386. விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள்
விவாகரத்துச் செய்யும் உரிமையை இறைவன் ஏன் வழங்கினான் என்பதையும் அதற்கான ஒழுங்குகளையும் 66வது குறிப்பில் காண்க!
இவ்வசனத்தில் (65:2) விவாகரத்துக்குரிய மற்றொரு முக்கிய நிபந்தனையை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாகரத்துச் செய்யும் போது நேர்மையான இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியம் என்பதே அந்த நிபந்தனை.
தொலைபேசியில் விவாகரத்து, தபாலில் விவாகரத்து என்றெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் விவாகரத்துச் செய் வதையும், அதை மார்க்க அறிஞர்கள் சரி காண்பதையும் நாம் காண்கிறோம்.
தபாலில் எழுதுவதற்கும், தொலை பேசியில் பேசுவதற்கும் இரண்டு சாட்சிகள் இருந்தால் போதும் என்று இதைச் சிலர் விளங்கிக் கொள்கின்றனர்.
விவாகரத்துச் செய்பவனையும், செய்யப்பட்டவளையும், இருவருக்கிடையே விவாகரத்து நடப்பதையும் கண்ணால் காண்பவர் தான் அதற்குச் சாட்சியாக இருக்க முடியும்.
எனவே எதிர்தரப்பில் உள்ள பெண் யார் என்பது தெரியாமல், அவள் இவனுக்கு மனைவி தானா என்பதையும் அறியாமல், தன் மனைவியுடன் தான் தொலைபேசியில் பேசுகிறானா என்பதையும் அறியாமல் எவரும் சாட்சியாக முடியாது.
வீடியோ கான்பரன்சிங் மூலம் இரண்டு சாட்சிகளை வைத்து விவாகரத்துச் செய்தால் செல்லுமா என்ற சந்தேகமும் சிலருக்கு உள்ளது. வீடியோ மூலம் ஒருவன் விவாகரத்துச் செய்வதையும் அதற்கு இரண்டு பேர் சாட்சிகளாக இருப்பதையும் இங்கிருந்து கொண்டே பார்க்க முடிகிறது; எனவே இது செல்லும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இது தவறாகும். ஏனெனில், இதை முழுமையாக அவர்கள் ஆய்வு செய்யவில்லை.
ஒரு திரையில், தலாக் சொல்பவனையும், அதற்குச் சாட்சியான இருவரையும் தான் நாம் பார்க்கிறோம். அவர்கள் எந்தப் பின்னணியில் இருக்கிறார்கள்? திரையில் தென்படாத வகையில் யாரேனும் மிரட்டுவதால் அவ்வாறு சொல்கிறார்களா? சுயநினைவுடன் அதைச் சொல்கிறார்களா? அல்லது கிராபிக்ஸ் மூலம் அதில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? அது நேரடி ஒளிபரப்பா? அல்லது பதிவு செய்யப்பட்டதை ஒளிபரப்புகிறார் களா? என்பது போன்ற பல சந்தேகங்கள் இதில் இருப்பதால் இதுவும் செல்லத்தக்கதல்ல.
எவ்வித நிர்ப்பந்தமுமின்றி நேர்மை யான இரு சாட்சிகளுக்கு முன் சொல்வது தான் தலாக்கின் சரியான வழிமுறையாகும்.
எனவே இந்த விதியைக் கவனத்தில் கொண்டால் அவசரப்பட்டுச் செய்யும் பல விவாகரத்துக்கள் தவிர்க்கப்படும்.