380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன?
இவ்வசனத்தில் (38:69) கூறப்படுவது குறித்து விரிவுரையாளர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆயினும் விரிவுரை ஏதும் தேவையில்லாமலேயே அடுத்தடுத்த வசனங்களைக் கவனித்தால் இவ்வசனம் கூறுவது என்ன என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
மனிதனைப் படைக்க இறைவன் நாடிய போது மேலான கூட்டத்தினரான வானவர்கள் ஆட்சேபணை செய்தனர். அடுத்த வசனங்களில் அது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
அதைத் தான் இங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கூறுமாறு இறைவன் பணிக்கிறான். "வானவர்கள் ஆட்சேபணை செய்தபோது நான் அங்கே இருக்கவில்லை. எனக்கு அது தெரியவும் வழியில்லை. எனவே எனக்கு இறைவன் புறத்திலிலிருந்து அறிவிக்கப் படுவதையே நான் கூறுகிறேன்" என்பது தான் இதன் கருத்து.