90. அல்லாஹ்வின் வார்த்தை! அல்லாஹ்வின் உயிர்!
ஈஸா நபியை அல்லாஹ்வின் வார்த்தை என்று 3:39, 3:45, 4:171 ஆகிய வசனங்களில் குர்ஆன் குறிப்பிடுகிறது.
4:171, 21:91, 66:12 வசனங்களில் அவனது உயிர் எனவும் ஈஸா நபியைப் பற்றிக் குர்ஆன் கூறுகிறது.
இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸா நபி இறைவனின் குமாரர் என்று கிறித்தவ நண்பர்கள் கூறுகின்றனர். குர்ஆனும் இதை ஒப்புக் கொள்வதாகவும் அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.
ஈஸா நபியோ, மற்ற யாருமோ இறைவனுக்குப் புதல்வர்களாக இல்லை என்று ஏராளமான இடங்களில் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றது.
(பார்க்க: திருக்குர்ஆன் 2:116, 4:171, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81)
பொதுவாக மனிதர்கள் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
வானம், பூமி மற்றும் எண்ணற்ற படைப்புக்கள் "ஆகு" எனும் கட்டளை மூலம் தான் படைக்கப்பட்டன. இதனால் அவை இறைவனின் புதல்வர்களாகி விட முடியாது.
இறைவனின் உயிர் என்று ஈஸா நபி கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் எனக் கூற முடியாது. ஏனெனில் "இறைவனின் உயிர்" என்றால் "அவனுக்கு உடமையான உயிர்" என்பது தான் பொருள். "அவனது ஒரு பகுதியான உயிர்" என்று பொருள் இல்லை.
திருக்குர்ஆனின் 15:29, 38:72 ஆகிய வசனங்களில் ஆதம் (அலை) அவர்களையும், அல்லாஹ்வின் உயிர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதனால் ஆதம், அல்லாஹ்வின் மகன் என்று கிறித்தவ நண்பர்கள் கூறுவதில்லை.
ஆதம் (அலை) பற்றிக் கூறப்படும் போது எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அப்படித் தான் ஈஸா நபி பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.
3:59 வசனத்தில் ஆதமைப் படைத்ததும், ஈஸாவைப் படைத்ததும் ஒரே மாதிரியானது தான் என திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.