70. மஹரை விட்டுக் கொடுத்தல்

திருமணம் செய்து மனைவியைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் கொடுப்பது அவசியம் என்றாலும் "முழு மஹரையும், ஏன் அதையும் விட அதிகமாகவே தருகிறேன்" என்று ஆண்கள் விட்டுக் கொடுக்கலாம்.

"நீங்கள் விட்டுக் கொடுப்பதே சிறந்தது" என்ற வாசகம் ஆண்களைக் குறிக்கும் வாசகமாகும். (அரபு மொழியில் முன்னிலையிலும் ஆண்பால் பெண்பாலுக்கு தனிச் சொற்கள் உள்ளன. இங்கே ஆண்பால் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது). எனவே ஆண்கள் விட்டுக் கொடுப்பதே சிறந்ததாகும் என்று ஆர்வமூட்டப்படுகிறது.

"நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்" என்பது ஆண்களுக்கு இருக்கும் உயர்வையே குறிக்கிறது. எனவே ஆண்கள் விட்டுக் கொடுப்பதே சிறந்ததாகும் என்பதே இதன் கருத்து.

இரு பாலரையும் இது குறிப்பதாக பெரும்பாலோர் விளக்கம் கூறியிருந்தாலும் இலக்கண அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும் அது தவறாகும். ஆண்கள் தான் இதில் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் (2:237) அறிவுரையாகும்.