156. நபிக்கு இரு மடங்கு வேதனையா?

இவ்வசனத்தில் (17:75), நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீய வழி செல்வோருக்குச் சார்பாக இருந்திருந்தால் அவர்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் இரு மடங்கு வேதனையை சுவைக்கச் செய்திருப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிக் கட்டத்தில் நோய் வாய்ப்பட்ட போது தாம் இரு மடங்கு துன்பத்தை அனுபவிப்பதாகக் குறிப்பிட்டனர். (புகாரி 5648, 5660, 5667)

இது திருக்குர்ஆனுக்கு எதிரானது என்று சிலர் கருதுகின்றனர்.

தண்டிக்கும் முகமாக இரு மடங்கு வேதனை தருவதையே அல்லாஹ் இவ்வசனத்தில் குறிப்பிடுகிறான். சோதிப்பதற்காகவும், மறுமையில் மகத்தான பரிசை வழங்குவதற்காகவும் இவ்வுலகில் நல்லவர்களுக்குப் பல மடங்கு வேதனை தருவது இவ்வசனத்திற்கு எதிரானது அல்ல. அய்யூப் நபி உள்ளிட்ட பல நபிமார்கள் இரு மடங்கு அல்ல, பல மடங்கு வேதனைகளை இவ்வுலகில் அனுபவித்ததற்குக் குர்ஆனில் சான்று உள்ளது.

மேலும், இவ்வசனத்தில் இவ்வுலகிலும், மறுமையிலும் என்று இறைவன் குறிப்பிடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் மட்டுமே இரு மடங்கு துன்பத்தை அனுபவித்தார்கள். மறுமையில் அவர்களுக்கு இத்தகைய துன்பம் அளிக்கப்பட மாட்டாது. எனவே, இரு உலகிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு மடங்கு துன்பத்தை அனுபவித்தார்கள் என்று கூறினால் தான் அந்த ஹதீஸ்கள் இவ்வசனத்திற்கு எதிராக அமையும்.