இணை கற்பித்தல்:
அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. 'அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை' என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும், ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகளும் ஆற்றல்களும் அல்லாஹ்வுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்த வொன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் என்று இஸ்லாம் கூறுகிறது.
இவ்வாறு இறைவனுக்கு இணை கற்பித்தல், மனிதர்கள் செய்கின்ற குற்றங்களிலேயே மிகவும் பெரிய குற்றம் எனவும், இக்கொள்கையிலிருந்து திருந்திக் கொள்ளாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை; என்றென்றும் நரகத்தில் கிடப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.
(இணை கற்பித்தல் குறித்து அதிகமான விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை - அல்லாஹ்வை நம்புதல் தலைப்பில் காண்க!)
சொர்க்கம் & சொர்க்கச் சோலைகள்:
இவ்வுலகம் முழுமையாக அழிக்கப்பட்ட பின் அனைவரும் இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். இவ்வுலகில் இறைவனையும், இறைத் தூதர்களையும் ஏற்று அவர்கள் காட்டிய வழியில் நடந்த நல்லோர்க்கு இறைவன் அளிக்கும் பரிசே சொர்க்கமாகும்.
சொர்க்கத்தில் நுழையும் ஒருவர் அதில் நிரந்தரமாக இருப்பார். விரும்பிய அனைத்தும் அவருக்கு அங்கே கிடைக்கும். கவலையோ, சோர்வோ, சங்கடமோ, மன உளைச்சலோ இல்லாமல் சொர்க் கத்தில் நுழைந்தவர்கள் இன்பத்தை அனுபவிப்பார்கள்.
(சொர்க்கம் குறித்த முழுமையான விவரங்கள் அறிய பொருள் அட்டவணையில் கொள்கை எனும் தலைப்பில் கியாமத் நாள் எனும் உள் தலைப்பில் காண்க!)
தூதர்கள்:
மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களிலிருந்தே தகுதியானவர்களை இறைவன் தேர்வு செய்து வாழ்க்கை நெறியைக் கொடுத்து அனுப்புவான். இவ்வாறு அனுப்பப்படுவோரை இறைத் தூதர்கள் என இஸ்லாம் குறிப்பிடுகிறது.
முதல் மனிதரிலிருந்து இறுதித் தூதராகிய நபிகள் நாயகம் வரை ஏராளமான தூதர்கள் உலகின் பல பாகங்களுக்கும், பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கும் நல்வழி காட்ட அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களின் எண்ணிக்கை குறித்து திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகத்தின் ஆதாரப்பூர்வமான பொன் மொழிகளிலோ குறிப்பிடப் படவில்லை.
தூதர்களாக அனுப்பப்படுவோர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே வாழ்ந்தனர். தூதர்களாக நியமிக்கப்பட்டதால் அவர்களுக்கு இறைத் தன்மை வழங்கப்படாது. இறைவ னிடமிருந்து செய்தி அவர்களுக்குக் கிடைக்கும் என்பதே அவர்களுக்குரிய முக்கிய சிறப்பாகும்.
நபிமார்கள் என்பதும் தூதர்கள் என்பதும் இருவேறு தகுதிகளை உடையது எனச் சிலர் கூறுகின்றனர். இது ஆதாரமற்றதாகும்.
(இதுபற்றி விரிவான விபரங்கள் பொருள் அட்டவனை பகுதியில் கொள்கை எனும் தலைப்பில் நபிமார்கள், தூதர்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)
தொழுகை:
முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமைகளில் முக்கியமான கடமை தொழுகையாகும்.
தொழுகை என்பது சிறிது நேரம் நின்றும், சிறிது நேரம் குனிந்தும், சிறிது நேரம் நெற்றியை நிலத்தில் வைத்தும், சிறிது நேரம் அமர்ந்தும் ஒவ்வொரு நிலையிலும் ஓத வேண்டியவைகளை ஓதியும் நிறைவேற்றப்படும் வணக்கமாகும்.
ஒவ்வொரு நாளும் ஐந்து முறை ஐந்து நேரங்களில் தொழுகையை நிறைவேற்றி ஆக வேண்டும். இது தவிர அவரவர் விருப்பப்பட்டு தமக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தொழுது இறைவனின் அன்பைப் பெறலாம்.
(இது பற்றி மேலும் விவரம் பொருள் அட்டவணை பகுதியில் வணக்கங்கள் என்ற தலைப்பில் தொழுகை எனும் உள் தலைப்பில் காண்க!)
நயவஞ்சகர்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த ஊரான மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா எனும் நகரில் தஞ்சமடைந்தார்கள். அங்கே அவர்களின் பிரச்சாரத்திற்கு நல்ல பலன் கிடைத்ததால் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இதனால் அதிகாரமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வந்து சேர்ந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வருவதற்கு முன் ஆட்சியையும், அதிகாரத்தையும் அனுபவித்து வந்த சிலர், உளப் பூர்வமாக இஸ்லாத்தை ஏற்காமல் சுய நலனுக்காகவும், முஸ்லிம்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போல் நடித்து வந்தனர்.
