94. அசைக்க முடியாத கொள்கை உறுதி

ஒருவர் ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்கிறார் என்றால் அக்கொள்கையில் அவருக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறான் என்றார்கள். கடவுளுக்கு மகன் கிடையாது எனவும், ஈஸா நபியவர்கள் கடவுளின் மகன் கிடையாது எனவும் அடித்துச் சொன்னார்கள்.

இயேசு இறைவனின் மகன் என்று வாதிட்டவர்களுக்குத் தமது கொள்கையில் இருந்த நம்பிக்கையை விட ஆயிரம் மடங்கு அதிகமான நம்பிக்கை, அதற்கு எதிரான கொள்கையில் நபிகள் நாயகத்துக்கு இருந்தது.

இதனால் தான் இவ்வசனத்தில் (3:61) இது பற்றி இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. "நானும், எனது மனைவி மக்களுடன் வருகிறேன். நீங்களும் உங்கள் மனைவி மக்களுடன் வாருங்கள்! இரு சாராரில் யார் தவறான கொள்கையில் இருக்கிறார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை இருவரும் சேர்ந்து வேண்டுவோம்" என நபிகள் நாயகம் (ஸல்) அழைப்பு விடுத்தார்கள்.

இந்த அறைகூவலை அன்றைக்கு இருந்த கிறித்தவர்கள் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதிலிருந்து நபிகள் நாயகத்துக்கு தமது கொள்கையின் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை உறுதி செய்யப்படுகிறது.