225. வேறு வானங்களும், வேறு பூமியும்
இவ்வசனங்களில் (11:107,108) "வானங்களும் பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம் நல்லவர்கள் சொர்க்கத்திலும், கெட்டவர்கள் நரகத்திலும் இருப்பார்கள்" என்று சொல்லப்படுகிறது.
அதாவது வானம், பூமி எப்படி அழியாதோ அவ்வாறு சொர்க்கவாசி களுக்கும் நரகவாசிகளுக்கும் அழிவில்லை என்ற கருத்தை இது தருகிறது.
உலகம் அழிக்கப்படும் போது வானங்கள், பூமி உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 55:26, 27)
மேலோட்டமாகப் பார்க்கும் போது மேற்கண்ட (11:107, 108) வசனங்கள் இதற்கு முரணாக இருப்பது போல் தெரிகிறது.
இன்னும் சில வசனங்களை நாம் ஆய்வு செய்தால் அவை இந்த முரண்பாட்டை நீக்கும் வகையில் அமைந்துள்ளதைக் காண முடிகின்றது.
இந்தப் பூமி வேறு பூமியாகவும், வானங்கள் வேறு வானங்களாகவும் மாற்றப்படும் என்ற கருத்தில் அமைந்த வசனங்களே அவை. (பார்க்க: திருக்குர்ஆன் 14:48, 21:104, 39:67)
இப்போதுள்ள வானம், பூமி ஆகியவை அழிக்கப்பட்ட பின், மீண்டும் உருவாக்கப்படும் வானமும், பூமியும் நிலையானதாக இருக்கும். அந்த வானம், பூமி நிலையாக இருக்கும் காலமெல்லாம் சொர்க்கம், நரகமும் நிலையாக இருக்கும் என்பதையே இவ்வசனங்கள் (11:107, 108) கூறுகின்றன.