86. இரு பொருள் தரும் வார்த்தைகள்
எல்லா மொழிகளிலும், எல்லா மனிதர்களின் சொற்களிலும் இரு பொருள் தரும் வார்த்தைகளும், வாக்கியங்களும் உள்ளன. ஆயினும் நேரடியான பொருளில் கூறப்பட்டவை யாவை? உவமையாக இலக்கிய நயத்துடன் கூறப்பட்டவை யாவை? என்பதைத் தெளிவான சிந்தனை உடையோர் புரிந்து கொள்வார்கள்.
"விண்முட்டும் கோபுரம்" என்று கூறினால் இதை நேரடியான பொருளில் நாம் புரிந்து கொள்ள மாட்டோம். விண்முட்டும் உயரத்தில் கோபுரம் இருக்க முடியாது என்று நாம் அறிந்து வைத்துள்ளோம்.
ஆயிரம் நிலவுக்கு நிகராகப் பிரகாசிப்பதாக ஒரு பெண்ணின் முகத்தை வர்ணிப்பார்கள். முகத்திலிருந்து வெளிச்சம் வருகிறது என்று இதை யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். அழகாக இருக்கிறாள் என்றே புரிந்து கொள்வோம்.
மனிதர்களின் மொழியிலேயே திருக்குர்ஆன் அருளப்பட்டதால் குர்ஆனிலும் இத்தகைய இலக்கிய நயம் மிகுந்த சொற்களும், வாக்கியங்களும் உள்ளன.
சரியான பார்வையுள்ளவர்கள் இலக்கியமாகக் கூறப்படுவதை இலக்கியமாகவும், நேரடியான பொருளில் கூறப்படுவதை நேரடியான பொருளிலும் புரிந்து கொள்வார்கள்.
நபிகள் நாயகத்தை, ஒளி என்று திருக்குர்ஆன் கூறுகிறது. "அவர்கள் அறியாமை இருளைப் போக்க வந்த வெளிச்சம்" என்று அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.
அறிவீனர்களோ "நபிகள் நாயகம் (ஸல்) இருட்டில் நடந்தால் அவர்களிடமிருந்து வெளிச்சம் வரும்; நபிகள் நாயகம் (ஸல்) மனிதர் இல்லை; கடவுள் அம்சம் பொருந்தியவர்" என்று கூறி மக்களை வழி கெடுப்பார்கள்.
இது போல் ஏராளமான உதாரணங்களும், உவமைகளும், இலக்கிய நடைகளும் குர்ஆனில் உள்ளன. இத்தகைய வசனங்களைப் பற்றித் தான் இங்கே (திருக்குர்ஆன் 3:7) கூறப்படுகிறது.
ஆனால் இந்த வசனத்தைப் பெரும்பாலான விரிவுரையாளர்களும், மொழி பெயர்ப்பாளர்களும் தவறாகவே கையாண்டுள்ளனர்.
"முதஷாபிஹாத்" என்ற இரு கருத்துடைய வசனங்களை, "அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது" என்று அவர்களில் சில அறிஞர்கள் கருதி, அதற்கேற்ப இவ்வசனத்தை மொழி பெயர்த்துள்ளனர்.
"அல்லாஹ்வையும், அறிவுடையோரையும் தவிர யாரும் அறிய மாட்டார்கள்" என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம்.
இலக்கண விதியின் படி இரு விதமாகப் பொருள் கொள்ள இடமிருந்தாலும் புறச்சான்றின் அடிப்படையில் நாம் செய்த தமிழாக்கம் தான் சரியானது.
குர்ஆனில் அல்லாஹ்வுக்கு மட்டுமே பொருள் தெரிந்த, எந்த மனிதருக்கும் பொருள் தெரியாத வசனங்களும் உள்ளன என்ற வாதம் முற்றிலும் தவறாகும்.
ஒரே ஒரு மனிதனுக்குக் கூட புரியாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே புரிந்த வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் ஏன் கூற வேண்டும்? அறவே பயனில்லாத வேண்டாத வேலையை இறைவன் செய்வானா? என்று சிந்தித்தால் இவ்வாறு கூற மாட்டார்கள்.
ஒரு மனிதருக்குக் கூடப் புரியாத வசனங்கள் குர்ஆனில் இருந்தால், மனிதர்களின் பார்வையில் அது உளறல் என்றே கருதப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து எதிரிகள், இது போன்ற வசனங்களைக் காட்டி "முஹம்மது உளறுகிறார்" என்று நிலைநாட்டியிருப்பார்கள். அப்படி ஏதும் நடக்கவில்லை.
எந்த மனிதராலும் விளங்க முடியாத வசனங்கள் உள்ளன என்று வாதிடுவோரிடம் அந்த வசனங்கள் யாவை? என்று பட்டியலைக் கேட்டால் அவர்களிடம் இதற்கு எந்தப் பதிலும் இல்லை.
ஒருவருக்கும் விளங்காத ஐந்தாறு வசனங்களைக் கூட அவர்களால் எடுத்துக் காட்ட முடியாது. இதிலிருந்து அவர்கள் விதண்டாவாதம் செய்வது தெளிவாகும்.
ஏராளமான தமிழ் மற்றும் பிற மொழி பெயர்ப்புகள் வந்து விட்டன. அம்மொழி பெயர்ப்புகளில் எல்லா வசனங்களுக்கும் மொழி பெயர்ப்புச் செய்துள்ளனர். "இது எங்களுக்குப் புரியவில்லை. அல்லாஹ்வுக்கு மட்டும் தான் புரியும்" எனக் கூறி ஒரே ஒரு வசனத்தைக் கூட அவர்கள் மொழி பெயர்ப்புச் செய்யாமல் விடவில்லை.
இதிலிருந்து அவர்கள் தமக்குத் தாமே முரண்பட்டு இவ்வசனத்திற்கு பொருத்தமற்ற விளக்கம் கூறுகிறார்கள் என்பது உறுதியாகிறது.
திருக்குர்ஆன் விளங்குவதற்கு எளிதானது எனவும், அனைவருக்கும் வழி காட்டக் கூடியது எனவும் திருக்குர்ஆன் தெளிவாகப் பல இடங்களில் அறிவிக்கிறது. அந்த வசனங்கள் வருமாறு:
2:99, 2:159, 2:185, 2:219, 2:221, 2:242, 2:266, 3:103, 3:118, 3:138, 4:26, 4:82, 4:174, 5:15, 5:89, 6:105, 7:52, 6:114, 10:15, 10:37, 11:1, 16:89, 17:41, 17:89, 18:54, 20:2, 22:16, 22:72, 24:1, 24:18, 24:34, 24:46, 24:58, 24:59, 26:2, 27:1, 28:2, 29:49, 39:27, 41:3, 46:7, 54:17, 54:22, 54:32, 54:40, 55:2, 58:5, 65:11
முதஷாபிஹாத் வசனங்கள் எவ்வாறு இரு பொருளைத் தருகின்றன என்பதையும், அதில் சரியான அர்த்தத்தையும், தவறான அர்த்தத்தையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்வது என்பதையும் அறிந்து கொள்ள, 193வது குறிப்பைக் காண்க.