அல்லாஹ்:
'அல்லாஹ்' என்பது அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் சர்வ அதிகாரமும், வல்லமையும் படைத்த ஏக இறைவனை மட்டுமே குறிக்கும் அரபு மொழிச் சொல்லாகும்.
நபிகள் நாயகத்துக்கு முன்பே இச் சொல்லை அரபுகள் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் வணங்கி வந்த சிலைகளை வேறு வார்த்தைகளில் தான் குறிப்பிட்டார்களே தவிர அல்லாஹ் எனக் கூறியதில்லை.
அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் ஒரே கடவுள் இருக்கிறான்; அவன் தான் அல்லாஹ். மற்ற தெய்வங்கள் யாவும் அல்லாஹ்விடம் பெற்றுத் தரும் குட்டி தெய்வங்கள் என்பதே அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.
எனவே தான் தமிழ் மொழியில் உள்ள கடவுள், இறைவன், தெய்வம் போன்ற சொற்களை அல்லாஹ் என்ப தற்குரிய மொழி பெயர்ப்பாக நாம் பயன்படுத்தவில்லை. ஏனெனில் இச்சொற்களை ஒரே இறைவனுக்கும் பயன்படுத்துகின்றனர். வணங்கப்படும் அனைத்துக்கும் இச்சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
ஒரு சிலையை அல்லது மதிக்கப்படும் மனிதனை தெய்வம் எனக் கூறும் வழக்கம் தமிழக மக்களிடம் உள்ளது. அல்லாஹ் என்ற சொல்லை நபிகள் நாயகத்தை எதிர்த்தவர்களும் கூட வணங்கப்படும் அனைத்துக்கும் பயன்படுத்தியதில்லை. எனவே அல்லாஹ் என்ற சொல் இடம் பெற்ற அத்தனை இடங்களிலும் அல்லாஹ் என்றே குறிப்பிட்டுள்ளோம். - அல்லாஹ்வுக்கு மனைவியும், மக்களும் இல்லை.
- அல்லாஹ்வுக்கு பெற்றோர் இல்லை; அதனால் உடன் பிறப்புக்களும் இல்லை.
அல்லாஹ்வுக்கு இயலாதது எதுவும் இல்லை.
அல்லாஹ்வுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை.
தூக்கம், மறதி, அசதி,களைப்பு, பசி, தாகம், இயற்கை உபாதை, முதுமை, நோய் என எந்த விதமான பலவீனமும் அல்லாஹ்வுக்கு இல்லை.
எந்த விதமான தேவையும் அவனுக்கு அறவே இல்லை.
இத்தகைய இலக்கணங்கள் யாவும் ஒருங்கே கொண்டிருப்பவன் தான் அல்லாஹ்.
(அதிக விபரத்துக்கு பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில் அல்லாஹ்வை நம்புதல் எனும் உள் தலைப்பில் காண்க.)
அய்யூப்:
இவர் இறைத்தூதர்களில் ஒரு வராவார். யூத, கிறித்தவர்கள் இவரை யோபு என்பர்.
இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தின ரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர்.
அவரது உடலில் புழுக்கள் உற்பத்தியாகின என்றெல்லாம் கட்டுக் கதைகள் உள்ளன. அவற்றுக்கு ஆதாரம் இல்லை.
(அய்யூப் நபி பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க)
அரஃபாத்:
மக்காவிற்கு வெளியே அமைந் துள்ள மாபெரும் மைதானத்தின் பெயரே அரஃபா அல்லது அரஃபாத் ஆகும்.
ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர்கள் ஹஜ் மாதம் பிறை ஒன்பதில் இம் மைதானத்தில் குழுமுவது கட்டாயக் கடமையாகும். இம்மைதானத்தில் சிறிது நேரமாவது தங்காவிட்டால் ஹஜ் நிறைவேறாது. ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான மக்கள் கூடாரமடித்து இங்கே தங்குவார்கள். இந்த நாளில் சிறப்பான ஒரு சொற்பொழிவும் நிகழ்த்தப்படும். (திருக்குர்ஆன் 2:198)
அர்ஷ்:
எல்லாம் வல்ல ஏக இறைவன் வீற்றிருந்து ஆட்சி செய்யும் இருக்கை அர்ஷ் எனப்படும். இது வானங்களையும், பூமியையும் விட மிகவும் பிரம்மாண்டமானது. இறைவன் அர்ஷின் மீது வீற்றிருக்கிறான் என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.
