116. படிப்படியாக ஒழிக்கப்பட்ட போதைப் பழக்கம்

எப்போதும் குடி போதையில் இருந்த அன்றைய மக்களுக்கு, மது அருந்துதல் முதலில் தடுக்கப்படாமல் இருந்தது. (பார்க்க: திருக்குர்ஆன் 16:67)

பின்னர் படிப்படியாக இது குறித்த தடைகள் இறங்கின.

போதையாக இருக்கும் போது தொழக் கூடாது என்ற கட்டளை ஆரம்பத்தில் பிறப்பிக்கப்பட்டது. (பார்க்க: திருக்குர்ஆன் 4:43)

தொழுகையின் போது போதையாக இருக்கக் கூடாது என்றால் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன் குடிப்பதை நிறுத்த வேண்டும். ஐந்து வேளைத் தொழுகையின் போதும் இவ்வாறு நிறுத்துவதால் குடிப் பழக்கம் பெருமளவு குறைந்தது.

பின்னர் குடிக்காமல் இருப்பதே நல்லது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. (பார்க்க: திருக்குர்ஆன் 2:219)

அதன் பின்னர் அறவே மது அருந்தக் கூடாது என்று முழுமையாகத் தடை செய்யப்பட்டது. (பார்க்க: திருக்குர்ஆன் 5:90-91)