27. வேதம் கொடுக்கப்பட்டோர் என்றால் யார்?
"வேதம் கொடுக்கப்பட்டோர்" என்ற சொல் யாரைக் குறிக்கும் என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையும் மட்டுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.
அனைத்து யூதர்களும், கிறித்தவர்களும் வேதக்காரர்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இது தவறாகும். ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட ஏனைய நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர் களுக்காகவே வழங்கப்பட்டன.
(பார்க்க: திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17, 32:23, 40:53, 43:59, 61:6)
இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன் என்று ஈஸா நபி கூறியதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 3:49, 5:72, 43:59, 61:6)
இஸ்ரவேலர் அல்லாதவர்கள் கிறித்தவர்களாக மாறியிருந்தாலும் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர் களாக முடியாது. ஏனெனில் இஞ்ஜீல் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக மக்கள் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் மட்டுமே அனுப்பப்பட்டார்கள்.
"மூஸா நபியவர்கள், இஸ்ரவேலர்களுக்கு மட்டும் அனுப்பபப்படவில்லை; மாறாக, இஸ்ரவேல் அல்லாத ஃபிர்அவ்ன் கூட்டத்தினருக்கும் அனுப்பப்பட்டார்கள். எனவே மூஸா நபிக்கு அருளப்பட்ட வேதம் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் உரியது அல்ல; வேதம் கொடுக்கப்பட்டோர் என்பது இஸ்ரவேலர்களை மட்டும் குறிக்காது" என்று சிலர் வாதிடுகின்றனர்.
இந்த அடிப்படையில் இன்றைய கிறித்தவர்களும் யூதர்களும் இஸ்ரவேலர்களாக இல்லாவிட்டாலும் அவர்களின் பெண்களை முஸ்லிம்கள் மணந்து கொள்ளலாம்; அவர்கள் அறுத்ததை உண்ணலாம் என்றும் கூறுகின்றனர்.
மூஸா நபியவர்கள் ஆரம்பத்தில் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமின்றி ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்பது உண்மையே!
ஆனால் ஃபிர்அவ்னும், அவனது கூட்டத்தினரும் அழிக்கப்படும் வரை மூஸா நபியவர்களுக்கு தவ்ராத் வேதம் அருளப்படவில்லை. ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட பின்பே தவ்ராத் வேதத்தை அல்லாஹ் அருளினான். அவ்வாறு அருளும் போது, தவ்ராத் இஸ்ரவேலர்களுக்கு உரியது என்று கூறியே அருளினான். இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
மூஸா நபியையும், ஹாரூன் நபியையும் அல்லாஹ் ஃபிர்அவ்னிடம் அனுப்பும் போது எந்த வேதத்தையும் அவர்களுடன் கொடுத்து அனுப்பவில்லை. சில அற்புதங்களைக் கொடுத்து பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு அனுப்பி வைத்தான்.
மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்தினரிடமும் பிரச்சாரம் செய்கின்றார்கள். மூஸா நபிக்கும், மந்திரவாதிகளுக்கும் போட்டி நடத்தப்படுகிறது.
அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.
இஸ்ரவேல் சமுதாயத்தை ஃபிர்அவ்ன் கொடுமைப்படுத்துகின்றான். மூஸா நபியும் அவர்களின் சமுதாயமும் அதைத் தாங்கிக் கொள்கின்றனர்.
அப்போதும் வேதம் அருளப்படவில்லை.
ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் பஞ்சம், கனமழை, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் போன்றவற்றால் பல விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.
பின்னர் மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் ஊரை விட்டே ஓடுகின்றனர். ஃபிர்அவ்ன் விரட்டி வருகின்றான். முடிவில் மூஸா நபியும், அவர்களின் சமூகத்தினரும் காப்பாற்றப்படுகின்றார்கள். ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.
அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.
இவ்வளவு நிகழ்ச்சிகளும் நடந்த பிறகு தான் மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான்.
ஏழாவது அத்தியாயம் 103 முதல் 150 வரையுள்ள வசனங்களைச் சிந்தித்தால் இந்த உண்மையை விளங்கலாம்.
103வது வசனம் முதல் 141வது வசனம் வரை மூஸா நபியின் பிரச்சாரம், சோதனை, ஃபிர்அவ்ன் அழிவு போன்றவற்றைக் கூறிவிட்டு 142 முதல் 145 வரை அவருக்கு வேதம் வழங்கப்பட்டதை அல்லாஹ் கூறுகின்றான்.
எவ்வித வேதமும் இல்லாமல் நீண்ட நெடுங்காலம் மூஸா நபியும், ஹாரூன் நபியும் பிரச்சாரம் செய்து வந்தனர்.
மூஸா நபிக்கு தவ்ராத் வழங்கப் படுவதற்கு முன் அவர்கள் இஸ்ரவேலருக்காகவும், இஸ்ரவேலர் அல்லாத ஃபிர்அவ்ன் சமுதாயத்துக்காகவும் தூதராக அனுப்பப்பட்டாலும் ஃபிர் அவன் அழிக்கப்பட்டு தவ்ராத் வழங்கப்பட்ட போது அது இஸ்ரவேலர்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டது என்பதைப் பல்வேறு வசனங்களில் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.
இதே போன்று ஈஸா நபிக்கு அருளப்பட்ட இஞ்சீல் வேதமும் இஸ்ரவேலர்களுக்காகவே அருளப்பட்டது என்பதையும் திருக்குர்ஆன் கூறுகின்றது.
(பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6)
இஸ்ரவேல் அல்லாத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது.
எனவே "வேதம் கொடுக்கப்பட்டவர்களைத் திருமணம் செய்யலாம்; அவர்கள் அறுத்ததை உண்ணலாம்" என்ற சட்டம் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்ரவேலர்கள் அல்லாத யூத, கிறித்தவர்கள் வேதம் கொடுக்கப்பட்டோர் என்ற பட்டியலில் இடம் பெற மாட்டார்கள்.
(மேலும் விபரங்களுக்கு இதே பகுதியில் 137, 138 ஆகிய குறிப்புகளைக் காண்க).