56. ஹஜ்ஜின் மூன்று வகை
ஹஜ் கடமையை மூன்று வகையாக நிறைவேற்றலாம். (திருக்குர்ஆன் 2:196)
1. ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவதாக முடிவு செய்து அதை நிறைவேற்றுதல்.
2. ஹஜ்ஜுடன் உம்ரா எனும் கடமையையும் சேர்த்து ஒரே இஹ்ராமில் நிறைவேற்றுதல் மற்றொரு வகை.
3. முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றியவுடன் மக்காவில் தங்கியிருந்து, ஹஜ்ஜுடைய நேரம் வந்ததும் மறுபடியும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுதல்.
இந்த மூன்றாவது வகை தான் தமத்துவ் எனப்படும்.
ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் இடைப்பட்ட காலத்தில் உள்ளூர்வாசிகள் செய்யும் எல்லாக் காரியத்தையும் மூன்றாவது வகையான ஹஜ்ஜை நிறைவேற்றுபவர் செய்யலாம். இதன் காரணமாக இந்த வகை ஹஜ் செய்பவர் ஒரு பிராணியைப் பலியிட வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.
"தமத்துவ்" என்னவென்பதை நபிகள் நாயகத்தின் விளக்கம் மூலமாகவே அறிந்து கொள்ள முடியும். நபிகள் நாயகத்தின் விளக்கம் குர்ஆனைச் சரியாகப் புரிந்து கொள்ள அவசியம் என்பதை இதிலிருந்து அறியலாம்.