16. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள்
2:47, 2:122 ஆகிய வசனங்களில் "இஸ்ரவேலர்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருந்தேன்" என்று இறைவன் கூறுகிறான்.
பிறப்பின் அடிப்படையில் எவரும் எந்தச் சிறப்பும் பெற முடியாது என்பது இஸ்லாமியக் கோட்பாடு. (பார்க்க : திருக்குர்ஆன் 2:111, 3:75, 49:13)
எனவே இஸ்ரவேலர்களுக்கு வழங்கிய ஆட்சி, அதிகாரம், பொருள் வசதி போன்ற சிறப்புக்களையே இது குறிக்கிறது.
யஃகூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், தாவூத், ஸுலைமான், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா உள்ளிட்ட அதிகமான இறைத்தூதர்கள் இஸ்ரவேலர்களில் தான் அனுப்பப்பட்டனர். இந்தச் சிறப்பு மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை. திருக்குர்ஆனின் 5:20 வசனம் இதைத் தெளிவாகவே கூறுகிறது.
ஆன்மிக நிலையைப் பொறுத்தவரை நன்மையை ஏவி தீமைகளைத் தடுக்கும் பொறுப்பு சுமத்தப்பட்டு சிறந்த சமுதாயமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் திகழ்வதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க : திருக்குர்ஆன் 2:143, 3:110) இந்தச் சிறப்பு இஸ்ரவேலர்களுக்கு இல்லை.
2:47, 2:122 ஆகிய வசனங்களில் "சிறப்பித்திருந்தேன்" என்ற இறந்தகால வினைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் அவர்களுக்குச் சில வசதிகள் வழங்கப்பட்டதை இது குறிக்குமே தவிர காலாகாலத்துக்கும் அவர்கள் சிறப்புற்று விளங்குவார்கள் என்ற கருத்தைத் தராது.
சிறப்பிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் பின்னர் இறைவனின் கடுமையான கோபத்துக்கும், சாபத்துக்கும் ஆளானதாகத் திருக்குர்ஆன் 2:88, 2:159, 4:46-47, 5:13, 5:60, 5:64, 5:78 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.