இவர்கள் முஸ்லிம்களைப் போலவே பள்ளிவாசலில் வந்து தொழுகையிலும் பங்கெடுப்பார்கள். போருக்கும் புறப்படுவார்கள். ஆயினும் முஸ்லிம்கள் குறித்த செய்திகளை மக்காவில் உள்ள முஸ்லிம்களின் எதிரிகளுக்கு வழங்கு வதற்காகவே இவ்வாறு முஸ்லிம்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முஸ்லிம்களைப் போலவே கலந்து கொள்வார்கள்.
இவர்களைத் தான் குர்ஆன் நயவஞ்சகர்கள் எனக் குறிப்பிடுகிறது.
(நயவஞ்சகர்களின் ஏராளமான சதி வேலைகளை விரிவாக அறிந்து கொள்ள பொருள் அட்டணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நயவஞ்சகர்கள் எனும் உள் தலைப்பில் காணலாம்)
நம்பிக்கை கொள்வது & நம்பிக்கை கொண்டோர்:
திருக்குர்ஆன் அதிகமான இடங்களில் 'நம்பிக்கை கொள்வது' 'நம்பிக்கை கொண்டோர்' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது.
பொதுவாக நம்பிக்கை கொள்வது என்பதை நாம் என்ன பொருளில் புரிந்து கொள்வோமோ அந்தப் பொருளில் இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.
மாறாக, குறிப்பிட்ட சில விஷயங்களை உளமாற ஏற்று நம்பிக்கை கொள்வதையே இஸ்லாம் குறிப்பிடுகின்றது.
அல்லாஹ், வானவர்கள், இறைத் தூதர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்கள், மறுமை நாள், அங்கு நடக்கும் விசாரணை, மறுமை நாளுக்கு முன் நடக்கும் அமளிகள், நல்லோர்க்குக் கிடைக்கும் சொர்க்கம் எனும் பரிசு, தீயோர்க்குக் கிடைக்கும் நரகம் எனும் தண்டனை, மண்ணறை வேதனை, விதி ஆகியவற்றை நம்புவதையே 'நம்பிக்கை கொள்வது' என இஸ்லாம் கூறுகின்றது.
(இதுபற்றி விரிவான விபரங்கள் பொருள் அட்டவனை பகுதியில் கொள்கை எனும் தலைப்பில் காண்க!)
நரகம்:
அல்லாஹ்வுடைய மற்றும் அவனுடைய தூதர்களின் வழியைப் பின்பற்றாத மக்களுக்கு மறுமையில் விசாரணைக்குப் பிறகு வழங்கப்படும் தண்டனையே நரகம் எனப்படும்.
சில குற்றங்கள் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.
இக்குற்றங்களைத் தவிர ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இறை வனின் கருணையால் மன்னிக்கப்பட்டால் சொர்க்கம் செல்வார்கள். மன்னிக்கப்படாவிட்டால் தங்களது தவறுகளுக்கேற்ப தண்டனைகளை அனுபவித்து விட்டுப் பிறகு சொர்க்கம் செல்வார்கள்.
(இது குறித்து பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில் நரகம் எனும் உள் தலைப்பில் காண்க!)
நோன்பு:
வைகறையிலிருந்து சூரியன் மறையும் வரை இறைவனுக்காக உண்ணாமலும், பருகாமலும் குடும்ப வாழ்வில் ஈடுபடாமலும் இருக்கும் கட்டுப்பாடே நோன்பு எனப்படும்.
ஆண்டுதோறும் ரமலான் எனும் மாதம் முழுவதும் இவ்வாறு நோன்பு நோற்பது கட்டாயமாகும். இது தவிர சில குற்றங்களுக்கான பரிகாரமாகவும் நோன்பு கூறப்பட்டுள்ளது.
(இதுபற்றி மேலும் விவரம் பொருள் அட்டவணை பகுதியில் வணக்கங்கள் என்ற தலைப்பில் நோன்பு எனும் உள் தலைப்பில் காண்க!)
வானவர்கள்:
இறைவனது படைப்புகளில் வானவர்கள் என்றொரு இனம் இருப்பதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
இவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். இவர்களில் ஆண் பெண் என்ற பால் வேற்றுமை இல்லை. எனவே இனப் பெருக்கம் செய்ய மாட்டார்கள். இவர்களை இறைத்தூதர்கள் தவிர மற்ற மனிதர்கள் காண இயலாது.
ஏக இறைவன் தனித்தே தனது காரியங்களை ஆற்றவல்லவன் என்றாலும் வானவர்கள் என்ற இனத்தைப் படைத்து அவர்கள் மூலம் பல்வேறு வேலைகளை வாங்குகிறான்.
(வானவர்கள் பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில் வானவர்கள் எனும் உள் தலைப்பில் காண்க)