343. முன் சென்ற தூதர்களிடம் கேட்க முடியுமா?
இவ்வசனத்தில் (43:45) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் சென்று விட்ட தூதர்களிடம் ஒரு கேள்வியை எழுப்புமாறு நபிகள் நாயகத்திற்குக் கட்டளையிடப்படுகிறது.
என்றோ மரணித்துவிட்ட தூதர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி கேள்வி கேட்க முடியும்? என்ற சந்தேகம் பலருக்கும் தோன்றலாம்.
ஆனால் "தூதர்களிடம் கேட்பீராக!" என்பதை, "தூதர்கள் கொண்டு வந்த போதனைகளில் தேடிப் பார்ப்பீராக" என்ற கருத்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு புரிந்து கொள்வதற்கு திருக்குர்ஆனில் மற்றொரு வசனம் சான்றாக அமைந்துள்ளது.
திருக்குர்ஆனின் 4:59 வசனத்தில் "உங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்விடமும், அவனது தூதரிடம் கொண்டு செல்லுங்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான். இங்கே அல்லாஹ்விடம் கொண்டு செல்லுங்கள் என்பதற்கு அல்லாஹ்வின் வேதத்தோடு உரசிப் பாருங்கள் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இருக்க முடியாது.
அதே போல அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு செல்லுங்கள் என்பதற்கு, இப்போது எழுகின்ற பிரச்சனைகளை தூதரிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று பொருள் கொள்ள முடியாது.
தூதரிடம் கொண்டு செல்லுங்கள் என்றால் தூதரின் போதனைக்கு ஏற்ப இருக்கிறதா என்று ஆய்வு செய்யுங்கள் என்பது தான் கருத்து. அதுபோல் தான் இந்த வசனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆன் பல இடங்களில் இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள், பதில் தர மாட்டார்கள் என்றெல்லாம் கூறுவதால் இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பது மேலும் உறுதியாகிறது.