37.நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது

இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்பதைச் சிலர் சரியாக விளங்காமல் இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டி வருகின்றனர். வேறு சிலர் இறைத் தூதர்கள் அனைவரும் எல்லா வகையிலும் சமமானவர்கள் எனக் கூறி வருகின்றனர். இவ்விரு கருத்துக்களுமே தவறாகும்.

எல்லா இறைத் தூதர்களையும் சமமான தகுதிகளுடன் அல்லாஹ் அனுப்பவில்லை. ஒருவருக்கு வழங்காத தகுதிகளை மற்றவருக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். அல்லாஹ் வழங்கிய அந்தச் சிறப்புக்களை நாமும் எடுத்துக் கூறுவது பாகுபாடு காட்டுவதாக ஆகாது.

ஈஸா நபி தந்தையின்றி பிறந்தார்கள். (பார்க்க: திருக்குர்ஆன் 3:45, 3:47, 3:59, 4:171, 19:19-21, 21:91, 66:12)

ஈஸா நபி இன்று வரை உயிருடன் இருக்கிறார்கள். (பார்க்க: திருக்குர்ஆன் 4:157-159, 5:75, 43:61)

"இந்தச் சிறப்பு வேறு யாருக்கும் இல்லை" எனக் கூறுவது பாகுபாடு காட்டுவதாகாது. ஏனெனில் இந்தச் சிறப்பை அல்லாஹ் தான் அவருக்கு வழங்கினான்.

"சில தூதர்களை மற்றும் சிலரை விட நாம் சிறப்பித்துள்ளோம்" என்று இறைவன் கூறுகிறான். (பார்க்க: திருக்குர்ஆன் 2:253, 17:55)

அது போல் இப்ராஹீம் நபியின் குடும்பத்தாருக்கு வழங்கியது போன்ற பாக்கியங்களை வேறு எவருக்கும் அல்லாஹ் வழங்கவில்லை எனக் கூறுவதும் பாகுபாடு காட்டுவதாகாது.

(பார்க்க: திருக்குர்ஆன் 2:124, 2:125, 4:125, 11:73, 16:120)

ஸுலைமான் நபிக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரம், உலகில் எந்த நபிக்கும் வழங்கப்படவில்லை எனக் கூறுவதும் பாகுபாடு காட்டுவதாகாது. (பார்க்க: திருக்குர்ஆன் 21:81, 21:82, 27:16-18, 27:40, 34:12, 38:35).

அது போல் இறுதி நபியாகவும், அகில உலக நபியாகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். இது யாருக்கும் வழங்காத சிறப்பு.

(பார்க்க: திருக்குர்ஆன் 4:79, 6:19, 7:158, 9:33, 21:107 33:40, 34:28, 48:28, 61:9)

மகாமு மஹ்மூத் (பார்க்க: திருக்குர்ஆன் 17:79)

ஹவ்லுல் கவ்ஸர் (பார்க்க: திருக்குர்ஆன் 108:1)

மறுமையில் முதல் பரிந்துரை (பார்க்க: புகாரி: 99, 335, 438, 3340, 4476, 4712, 6304, 6305, 6565, 6566, 6570, 7410, 7440, 7474, 7509, 7510)

இது போன்ற சிறப்புக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான். இதைக் கூறுவதும் பாகுபாடு காட்டுவதாகாது.

அப்படியானால் பாகுபாடு காட்டுவது என்பதன் பொருள் என்ன?

""இவர் தான் பணியைச் சிறப்பாகச் செய்தார். அவர் சிறப்பாகச் செய்ய வில்லை" என்று கூறினால் தான் அது பாகுபாடு காட்டும் குற்றமாக அமையும். அல்லாஹ் தகுதியானவர்களைத் தான் தேர்வு செய்வான் என்ற அடிப்படை யையே இது தகர்த்து விடும். எனவே "ஒவ்வொரு நபியும் தமக்கு வழங்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தார்கள்" என்று தான் நாம் நம்ப வேண்டும்.

மூஸா நபியின் இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் இதைவிடச் சிறப்பாகச் செய்திருப்பார்கள் என்று கூறினால் அது பாகுபாடு காட்டியதுடன் இறைவனின் தேர்வைக் குறை கூறிய குற்றமாகவும் அமையும்.

இது போன்ற பாகுபாடுகள் காட்டுவது மாபெரும் குற்றமாகும் என்பதே இதன் கருத்து.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை வேறு நபியிடம் அல்லாஹ் ஒப்படைத்திருந்தால் அதை அவரும் சிறப்பாகச் செய்திருப்பார்" என்பது தான் முஸ்லிம்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நபியும் தமக்கு வழங்கப்பட்ட பணியில் எள்முனையளவும் குறை வைக்கவில்லை; விலை போக வில்லை; மனிதர்களுக்கு அஞ்சவில்லை; மறுமையை விட இவ்வுலகைப் பெரிதாக நினைக்கவில்லை. இப்படி எல்லாத் தூதர்களுமே சிறந்து விளங்கினார்கள் என்று நம்ப வேண்டும் என்பது தான் இதன் கருத்து.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:136, 2:285, 3:84)