62. செலவிடும் முறை
எதைச் செலவிட வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மட்டும் விடையளிக்காமல் எப்படிச் செலவிட வேண்டும் என்பதும் முக்கியம் என்பதால் அதற்கும் இவ்வசனத்தில் (2:215) பதிலளிக்கப்பட்டுள்ளது.
கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக "செலவிடப்படும் பொருள் நல்வழியில் திரட்டப்பட்டதாக இருக்க வேண்டும்" என்று பதில் கூறியதோடு யாருக்காகச் செலவிட வேண்டும் என்பதையும் இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.
மற்ற பணிகளுக்குச் செலவிடுவதை விட பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகள் மற்றும் நாடோடிகளுக்கும் செலவிடுவது சிறந்ததாகும் என்பதை இவ்வசனம் வலியுறுத்துகிறது.
எத்தனையோ அறப் பணிகளுக்குச் செலவு செய்வோர் பெற்றோரைச் சந்தியில் விட்டுவிடுகின்றனர். உறவினர்களைக் கண்டு கொள்வதில்லை. இவர்கள் தான் முதலில் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பது இங்கே போதிக்கப்படுகின்றது.