(அர்ஷ் பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில் அல்லாஹ்வை நம்புதல் எனும் உள் தலைப்பில் காண்க)
அல்யஸஃ:
அல்யஸஃ என்பார் இறைத் தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி திருக்குர்ஆனில் 6:86, 38:48 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. அதிகமான விவரங்கள் எதுவும் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை.
அன்ஸார்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களை ஏற்றுக் கொண்ட தோழர்களும் மக்காவில் இருந்து விரட்டப்பட்டு மதீனாவில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு தஞ்சம் புகுந்தவர்களை அரவணைத்து ஆதரவளித்து பேருதவி செய்தவர்களே அன்ஸார்கள் எனப்படுவர்.
இவர்களில் ஒவ்வொருவரும் அகதிகளாக வந்த மக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டு அவருக்கு தங்களின் வீடு, சொத்து, வியாபாரம், ஆடைகள் அனைத்திலும் சரிபாதியாகப் பங்கிட்டுக் கொடுத் தார்கள்.
(அன்ஸார்களைப் பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நல்லோர் - தீயோர் எனும் உள் தலைப்பில் காண்க!)
ஆதம்:
இஸ்லாமிய நம்பிக்கைப் படி அல்லாஹ் முதல் மனிதரைக் களி மண்ணால் படைத்தான். அவ்வாறு படைக்கப்பட்டவரின் பெயர் தான் ஆதம். இவர் தான் முழு உலகில் வாழும் அனைத்து மக்களின் தந்தை யாவார். அவரிலிருந்து அவரது பெண் துணையை இறைவன் படைத்தான். கிறித்தவர்கள் இவரை ஆதாம் என்பர்.
(ஆதம் பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)
ஆது:
'ஹூத்' எனும் இறைத்தூதர் அனுப்பப்பட்ட சமுதாமே 'ஆது' சமுதாயம் எனப்படும். இவர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தனர். ஹூத் நபியை ஏற்க மறுத்து அக்கிரமம் புரிந்தததால் வறண்ட காற்றை அனுப்பி இறைவன் அவர்களை அழித்தான்.
(ஆது சமுதாயம் பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் (ஹூத்) எனும் உள் தலைப்பிலும் காண்க!)
இஞ்சீல்:
இவ்வேதம் ஈஸா நபிக்கு அருளப்பட்ட வேதம் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.
இப்போதுள்ள பைபிள் இஞ்சீல் அல்ல. ஏனெனில் இது இயேசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய செய்தியாகும். இஞ்சீல் என்பது இயேசு எனும் ஈஸா நபியிடம் இறைவன் உரையாடியதாகும்.
பைபிள் புதிய ஏற்பாட்டிலும் 'ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை இயேசு பிரசங்கித்தார்' எனக் கூறப்பட்டுள்ளது. (மத் 4:23, 9:35) அந்த ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் இன்று கிறித்தவர்களிடம் இல்லை. இஞ்சீலுக்குரியவர்கள் அதன்படி தீர்ப்பளிக்கட்டும் (திருக்குர்ஆன் 5:47) என்று குர்ஆன் கூறு வதால் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஞ்சீல் இருந்ததை அறியலாம். அதன் பிறகு அது மறைக்கப்பட்டு விட்டது என்றே கருத வேண்டும்.
(இஞ்சீல் பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில் வேதங்களை நம்புதல் எனும் உள் தலைப்பில் காண்க)
இஃதிகாஃப்:
இச்சொல்லுக்குத் தங்குதல் என்று பொருள். இஸ்லாமிய நம்பிக்கைப்படி சிறிது நேரம் அல்லது சில நாட்கள் பள்ளிவாசலில் தங்கி இறை நினை விலும், வழிப்பாட்டிலும் இருப்பது தான் இஃதிகாஃப் எனப்படும்.
ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பதாக ஒருவர் முடிவு செய்தால், அந்த நாள் முழுவதும் குடும்ப வாழ்க்கை, கொடுக்கல் வாங்கல் போன்ற எந்த அலுவலிலும் ஈடுபடக் கூடாது.
ஒரேயடியாக உலகைத் துறப்பதைத் தடை செய்த இஸ்லாம் குடும்பத்துக்கோ, உலகத்துக்கோ பாதிப்பு ஏற்படாத இந்த சிறிய அளவிலான தவத்தை மட்டும் அனுமதிக்கிறது. ஓரிரு நாட்கள் இவ்வாறு பள்ளிவாசலில் தங்கி உலகத் தொடர்பைத் தற்காலிகமாக அறுத்துக் கொண்டவர் வெளியே வந்ததும் பக்குவம் பெற்றவராக நடப்பார். அவருக்கும், உலகுக்கும் இதனால் பயன் கிடைக்கும். (பார்க்க: திருக்குர்ஆன் 2:187)
இத்தா:
கணவனை இழந்த பெண்களும், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். இந்த கால கட்டமே இத்தா எனப்படும்.
