279. ஜிப்ரீலின் கூற்று குர்ஆனில் இடம் பெற்றது எப்படி?
திருக்குர்ஆன் இறைவேதம் என்பதால் அதில் இறைவனின் வார்த்தைகள் மட்டுமே இடம் பெற வேண்டும். மற்றவர்களின் வார்த்தைகள் இடம் பெறுவதாக இருந்தால் இறைவன் அதை எடுத்துக் காட்டும் வகையில்தான் இடம் பெற வேண்டும்.
ஆனால் இந்த வசனத்தில் (19:64) "நாம் இறங்க மாட்டோம்" என்று வானவர் கூறுவது குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. வானவரின் சொந்தக் கூற்று எவ்வாறு குர்ஆனில் இடம் பெறலாம் என்ற சந்தேகம் இங்கே எழக் கூடும். ஆயினும் திருக்குர்ஆனில் பல இடங்களில் இது போன்ற வார்த்தை அமைப்புகள் காணப்படுகின்றன.
நாம் இறங்க மாட்டோம் என்பதை இறைவன் கூறச் சொன்னான் என்ற கருத்தில் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு திருக்குர்ஆனில் பல சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 37:164)
"கூறச் சொன்னான்" "கூறினான்" "கூறு" போன்ற சொற்கள் வெளிப்படையாகக் கூறப்படாமல் பல வசனங்கள் குர்ஆனில் உள்ளன. திருக்குர்ஆன் ஒலி வடிவமாக அருளப்பட்டதால் அருளப்படும் சூழ் நிலையை வைத்துப் புரிந்து கொள்வார்கள் என்பதற்காகத் திருக்குர்ஆன் இந்த வழிமுறையைக் கையாண்டுள்ளது.