் போது இப்படிக் கூறுவது மிகத் தவறாகும்.

மேலும் அவர் சமுதாயத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தார். தள்ளாத வயதில் தான் குழந்தை பிறந்தது என்பதை வைத்துப் பார்க்கும் போது அவர் கொல்லப்பட்டிருக்க முடியாது எனக் கருதவே அதிக வாய்ப்பு உள்ளது.

(இவரைப் பற்றி பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)

ஸக்கூம்:

நரகவாசிகளுக்கு உணவாக வழங்கப்படும் மரத்தின் பெயரே ஸக்கூம்.

(இதைப் பற்றி பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை எனும் தலைப்பில் இறுதி நாளை நம்புதல் (நரகம்) எனும் உள் தலைப்பில் காண்க!)

ஸபூர்:

தாவூது நபிக்கு அருளப்பட்ட வேதத்தின் பெயர் ஸபூர். (திருக்குர்ஆன் 4:163, 17:55)

ஸமூத்:

ஸாலிஹ் நபியின் சமுதாயத்தின் பெயர் ஸமூத். இவர்கள் மலைகளைக் குடைந்து குகைகள் அமைத்து வாழ்ந்தவர்கள்.

(இவர்களைப் பற்றி பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் (ஸாலிஹ்) எனும் உள் தலைப்பில் காண்க!)

ஸலாம்:

சாந்தி, அமைதி, நிம்மதி என்று இச்சொல் பொருள்படும். ஒருவரை யொருவர் சந்திக்கும் பொழுது கூறும் வாழ்த்து இஸ்லாமிய வழக்கில் ஸலாம் எனப்படும்.

(இது பற்றி அதிக விபரம் அறிய விளக்கம் பகுதியில் குறிப்பு 159ஐப் பார்க்க!)

ஸஜ்தா - ஸுஜுது:

இதன் அகராதிப் பொருள் பணிவு, பணிதல் என்பதாகும். பல இடங்களில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய இடங்களில் பணிவு என்று தமிழ்ப்படுத்தி விட்டோம்.

பல இடங்களில் தொழுகையில் உள்ள ஒரு நிலையை இச்சொற்கள் குறிக்கின்றன. அந்த இடங்களில் ஸஜ்தா என்று குறிப்பிட்டுள்ளோம்.

அதாவது நெற்றி, மூக்கு, இரண்டு கால் மூட்டுக்கள், இரண்டு கால்களின் விரல் முனைகள், இரண்டு உள்ளங்கைகள் ஆகியவை தரையில் படுமாறு இறைவனுக்காகப் பணிந்து அதில் கூற வேண்டியதைக் கூறுவது தான் ஸஜ்தா எனப்படும். இது தொழுகையின் ஒரு அங்கமாகவும் உள்ளது.

ஸாபியீன்கள்:

இறைத்தூதர்கள் அனுப்பப்படாத போதும் அல்லது இறைத்தூதர்கள் வழிகாட்டு நெறி சென்றடையாத போதும் நல்லோர்களாக வாழும் சமுதாயமே ஸாபியீன்கள்!

இவ்வுலகுக்கு ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும். மனிதனால் உருவாக்கப்பட்டவை கடவுளாக இருக்க முடியாது என்பதை இறைத்தூதர் வழியாக இல்லாமல் இறைவன் வழங்கிய அறிவைக் கொண்டே இவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

மேலும் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் போது எவையெல்லாம் தனி மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ கேடு தருமோ அவற்றிலிருந்து விலகி வாழ்வார்கள். நல்லவை எனத் தெரிபவற்றைக் கடைப்பிடிப்பார்கள்.

வணக்க வழிபாட்டு முறைகளைத் தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத்தூதர்கள் வழியாகத் தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்படும் முன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைக் கூறிய போது அவர்களையும் ஸாபியீன்கள் என்று எதிரிகள் குறிப்பிட்டனர். (பார்க்க புகாரி 344)

யாராவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மார்க்கத்தில் சேர்ந்தால் அவர் ஸாபியீன்களில் சேர்ந்து விட்டார் எனவும் கூறியுள்ளனர். (பார்க்க புகாரி 3522)

இன்றைக்கும் இறைத்தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இருக்கலாம். அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமான தாகும். இல்லையெனில் மறுமையில் அவர்கள் குற்றவாளிகளே. (திருக்குர்ஆன் 2:62, 22:17, 5:69)

ஸாமிரி:

இவன் மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்தவன். மூஸா நபியவர்கள் இறைவனின் அழைப்பை ஏற்று தூர் மலைக்குச் சென்ற போது நகைகளை உருக்கி காளைக்கன்றின் சிற்பத்தை உருவாக்கினான். இது தான் இறைவன் எனக் கூறி மூஸா நபியின் சமுதாயத்தை வழிகெடுத்தான்.

