46. கலீஃபா எனும் சொல்லுக்குப் பொருள்
கலீஃபா எனும் அரபிச் சொல் "ஒருவர் இறந்த பின், அல்லது அவர் செயலற்றுப் போன பின் அவரது இடத்தைப் பெறுபவர்" என்ற பொருளில் குர்ஆனில் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு பெண்ணின் கணவர் இறந்த பின் இன்னொருவரை அப்பெண் மணந்தால் இரண்டாம் கணவரை முதல் கணவரின் கலீஃபா எனலாம். முதல் கணவரின் இடத்தை அவர் நிறைவு செய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். ஹதீஸ்களிலும் இதற்குச் சான்று உண்டு. (நூற்கள்: முஸ்லிம் 1525, அஹ்மத் 25417)
மனிதன் வழிவழியாகப் பெருகி வருகிறான். இவ்வாறு வழிவழியாகப் பல்கிப் பெருகுபவர் என்ற பொருளிலும் கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை கலீஃபா எனக் கூறியது இந்தக் கருத்தில் தான். அதனால் தான் ஒரு கலீஃபாவைப் படைக்கப் போகிறேன் என்று அல்லாஹ் கூறியவுடன் ஒரே ஒரு மனிதர் மட்டும் படைக்கப்பட்டால் எப்படி இரத்தம் சிந்த முடியும் என்று எண்ணாமல் "அவர்கள் இரத்தம் சிந்துவார்களே" என்று வானவர்கள் கூறினர்.
இந்தச் சொல்லிலிருந்து ஆதமுக்கு ஒரு துணைவி படைக்கப்படுவார் என்பதையும், அவ்விருவர் வழியாக மக்கள் பெருகி சண்டையிட்டுக் கொள்வார்கள் என்பதையும் வானவர்கள் விளங்கிக் கொண்டனர்.
எனவே ஆதம் (அலை) அவர்களைப் பற்றிக் கூறும் இடங்களில் வழி வழியாகப் பல்கிப் பெருகுபவர் (தலை முறை) என்ற பொருளிலும் மற்றவர்களைக் குறித்து கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்படும் போது முந்தையவர்களின் இடத்தை நிரப்பியவர்கள் என்ற பொருளிலும் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதனுக்கு மற்றொரு மனிதன் பிரதிநிதியாக இருக்க முடியும் (திருக்குர்ஆன் 7:142).
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களின் பிரதிநிதியாக இருந்து செயல்பட்ட அபூபக்ர் (ரலி) அவர்களை கலீஃபா (நபிகள் நாயகத்தின் பிரதிநிதி) என்று அழைத்ததும் இந்தப் பொருளில் தான்.
இறைவன் மறைய மாட்டான், செயலற்றுப் போகவும் மாட்டான் என்பதால் அவனுக்குப் பிரதிநிதியாக யாரும் இருக்க முடியாது.
அல்லாஹ் மனிதனுக்குப் பிரதிநிதியாவான். (நூல்: முஸ்லிம் 2392) அல்லாஹ்வுக்கு மனிதன் பிரதிநிதியாக முடியாது.
கலீஃபாவுக்கு அல்லாஹ்வின் பிரதிநிதி என்று சிலர் மொழி பெயர்த்திருப்பது மிகவும் தவறாகும்.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:30, 6:133, 6:165, 7:69, 7:74, 7:129, 7:142, 7:150, 7:169, 10:14, 10:73, 11:57, 19:59, 24:55, 27:62, 35:39, 38:26, 43:60, 57:7)