57. ஹஜ்ஜின் மாதங்கள்

ஹஜ்ஜுடைய மாதங்கள் பற்றிக் கூறும் போது (2:197) தெரிந்த மாதங்கள் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

ஹஜ்ஜுடைய மாதங்கள் எவை என்று மனிதர்கள் தாமாக முடிவு செய்ய முடியாது. அந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது.

ஹஜ்ஜின் மாதங்கள் எவை என்று திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அப்படி இருந்தும் "தெரிந்த மாதங்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஹஜ்ஜுடைய காலம் பற்றிக் கூறும் போது மாதங்கள் என்று பன்மையாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மொழியில் ஒன்றைக் குறிக்க ஒருமை என்ற சொல் அமைப்பும், ஒன்றுக்கு மேற்பட்டதைக் குறிக்க பன்மை என்ற சொல் அமைப்பும் உள்ளன. ஆனால் அரபு மொழியில் இருமை என்ற ஒரு சொல் அமைப்பு மேலதிகமாக உள்ளது. தமிழில் ஒன்றுக்கு மேற்பட்டதை பன்மை என்போம். ஆனால் அரபு மொழியில் இரண்டுக்கு மேற்பட்டதைத் தான் பன்மை என்பார்கள்.

ஹஜ்ஜுக்குரிய காலம் சில மாதங்கள் என்றால் இரண்டுக்கு மேற்பட்ட மாதங்கள் எனப் பொருள். குறைந்தது மூன்று மாதங்களாவது இருந்தால் தான் மாதங்கள் எனப் பன்மையாகக் கூற முடியும்.

இந்த இலக்கணத்தை நினைவில் கொண்டு இவ்வசனத்தை நாம் ஆராய்வோம். குர்ஆனுடைய கருத்துப் படி ஹஜ்ஜுடைய மாதங்கள் குறைந்தது மூன்று என்றால் அந்த மூன்று மாதங்கள் யாவை என்பதைக் குர்ஆன் மட்டும் போதும் என்போர் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும்.

குர்ஆனிலிருந்து அந்த மாதங்களை எடுத்துக் காட்ட இயலாது. ஏனெனில் குர்ஆனில் அந்த மாதங்கள் யாவை என்பது கூறப்படவில்லை.

அந்த மாதங்கள் யாவை என்பதைக் குர்ஆன் அல்லாத வேறு வகையில் தான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஒப்புக் கொண்டால் குர்ஆன் மட்டும் போதும் என்ற இவர்களின் வாதம் நொறுங்கி விழுந்து விடுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஹஜ்ஜுடைய மாதங்களாக எவை அறியப்பட்டிருந்தன என்பதை ஹதீஸ்கள் வழியாகத் தான் அறிந்து கொள்ள முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எவை ஹஜ்ஜுடைய மாதங்களாக அறியப்பட்டிருந்தன என்பது குறித்து இப்னு உமர் ரலி அவர்கள் விளக்கும் போது அறியப்பட்ட மாதங்கள் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகியவை என்று குறிப்பிட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹஜ்ஜுடைய மாதங்களாக அறியப்பட்டிருந்ததை இந்த ஹதீஸ் துணை இல்லாமல் அறிய முடியாது.

தமத்துஃவ் வகை ஹஜ் செய்பவர்கள் ஷவ்வால் மாதமே இஹ்ராம் அணிந்து உம்ராவை நிறைவேற்றி விட்டு ஹரமிலேயே தங்கி, துல்ஹஜ் மாதம் வந்ததும் மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவார்கள். இவர்களுக்கு மூன்று மாதங்கள் ஹஜ்ஜுடைய மாதங்களாகின்றன.