(இவனைப் பற்றி மேலும் விபரம் அறிய விளக்கம் பகுதியில் குறிப்பு 19-ஐக் காண்க.)

ஸாலிஹ்:

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். வலிமைமிக்க ஸமூத் எனும் சமுதாயத்தை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

(இவரைப் பற்றி பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)

ஸித்ரத்துல் முன்தஹா:

ஸித்ரத் என்றால் இலந்தை மரம் என்பது பொருள். முன்தஹா என்றால் கடைசி எல்லை எனப் பொருள். ஆறாம் வானத்தில் உள்ள மிகவும் பிரம்மாண்டமான மரத்தின் பெயரே ஸித்ரத்துல் முன்தஹா எனப்படும். (திருக்குர்ஆன் 53:14, 16)

இம்மரத்தின் ஒவ்வொரு இலையும் யானையின் காது போல் பெரிதாக இருக்கும். இம்மரத்தில் பலவிதமான வர்ணங்கள் அமைந்து கண்ணைப் பறித்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர். (புகாரி 349, 3207, 3342, 3887)

ஸுந்துஸ்:

ஸுந்துஸ் என்பது சொர்க்க வாசிகளுக்கு அணிவிக்கப்படும் பட்டாடையின் பெயராகும். (திருக்குர்ஆன் 18:31, 44:53, 76:21)

ஸுலைமான்:

ஸுலைமான் அவர்கள் இறைத் தூதர்களில் ஒருவராவார். இவரது தந்தை தாவூது (தாவீது) அவர்களும் இறைத்தூதராகவும், மன்னராகவும் திகழ்ந்தார். ஸுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கங்கப்பட்ட ஆட்சி மற்ற எவருக்கும் வழங்கப் படாத மகத்தான ஆட்சி எனலாம்.

யூத கிறித்தவர்கள் இவரை சாலமோன் என்பர்.

(இவரைப் பற்றி பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)

ஸூர்:

ஸூர் என்பது வாயால் ஊதி ஓசை எழுப்பும் கருவி எனப் பொருள்படும்.

இறைவன் தன் வசமுள்ள 'ஸூர்' மூலம் ஊதச் செய்வான். ஊதப்பட்டதும் உலகம் அழியும். மறுபடியும் ஊதப்பட்டதும் அழிக்கப்பட்டவர்கள் உயிர்த்தெழுவார்கள். இவ்விரு நிகழ்வுகளைத் தான் ஸூர் ஊதப்படும் போது என்ற சொல் குறிப்பிடுகின்றது.

அழிப்பதற்காக ஸூர் ஊதப்படுதல் - 6:73, 36:49, 39:68, 50:20, 69:13-18, 79:6,7

மீண்டும் உயிர்ப்பிக்க ஸூர் ஊதப்படுதல் - 18:99, 20:102, 23:101, 27:87, 36:51, 36:53, 37:19, 50:42, 74:8-10, 78:18, 79:7, 79:13

(ஸூர் பற்றி பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில் இறுதி நாளை நம்புதல் எனும் உள் தலைப்பில் காண்க!)

ஸைத்:

இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் எடுத்து வளர்க்கப்பட்ட வளர்ப்பு மகனாவார். இஸ்லாத்தில் வளர்ப்பு மகன் என்பது இல்லை என்ற கட்டளை வருவதற்கு முன் நபிகள் நாயகத்தின் மகன் என்று இவர் குறிப்பிடப்பட்டார். திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிடப்படும் ஒரே நபித்தோழர் இவர் மட்டுமே. (திருக்குர்ஆன் 33:37)

ஜாலூத்:

கொடுங்கோன்மை புரிந்த ஒரு மன்னனின் பெயரே ஜாலூத். இவனைப் போர்க்களத்தில் தாவூத் நபி அவர்கள் கொன்றார்கள். (திருக்குர்ஆன் 2:249-251)

ஜிப்ரீல்:

ரூஹ் என்னும் சொல்லைப் பார்க்கவும்.

ஜின்:

'ஜின்' என்ற பெயரில் ஒரு படைப்பினம் உள்ளதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். கண்களுக்குத் தென்பட மாட்டார்கள் என்ற விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம்.

ஆயினும் இந்தப் படைப்பினர் மனிதர்களைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே சொர்க்கம், நரகத்தை அடைவார்கள்.

(இது பற்றி மேலும் விபரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில் இதர நம்பிக்கைகள் எனும் உள் தலைப்பில் காண்க.)

