இந்த அத்தியாயத்தின் 9வது வசனத்தில் தீயவர்கள் இழப்பை அடையும் நாள் பற்றி பேசப்படுவதால் அதுவே இதன் பெயராக ஆனது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
64:1. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. ஆட்சி அவனுக்கே உரியது. அவனுக்கே புகழ் உரியது. அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
64:2. அவனே உங்களைப் படைத்தான். உங்களில் (ஏக இறைவனை) மறுப்போரும் உள்ளனர். உங்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்48864:3. வானங்களையும், பூமியையும் தக்க காரணத்துடன் அவன் படைத்தான். உங்களை வடிவமைத்து உங்கள் வடிவங்களை அவன் அழகுபடுத்தினான். அவனிடமே மீளுதல் உண்டு.
64:4. வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.
64:5. முன் சென்ற (ஏக இறைவனை) மறுப்போரின் செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்கள் தமது காரியத்தின் விளைவை அனுபவித்தனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
64:6. அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களை புறக்கணித்தான். அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
64:7. தாம் உயிர்ப்பிக்கப்படவே மாட்டோம் என்று (ஏக இறைவனை) மறுப்போர் நினைக்கின்றனர். "அவ்வாறில்லை! என் இறைவன் மேல் ஆணையாக! நீங்கள் உயிர்ப்பிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்தது பற்றி பின்னர் உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு எளிதானது" என்று கூறுவீராக!
64:8. எனவே அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நாம் அருளிய ஒளியையும் நம்புங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
64:9. ஒன்று திரட்டும் நாளில்1 அவன் உங்களை ஒன்று திரட்டுவான். அதுவே இழப்பை அளிக்கும் நாள்1. அல்லாஹ்வை நம்பி நல்லறம் செய்பவரின் தீமைகளை அவரை விட்டும் அவன் நீக்குவான். அவரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
64:10. (நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதுவோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அது கெட்ட தங்குமிடம்.
64:11. எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் உள்ளத்திற்கு அவன் வழிகாட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
64:12. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வது தான் நமது தூதர் மீது உள்ளது.
64:13. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
64:14. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
64:15. உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும், சோதனையே.484 அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது.
64:16. உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (நல் வழியில்) செலவிடுங்கள்! அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர்.
64:17. நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனைக்75 கொடுத்தால் அதை அவன் உங்களுக்குப் பன் மடங்காகத் தருவான். உங்களை மன்னிப்பான். அல்லாஹ் நன்றி செலுத்துபவன்; சகிப்பவன்.664:18. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன்; மிகைத்தவன்; ஞானமிக்கவன்.