166. இறந்தவுடனே வேதனை ஆரம்பம்
கப்ரு எனும் ஆன்மாக்களின் உலகத்தில் தீயவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள்; நல்லவர்கள் இன்பம் அனுபவிக்கிறார்கள் என்ற கருத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகள் இருக்கின்றன. முஸ்லிம்களும் அவற்றை நம்புகின்றார்கள்.
ஆனால் திருக்குர்ஆனில் கப்ரு என்னும் மண்ணறை வாழ்க்கை பற்றியோ, அங்கே வேதனை இருக்கிறது பற்றியோ எதுவுமே கூறப்படவில்லை என்று காரணம் காட்டி சிலர் அதனை மறுக்கிறார்கள்.
கப்ரில் வேதனை இருக்கிறது என்று திருக்குர்ஆனில் நேரடியாகக் கூறப்படாவிட்டாலும் அந்தக் கருத்தைத் தருகின்ற வசனங்கள் குர்ஆனில் காணப்படுகின்றன. அத்தகைய வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த வசனத்தில் (6:93) வானவர்கள் அநியாயக்காரர்களின் உயிரைக் கைப்பற்றுகின்ற போது "இன்று நீங்கள் இழிவு தரும் வேதனையைச் சுவையுங்கள்" என்று கூறுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
என்றைக்கு கைப்பற்றப் படுகின்றார்களோ அன்றிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, உலகம் அழிக்கப்பட்டு, நியாயத் தீர்ப்பு நாள் வந்து விசாரிக்கப்பட்டு, அதன் பிறகு தான் அவர்களுக்கு நரகம் என்ற இழிவு தருகின்ற தண்டனை கிடைக்கப் போகிறது.
ஆனால் இவ்வசனமோ உயிர்களைக் கைப்பற்றும் போது "இன்று வேதனையை அனுபவியுங்கள்" என்று வானவர்கள் கூறுவதாகத் தெரிவிக்கிறது. அதாவது உயிரைக் கைப்பற்றும் போதே வேதனை துவங்கி விடுகிறது.
இதற்கு விளக்கமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு வேதனை இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். இது குர்ஆனுக்கு மாற்றமானது இல்லை.
அதிக விளக்கத்திற்கு இதே பகுதியில் 332, 349 ஆகிய குறிப்புகளைக் காண்க!