364. களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பெரிதும் பாதித்த நிகழ்ச்சி அவர்களின் மனைவியின் மீது சுமத்தப்பட்ட களங்கமாகும்.
இவ்வாறு அவதூறு கூறியவர்களில் மிஸ்தஹ் என்பார் முக்கியப் பங்கு வகித்தார். அவருக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் உதவிகள் செய்து வந்தனர்.
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எதிராகக் கூறப்பட்டது அவதூறு தான் என்பது தெளிவாகத் தெரிந்த பின் "இனி மேல் மிஸ்தஹுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன்" என்று அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்தார்கள். தமது மகள் மீது களங்கம் சுமத்தியவர்களுக்கு உதவ அவர்களின் உள்ளம் இடம் தரவில்லை. (பார்க்க: புகாரி 2661, 4141, 4750, 6679).
நபிகள் நாயகம்(ஸல்) இறைத் தூதராக இல்லாமல் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இதை வரவேற்றிருப்பார்கள். தமது மனைவியின் மீது களங்கம் சுமத்தியவருக்குத் தொடர்ந்து உதவிகள் செய்ய அவர்களின் உள்ளம் இடம் தந்திருக்காது.
ஆனால் இவ்வசனத்தில் (24:22) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியும், அபூபக்ர் (ரலி) அவர்களின் மகளுமான ஆயிஷா (ரலி) மீது களங்கம் சுமத்தியவர்களுக்குச் செய்து வந்த உதவிகளை நிறுத்த வேண்டாம் எனக் கூறப்படுகிறது. அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்திருந்தாலும் அதை அமுல்படுத்த வேண்டாம் எனக் கூறப்படுகிறது.
குர்ஆன் நிச்சயமாக இறைவனின் வேதமாகத் தான் இருக்க முடியும் என்பதற்கு இவ்வசனமும் சான்றாக அமைந்துள்ளது.