அனுப்பப்படும் காற்று!

மொத்த வசனங்கள் : 50

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அனுப்பப்படும் காற்றின் மீது சத்தியம் எனக் கூறப்படுவதால், அனுப்பப்படும் காற்று என்று இதற்குப் பெயரிடப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
77:1, 2. தொடர்ந்து அனுப்பப்படுபவை (காற்றின்) மீதும், கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக!26
77:3, 4. பரப்பி விடுபவை மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும் சத்தியமாக!26
77:5, 6. மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப் போடுபவற்றின் (காற்றின்) மீது சத்தியமாக!26
77:7. உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடந்தேறும்.
77:8. நட்சத்திரங்கள் ஒளியிழக்கும் போது,
77:9. வானம் பிளக்கப்படும் போது,
77:10. மலைகள் சிதறடிக்கப்படும் போது,
77:11. தூதர்களுக்கு நேரம் குறிக்கப்படும் போது (அது நடந்தேறும்)
77:12. (இவை) எந்த நாளுக்காகத் தாமதப்படுத்தப்பட்டுள்ளது?
77:13. தீர்ப்பு நாளுக்காகவே!
77:14. தீர்ப்பு நாள்1 என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
77:15. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:16. முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
77:17. பின்னோரை அவர்களைத் தொடர்ந்து வரச் செய்யவில்லையா?
77:18. இவ்வாறே குற்றவாளிகளை நடத்துவோம்.
77:19. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:20. உங்களை அற்பமான நீரிலிருந்து நாம் படைக்கவில்லையா?
77:21, 22. குறிப்பிட்ட காலம் வரை அதைப் பாதுகாப்பான இடத்தில் நாம் வைக்கவில்லையா?26
77:23. நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள்.
77:24. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:25, 26. உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை ஆக்கவில்லையா?26
77:27. அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம்.248 இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.
77:28. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:29, 30. நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி நடங்கள்!26
77:31. அது நிழல் தரக் கூடியது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது.
77:32. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.
77:33. அது நிறத்தில் மஞ்சள் நிற ஒட்டகங்கள் போல் இருக்கும்.
77:34. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:35. இது அவர்கள் பேச முடியாத நாள்!1
77:36. சமாதானம் கூற அவர்களுக்கு அனுமதியளிக்கப்படாது.
77:37. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:38. இதுவே நியாயத் தீர்ப்பு நாள்!1 உங்களையும், முன்னோரையும் ஒன்று திரட்டினோம்.
77:39. உங்களிடம் ஏதேனும் சூழ்ச்சி இருந்தால் எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்!
77:40. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:41. (இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
77:42. அவர்கள் விரும்புகிற கனிகளிலும் இருப்பார்கள்.
77:43. "நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்!" (எனக் கூறப்படும்).
77:44. இவ்வாறே நன்மை செய்தோருக்கு நாம் கூலி வழங்குவோம்.
77:45. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:46. சிறிது காலம் உண்ணுங்கள்! அனுபவியுங்கள்! நீங்கள் குற்றவாளிகள்.
77:47. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:48. ருகூவு செய்யுங்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அவர்கள் ருகூவு செய்ய மாட்டார்கள்.
77:49. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:50. இதன் பிறகு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்புவார்கள்?