ஹஜ்:

முஸ்லிம்களில் சக்தி பெற்றவர்கள் வாழ்நாளில் ஒரு தடவை செய்ய வேண்டிய கடமைகளில் ஹஜ் ஒன்றாகும்.

குறிப்பிட்ட நாட்களில் தான் இதை நிறைவேற்ற வேண்டும். மக்கா சென்று கஅபாவைச் சுற்றுதல், கஅபா வளாகத்தில் தொழுதல், ஸஃபா, மர்வா மலைகளுக்கிடையே ஓடுதல், அரஃபா, முஸ்தலிபா, மினா ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கே செய்ய வேண்டிய காரியங்களைச் செய்தல் ஹஜ் எனப்படும்.

(இது பற்றி மேலும் விவரம் பொருள் அட்டவணை பகுதியில் வணக்கங்கள் என்ற தலைப்பில் காண்க!)

ஹாமான்:

இவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோல் மன்னனுக்கு அமைச்சராக இருந்தான். இவனைப் பற்றி அதிக விபரம் ஏதும் குர்ஆனில் கூறப்படவில்லை. (திருக்குர்ஆன் 28:6, 28:8, 28:38, 29:39, 40:24, 4036)

ஹாரூத், மாரூத்:

இவ்விருவரும் நபிகள் நாயகத்திற்கு முந்தைய சமுதாயத்தில் சூனியம் எனும் வித்தையைக் கற்றுக் கொடுத்த தீயவர்களாவர். இவ்விருவரும் வானவர்கள் எனச் சிலர் கூறுகின்றனர். இவர்களது நடவடிக்கைகள் வானவர்களின் பண்புகளுக்கு எதிராக இருப்பதால் இவ்விருவரும் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே சரியான கருத்தாகும்.

(இவர்களைப் பற்றி அதிக விபரம் அறிய, விளக்கம் பகுதியில் 395, 357 ஆகிய குறிப்புகளைக் காண்க!)

ஹாரூன்:

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரும் மூஸா நபியும் சேர்ந்து இரட்டைத் தூதர்களாக ஃபிர்அவ்ன் கூட்டத்தாருக்கு அனுப்பப்பட்டனர்.

(இவரைப் பற்றி பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)

ஹிஜ்ரத்:

ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல் எனப் பொருள் உண்டு. இஸ்லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்பது குறிப்பிட்ட தியாகத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

ஒரு ஊரில், ஒரு நாட்டில் இஸ்லாமிய மார்க்கத்தின்படி வாழ முடியாத நிலை ஏற்பட்டால், கொண்ட கொள்கையைக் காத்துக் கொள்வதற்காக பிறந்த மண், சொத்து சுகம், சுற்றம், நட்பு அனைத்தையும் துறந்து இஸ்லாத்தைக் கடைப்பிடித்து ஒழுக ஏற்ற இடத்துக்குச் செல்வது தான் ஹிஜ்ரத் எனப்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மக்காவில் முஸ்லிம்கள் இந்த நிலையைச் சந்தித்த போது அபீஸீனியாவுக்குச் சிலர் ஹிஜ்ரத் (தியாகப் பயணம்) மேற்கொண்டனர். வேறு சிலர் மதீனா நகருக்குச் சென்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்றனர்.

அவர்கள் ஹிஜ்ரத் செய்ததிலிருந்து முஸ்லிம் ஆண்டு ஹிஜ்ரா ஆரம்பமாகிறது. ஹிஜ்ரி முதல் ஆண்டு என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 53ம் வயது என்று பொருள். 53ம் வயதில் தான் நபிகள் நாயகம் (ஸல்) தியாகப் பயணம் மேற்கொண்டார்கள்.

(இது பற்றி பொருள் அட்டவணை பகுதியில் அரசியல் என்ற தலைப்பில் காண்க!)

ஹுத் ஹுத்:

இது ஒரு பறவையின் பெயராகும். ஸுலைமான் நபி காலத்தில் அண்டை நாட்டு ராணியைப் பற்றி உளவறிந்து ஸுலைமான் நபிக்கு இப்பறவை தெரிவித்ததாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. (திருக்குர்ஆன் 27:20)

ஹூத்:

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இறைவன் படைப்புகளிலேயே நிகரற்றவர்களாகக் கருதப்படும் ஆது சமுதாயத்தை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

(இவரைப் பற்றி பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)

ஹூருல் ஈன்:

சொர்க்கவாசிகளின் வாழ்க்கைத் துணைவியர் ஹூருல் ஈன் எனப்படுவர்.

(இவர்களைப் பற்றி அதிக விபரம் அறிய விளக்கம் பகுதியில், 8வது குறிப்பைக் காண்க!)

";