9. திருக்குர்ஆன் வழி கெடுக்காது!

இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 2:26) "இதன் மூலம் வழிகெடுப்பான்" என்று கூறப்பட்டுள்ளது. சிலர் "இவ்வேதத்தின் மூலம்" என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். இது அறியாமையாகும்.

ஏனெனில் இவ்வசனத்தில் ஒரு உதாரணத்தைக் கூறிவிட்டு அதன் பிறகு தான் "இதன் மூலம் வழிகெடுப்பான்' என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே "இதன் மூலம்' என்ற சொற்றொடருக்கு "இவ்வுதாரணத்தின் மூலம்' என்று பொருள் கொள்வதே சரியாகும்.

"இதன் மூலம்' என்ற சொற்றொடருக்கு "வேதத்தின் மூலம்' என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இவ்வசனத்தில் வேதத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் இடம் பெறவில்லை.

மேலும் வழிகாட்டுவதற்காகத் தான் அல்லாஹ் குர்ஆனை அருளினான்; வழிகெடுப்பதற்காக அல்ல. எனவே அவ்வாறு பொருள் கொள்வது கடும் குற்றமும், குர்ஆனுக்குக் களங்கம் கற்பிப்பதுமாகும்.