48. மாதவிடாயின் போது தவிர்க்க வேண்டியவை
இந்த வசனத்தில் (2:222) மாதவிடாய் நேரத்தில் மனைவியரை விட்டு கணவர்கள் விலகியிருக்குமாறு கூறப்படுவதால் இதைத் தவிர அப்பெண்கள் தொழுகை, நோன்பு உட்பட அனைத்து வணக்க வழிபாடுகளையும் செய்யலாம் என்று சிலர் விளங்கி வைத்துள்ளனர். இது தவறாகும்.
திருக்குர்ஆனின் 4:43 வசனத்தில் தொழுகையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது குளிப்பு கடமையானவர்களாக நீங்கள் இருந்தால், குளித்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடுகிறான். இது போன்ற கருத்தை 5:6 வசனத்திலும் கூறுகிறான்.
தொழுகை, தூய்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வணக்கம் என்பதை இதிலிருந்து அறியலாம். மாதவிடாய் பற்றிக் குறிப்பிடும் மேற்கண்ட வசனத்தில் மாதவிடாய் நேரத்தில் பெண்கள் தூய்மையற்று இருக்கிறார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இவ்விரு வசனங்களையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது மாதவிடாயின் போது தொழக் கூடாது என்பதை யாரும் அறிந்து கொள்ளலாம்.
மாதவிடாய் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டதோ அதற்கு விடையளிக்கும் விதமாகவே இவ்வசனம் அருளப்பட்டது. மாதவிடாய் சமயத்தில் வணக்க வழிபாடுகள் செய்யலாமா? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தால் அது குறித்து பதிலளிக்கும் வகையில் இறை வசனம் அருளப்பட்டிருக்கும். மாதவிடாய் நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் அதற்கு மட்டும் இவ்வசனத்தில் நேரடியாக விடையளிக்கப்பட்டது. (நூல்: முஸ்லிம் 455)
மாதவிடாய் நேரத்தில் பெண்கள் மிகவும் இழிவாக, நடத்தப்பட்டு வந்தனர். வீட்டுக்குள் பெண்களைச் சேர்க்க மாட்டார்கள். தனியாக ஒதுக்கி விடுவார்கள். இந்த நேரத்தில் பெண்களைத் தொட மாட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொட்ட பொருள்களையும் தொட மாட்டார்கள். இந்த மூட நம்பிக்கைகளை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை.
தொழுவது, நோன்பு நோற்பது, கஅபாவை தவாஃப் செய்வது, பள்ளிவாசலில் நுழைவது, தாம்பத்தியத்தில் ஈடுபடுவது ஆகிய ஐந்து காரியங்கள் மட்டுமே அவர்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன.
மற்ற விஷயங்களில் எல்லாப் பெண்களையும் போல் அவர்களும் எல்லாப் பணிகளிலும் ஈடுபடலாம்.