334. பைஅத் என்றால் என்ன?
இந்த வசனங்கள் (48:10, 48:12, 48:18) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் செய்து கொண்ட "பைஅத்" எனும் உடன்படிக்கை பற்றிப் பேசுகின்றன.
முஸ்லிம்களில் உள்ள போலி ஆன்மிகவாதிகளும், ஏமாற்றுப் பேர்வழிகளும், தங்களின் சீடர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காகவும், எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு தங்களைப் பின்பற்றச் செய்வதற்காகவும் இவ் வசனத்தைப் பயன்படுத்துகின்றனர்.
நபிகள் நாயகத்திடம் நபித்தோழர்கள் "பைஅத்" செய்திருப்பதால் எங்களிடமும் "பைஅத்" செய்யுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறு "பைஅத்" எனும் உறுதி மொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதி மொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர்.
பிறமதங்களில் உள்ள தீட்சை போன்ற நிலையில் வைத்து மதகுருமார்களிம் பைஅத் செய்கின்றனர். இவ்வாறு பைஅத் செய்து விட்டால் அந்த மதகுரு என்ன சொன்னாலும், இஸ்லாத்திற்கு எதிராகவே சொன்னாலும் அதற்குக் கட்டுப்பட வேண்டும்; எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது என்று கூறி மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து வருகின்றனர். அறியாத மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் அடிமைகளைப் போல் வைத்துக் கொண்டு அவர்களைச் சுரண்டி வருகின்றனர்.
அது போல் சில இயக்கத்தினரும் அதன் தலைவர்களிடம் பைஅத் என்ற பெயரில் உறுதிமொழி வாங்குகின்றனர். தலைவர் எப்போது அழைத்தாலும் எதற்காக அழைத்தாலும் உடனே அந்த அழைப்பை ஏற்கவேண்டும். கொலை செய்யச் சொன்னாலும் யாரையாவது தாக்கச் சொன்னாலும் அதைச் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பைஅத்தை முறித்த மாபெரும் குற்றம் ஏற்படும் எனக்கூறி மூளைச் சலவை செய்கின்றனர்.
ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. "உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுக்கிறார்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான்.
நபிகள் நாயகத்திடம் எடுக்கும் உறுதிமொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதிமொழியாகும் என்று கூறுவதிலிருந்து இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம்.
இதுபோல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்திடம் நபித்தோழர்கள் "பைஅத்" எனும் உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உங்கக்ளுக்கு மாறுசெய்ய மாட்டோம் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்திடம் நபித்தோழர்கள் உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 60:12)
இவை யாவும் நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டவை. தூதரிடத்தில் எடுக்கும் உறுதிமொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதிமொழி தான்.
இத்தகைய உறுதி மொழிகளை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு தலைசிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித்தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை.
அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலிலீ (ரலி) ஆகியோரிடம் வந்து "திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்;" என்றெல்லாம் எந்த நபித்தோழரும் பைஅத் எடுக்கவில்லை.
இறைவனிடம் செய்கின்ற உறுதிமொழியை இறைத்தூதரிடம் செய்யலாம் என்ற அடிப்படையில்தான் நபிகள் நாயகத்திடம் பைஅத் செய்தார்கள்.
எனவே "நான் மார்க்க விஷயத்தில் சரியாக நடந்து கொள்வேன்" என்று நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எந்த மனிதரிடமும் உறுதிமொழி எடுப்பது இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான, நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துகின்ற, தங்களையும் இறைத் தூதர்களாகக் கருதிக் கொள்கின்ற வழிகேடர்களின் வழி முறையாகும்.