கணவனை இழந்த பெண் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் கழிப்பதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாத விடாய் காலம் முழுமை அடைவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது.
(இது பற்றி மேலும் விவரம் அறிய விளக்கம் பகுதியில் 69 மற்றும் 360 ஆகிய குறிப்புகளைக் காண்க!)
இத்ரீஸ்:
இவர் இறைத் தூதர்களில் ஒருவ ராவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 19:56, 21:85 ஆகிய இரு வசனங்களில் மட்டுமே குறிப்பிடுகிறது. அதிகமான விபரம் எதுவும் இவரைப் பற்றி குர்ஆனில் கூறப்படவில்லை.
இப்ராஹீம்:
இறைத் தூதர்களிலேயே அதிகமான அருள் பெற்றவர் இப்ராஹீம் தான். மற்றவர்களுக்கு வழங்கிய அளவுக்கு அற்புதங்கள் வழங்கப்படா விட்டாலும் இவரது தகுதியைப் பெரிதும் அல்லாஹ் உயர்த்தியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) மட்டுமின்றி இஸ்ஹாக், யஃகூப், தாவூத், ஸுலைமான், அய்யூப், யூசுப், மூஸா, ஹாரூன் அனைவரும் இவரது வழித் தோன்றல்களே.
யூதர்களும், கிறித்தவர்களும், முஸ்லிம்களும் பெரிதும் மதிக்கக் கூடிய மகானாகவும் இவர்கள் திகழ்கிறார்கள். இவரை 'ஆப்ரஹாம்' என்று யூத கிறித்தவர்கள் கூறுவார்கள்.
(இப்ராஹீம் நபி பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க)
இப்லீஸ்:
முதல் மனிதர் ஆதம் படைக்கப்படுவதற்கு முன் நல்லோரில் ஒருவனாக இருந்தவன் இப்லீஸ். இவன் நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன்.
முதல் மனிதரைப் படைத்தவுடன் அவருக்கு மரியாதை செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். வானவர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினார்கள். அவர்களுடன் இருந்த இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். மரியாதை செய்ய மறுத்தான். மனிதர்களை வழி கெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டினான்.
'என்னையே முழுமையாக நம்பும் நல்லோரை உன்னால் கெடுக்க முடியாது. தனது மனோ இச்சைகளுக்கு அடிமைப்பட்டவர்களையே உன்னால் வழி கெடுக்க முடியும்' என்று கூறி இறைவன் வாய்ப்பளித்தான். இவனது சந்ததிகள் தாம் ஷைத்தான்கள் எனப்படுவோர்.
(இப்லீஸ் மற்றும் ஷைத்தான்கள் பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில், இதர நம்பிக்கைகள் எனும் உள் தலைப்பில் காண்க!)
இம்ரான்:
இவர் ஈஸா நபியின் தாயாரான மரியம் அவர்களுக்குத் தந்தையாவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 3:33, 3:35, 66:12 ஆகிய மூன்று இடங்களில் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றி வேறு விபரங்கள் எதுவும் குர்ஆனில் கூறப்படவில்லை.
இல்யாஸ்:
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் இல்யாஸீன் என்றும் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளார். (திருக்குர்ஆன் 37:130) இவர் தமது சமுதாயத்தின் பல கடவுள் நம்பிக்கையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த விவரம் தவிர அதிகமான விவரம் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை. (திருக்குர்ஆன் 37:123, 6:85)
இஸ்தப்ரக்:
இஸ்தப்ரக் என்பது சொர்க்கத்தில் அணிவிக்கப்படும் ஒரு வகைப் பட்டாடையின் பெயராகும். இது பட்டாடைகளில் அதிக அடர்த்தி உடையதாகும். (திருக்குர்ஆன் 18:31, 44:53, 76:21)
இஸ்ராயீல்:
இப்ராஹீம் நபியின் மகன் இஸ்ஹாக். இஸ்ஹாக்குடைய மகன் யஃகூப். யஃகூபின் மற்றொரு பெயர் தான் இஸ்ராயீல். இஸ்ரவேலர்கள் எனப்படுவோர் யஃகூப் நபியின் வழித்தோன்றல்களாக இருப்பதால் அவர்கள் இஸ்ராயீலின் மக்கள் என்று கூறப்படுகின்றனர். கிறித்தவர்கள் இவரை இஸ்ரவேல், யாகோப், ஜேக்கப் என்பர்.
