21. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?

இறைவனை இவ்வுலகில் நேரில் பார்க்க முடியுமா? என்ற கேள்விக்கு இஸ்லாம் அளிக்கும் விடை, முடியாது என்பது தான்.

அல்லாஹ்வின் தூதர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும் அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட இறைவனிடம் உரையாடியுள்ளார்களே தவிர அவனைப் பார்த்ததில்லை.

"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?" எனக் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 261)

இறைவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததில்லை. (நூல்: புகாரி 3234, 4855, 7380)

மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தவர் இறைவனை நேருக்கு நேர் காட்டுமாறு மூஸா நபியிடம் கேட்ட போது அவர்களை அல்லாஹ் இடியோசையினால் தாக்கினான் என்று திருக்குர்ஆனின் 2:55, 4:153 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

மூஸா நபியாலும் இறைவனை நேரில் பார்க்க முடியவில்லை. (பார்க்க : திருக்குர்ஆன் 7:143)

அவனைப் பார்வைகள் அடையாது; அவனோ பார்வைகளை அடைகிறான் என்றும் அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க : திருக்குர்ஆன் 6:103)

இவ்வுலகில் இறைவனைக் காண முடியும் என்ற நம்பிக்கையினால் மனித குலத்துக்குக் கேடு தான் ஏற்படும்; நன்மை ஏற்படாது.

தாம் இறைவனைப் பார்த்ததாக எத்தனையோ ஆன்மிகவாதிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும்.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:46, 2:55, 2:223, 2:249, 3:77, 4:153, 6:31, 6:103, 6:154, 7:143, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 25:21, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, 83:15)