எந்த மதகுருவிடமும் போய் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்போம் என்று உறுதிமொழி எடுப்பதும், எந்த இயக்கத் தலைவரிடமும் போய் நீங்கள் என்ன சொன்னாலும் கட்டுப்படுவோம் என்று உறுதி மொழி எடுப்பதும் இஸ்லாத்தில் மாபெரும் குற்றமாகும். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தவிர வேறு எவருக்கும் கட்டுப்படுவதாக ஒருவர் உறுதி மொழி எடுத்தால் அவர் அல்லாஹ்வுடைய இடத்தை அல்லாஹ்வின் தூதருடைய இடத்தை அவர்களுக்கும் வழங்கிய வராவார். அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவருமாவார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுக்கும் பைஅத்தை நிறைவேற்றுவது மட்டுமே மார்க்கக் கடமை. அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இயன்றவரை அதை நிறைவேற்றுமாறு தான் பைஅத் எடுத்துள்ளனர்.
நீங்கள் சொல்வதை செவியுற்று கட்டுப்படுவேன் என்று நான் நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் உறுதி மொழி எடுத்தேன். அப்போது அவர்கள் "என்னால் இயன்றவரை" என்று சேர்த்துச் சொல்லுமாறு திருத்திக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல் : புகாரி 7204
நபிகள் நாயகத்திடம் எடுத்த உறுதி மொழியைக் கூட அப்படியே நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. நம்மால் இயன்ற அளவுக்குத் தான் நிறைவேற்ற வேண்டும் என்று நமக்கு நபிகள் நாயகம் கற்றுத்தந்திருக்க போலி ஆன்மிகவாதிகளும் போலித் தலைவர்களும் தங்களை நபிகள் நாயகத்தை விட மேலான நிலையில் வைக்க முயற்சிக்கின்றனர். இதன் மூலம் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றப் பார்க்கின்றனர்.
இப்படி யாரிடம் உறுதி மொழி எடுத்தாலும் அதை உடனடியாக முறிப்பது மார்க்கக் கடமையாகும். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதைவிடச் சிறந்ததைக் காணும் போது அந்தச் சத்தியத்தை முறிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அதைவிட சிறந்ததைக் கண்டால் சத்தியத்தை முறித்து விட்டு சிறந்ததைச் செய்வேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். பார்க்க : புகாரி 3133, 4385, 5518, 6649, 6721, 7555
அல்லாஹ்வுடைய இடத்திலும் அல்லாஹ்வின் தூதருடைய இடத்திலும் போலிகளை வைக்கும் வகையில் பைஅத் செய்தவர்கள் அதை நிறைவேற்றக் கூடாது. உடனடியாக அதில் இருந்து விடுபட வேண்டியது மார்க்கக் கடமையாகும்.
நபிகள் நாயகம் தவிர மற்றவர்களிடம் உறுதி மொழி எடுப்பதென்று சொன்னால் அது இரண்டு விஷயங்களில் எடுக்கலாம்.
ஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் போது உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று மக்கள் உறுதிமொழி கொடுக்கின்ற பைஅத். இது மார்க்கத்தில் உண்டு.
இந்த உறுதிமொழியை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கரிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமரிடம் செய்தார்கள்.
முழு அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் மட்டும் இவ்வாறு பைஅத் எடுப்பதற்கு அனுமதி இருக்கிறது. இது மார்க்கக் காரியங்களை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற பைஅத் அல்ல.
இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின் போது சம்பந்தப்பட்டவர்களிடம் செய்து கொள்ளும் உறுதிமொழி அனுமதிக்கப்பட்ட மற்றொரு பைஅத் ஆகும்.
எனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும், வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி - பைஅத் - எடுக்கலாம். தனக்குச் சொந்தமான ஒரு உடமை விஷயத்தில் ஒருவர் உறுதிமொழி எடுப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.
வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்கே சொந்தமானவை. இதற்கு இறைவனிடமோ, இறைவனால் அனுப்பப்பட்ட தூதரிடமோ மட்டும் தான் உறுதிமொழி எடுக்க முடியும். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள நம்மைப் போன்ற அடிமைகளிடம் இந்த உறுதிமொழியை எடுக்கலாகாது. அவ்வாறு எடுத்திருந்தால் அதை உடனடியாக அவர்கள் முறித்து விட வேண்டும்.
அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதரிடத்தில் உறுதிமொழி எடுப்பவர்கள் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கிறார்கள் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள இந்தச் சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கத் தக்கது.