(இஸ்ராயீல் பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் (யஃகூப்) எனும் உள் தலைப்பில் காண்க)
இஸ்மாயீல்:
இப்ராஹீம் நபியின் மகன் இஸ்மாயீல். இவரும் இறைத் தூதர்களில் ஒருவராவார். இஸ்மாயீலின் வழியில் தான் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தார்கள். யூத, கிறித்தவர்கள் இவரை 'இஸ்மவேல்' என்பர்.
(இஸ்மாயீல் பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க)
இஸ்ஹாக்:
இப்ராஹீம் நபியின் இன்னொரு புதல்வர் இஸ்ஹாக். இவரும் இறைத் தூதர்களில் ஒருவர் என்பதைத் தவிர இவரைப் பற்றி அதிகமான விபரங்கள் ஏதும் குர்ஆனில் கூறப்படவில்லை. பல நபிமார்களுடன் இணைத்து இவரும் நல்லவராக இருந்தார் என்று குர்ஆன் கூறுகிறது. இவரது பிரச்சாரம், அதில் சந்தித்த பிரச்சினைகள் பற்றி ஏதும் கூறப்படவில்லை.
இஹ்ராம்:
ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்றத் துவங்கும் போது எடுக்கும் உறுதி மொழியே இஹ்ராம் எனப்படும். இவ்வாறு உறுதி மொழி எடுக்கும் போது தைக்கப்படாத ஆடையை அணிய வேண்டும்.
(இது பற்றி மேலும் விவரம் பொருள் அட்டவணை பகுதியில் வணக்கம் என்ற தலைப்பில் ஹஜ் எனும் உள் தலைப்பில் காண்க)
ஈஸா:
கிறித்தவர்கள் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடும் இயேசுவை திருக்குர்ஆன் ஈஸா எனக் கூறுகிறது.
ஈஸா நபியவர்கள் சில அற்புதங்கள் நிகழ்த்தியதையும், தந்தையின்றிப் பிறந்ததையும் இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவரும் மற்ற இறைத்தூதர்களைப் போல் ஒரு தூதராவார். இறைவனுக்கு மகன் இருக்க முடியாது என்பதால் இவர் இறை மகன் அல்லர் என்று குர்ஆன் அடித்துக் கூறுகிறது.
(ஈஸா பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)
உம்ரா:
மக்கா சென்று கஅபாவைச் சுற்றுதல், கஅபா வளாகத்தில் தொழுதல், ஸஃபா, மர்வா மலைகளுக்கிடையே ஓடுதல், உம்ரா எனப்படும்.
உம்ரா என்பது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
இதற்கென தைக்கப்படாத ஆடையை அணிய வேண்டும். இந்தக் காலகட்டத்தில் இல்லறம் நடத்துதல், வேட்டையாடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
(இது பற்றி மேலும் விவரம் பொருள் அட்டவணை பகுதியில் வணக்கம் என்ற தலைப்பில் ஹஜ் எனும் உள் தலைப்பில் காண்க!)
உஸ்ஸா:
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையுடையோர் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயரே உஸ்ஸா எனப்படும். (திருக்குர்ஆன் 53:19)
ஃபிர்அவ்ன்:
யூத, கிறிஸ்தவர்களால் 'பாரோன்' எனக் குறிப்பிடப்படும் ஃபிர்அவ்ன் வலிமைமிக்க மன்னனாகத் திகழ்ந் தவன். தன்னையே கடவுள் என வாதிட்டவன். தனது நாட்டில் சிறுபான்மையினராக இருந்த இஸ்ரவேலர்களைக் கொடுமைப்படுத்தினான். அவர்களில் ஆண்களை மட்டும் கொன்று குவித்தான்.
இவனுக்கு ஓரிறைக் கொள்கையை உணர்த்தவும், அவனது கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும் மூஸா (மோசே) ஹாரூன் (ஆரோன்) ஆகிய இருவரையும் தூதர்களாக இறைவன் அனுப்பினான்.
ஆயினும் அவன் திருந்தவில்லை. அவனும், அவனது படையினரும் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர். நைல் நதியில் மூழ்கடிக்கப்பட்டான் என்று சிலர் கூறுவது குர்ஆனுக்கு முரணாகும்.
(ஃபிர்அவ்ன் பற்றிய மேலும் விவரத்திற்கு பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில், நல்லோர் - தீயோர் எனும் உள் தலைப்பில் காண்க!)