183. ஜின்களின் ஆற்றல்
இவ்வசனத்தில் (27:39) "இஃப்ரீத்" என்ற ஜின் ஸுலைமான் நபி எழுந்திருப்பதற்குள் சிம்மாசனத்தைக் கொண்டு வருகிறேன் என ஸுலைமான் நபியிடம் கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை.
ஆயினும் இதற்கு அடுத்த வசனத்தில் (27:40) "கண் மூடித் திறப்பதற்குள் அதைக் கொண்டு வருகிறேன்" என்று வேத அறிவு உள்ளவர் கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது. வேத அறிவு உடையவர் என்பது மனிதரைக் குறிக்குமா? ஜின்னைக் குறிக்குமா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
27:39 வசனத்தில் "ஜின் இனத்தைச் சேர்ந்த" என்ற சொல் இடம் பெற்றுள்ளது. 27:40 வசனத்தில் "வேத அறிவுடையவர்" என்று மட்டும் கூறப்படுகிறது. இதுவே கருத்து வேறுபாட்டுக்குக் காரணம்.
திருக்குர்ஆனில் மனிதனின் ஆற்றல் குறித்தும், ஜின்களின் ஆற்றல் குறித்தும் கூறப்படும் வசனங்களை அறிந்திருப்பவர் 27:40 வசனமும், ஜின்னையே குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார். ஏனெனில் ஜின்னுடைய ஆற்றல் மனிதனின் ஆற்றலை விடப் பல மடங்கு அதிகம் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடுத்துகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 72:8,9)
ஜின்கள் எவ்விதச் சாதனங்களும் இன்றி வானத்தின் எல்லை வரை சென்று திரும்ப ஆற்றல் வழங்கப்பட்டுள்ளனர். மனிதனால் கண்மூடித் திறப்பதற்குள் ஒரு நாட்டில் உள்ள சிம்மாசனத்தை இன்னொரு நாட்டிற்குக் கொண்டு வர முடியாது. அத்தகைய ஆற்றல் மனிதனுக்கு வழங்கப்பட்டிருப்பதாக திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ எந்தச் சான்றும் இல்லை என்பதால் இதில் கருத்து வேறுபாடு கொள்ள நியாயம் இல்லை.
எனவே ஜின்களில் போதிய கல்வியறிவு இல்லாத ஜின் கூறியது முந்தைய வசனத்திலும், கல்வியறிவு பெற்ற ஜின் கூறியது அடுத்த வசனத்திலும் கூறப்படுகிறது என்பதே சரியான கருத்தாகும்.