128. குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ

வேதத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறும் இவ்வசனம் (4:105) மற்றொரு முக்கியமான செய்தியையும் கூறுகிறது.

விளக்கம் தேவைப்படக் கூடிய ஒவ்வொரு வசனத்திற்கும் இது தான் விளக்கம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டுவான். எதை அல்லாஹ் காட்டுகின்றானோ அதன்படி அவர்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்பது தான் அந்தச் செய்தி.

நபிகள் நாயகத்தின் விளக்கம் ஏதும் அவசியம் இல்லை என்றால் இவ்வாறு இறைவன் கூறியிருக்க மாட்டான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் எதைக் காட்டினானோ அது எது? தமக்கு இறைவன் காட்டித் தந்ததை அடிப்படையாக வைத்து நபிகள் நாயகம் (ஸல்) வழங்கிய தீர்ப்புக்கள் யாவை? என்பதைச் சிந்திப்பவர்கள் ஹதீஸ்களை மறுக்க மாட்டார்கள்.

குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் என்பதற்கான மற்றுமொரு சான்றாக இது அமைந்துள்ளது.