63. மனைவியர் விளை நிலங்கள்

நபிகள் நாயகத்தின் காலத்து யூதர்கள் சில முறைகளில் தாம்பத்திய உறவு கொள்ளக் கூடாது என்று கருதி வந்தனர். அவ்வாறு உறவு கொண்டால் குழந்தை மாறுகண்ணுடையதாகப் பிறக்கும் எனவும் பிரச்சாரம் செய்து வந்தனர். (நூல்: முஸ்லிம் 2592)

இந்தத் தவறான நம்பிக்கைக்கு எதிராகவே இவ்வசனம் (2:223) அருளப்பட்டது. மேலும் குறிப்பிட்ட நாட்களில் தான் இல்லறம் நடத்த வேண்டும் என்பன போன்ற மூட நம்பிக்கைகளையும் இவ்வசனம் எதிர்க்கின்றது. "நீங்கள் விரும்பியவாறு" என்ற சொற்றொடரி லிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

இது தவிர இன்றைய நவீன உலகில் ஏற்பட்டுள்ள முக்கியமான பிரச்சனைக்கும் கூட இவ்வசனம் தீர்வு கூறுகின்றது.

குழந்தை பெற முடியாத நிலையில் செயற்கை முறையில் கருவூட்டப் பல வழிகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அனுமதிக்கப்பட்டது எது, தடுக்கப்பட்டது எது என்பதற்கு இவ்வசனம் தீர்வு கூறுகின்றது.

"உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள்" என்ற சொற்றொடர் மூலம் கணவனின் உயிரணுவை எடுத்து செயற்கை முறையில் மனைவிக்குச் செலுத்தலாம் என்றும், கணவன் அல்லாத மற்றவர்களின் உயிரணுவை எடுத்து இவ்வாறு செய்வது கூடாது என்றும் விளங்கலாம்.

குடும்ப வாழ்க்கை குறித்த பல விஷயங்கள் இந்தச் சிறிய சொற்றொடருக்குள் அமைக்கப்பட்டுள்ளதை அறியலாம்.