291. தீண்ட முடியாத வேதம்
தூய்மையானவர்களைத் தவிர யாரும் இதைத் தொட மாட்டார்கள் என இவ்வசனத்தில் (56:79) கூறப்படுகிறது.
தூய்மையானவர்கள் என்றால் யார் என்பதையும், இதைத் தொட மாட்டார்கள் என்றால் எதை என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வசனத்திற்கு முன் 77, 78 ஆகிய வசனங்களில் "இது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கின்ற மதிப்புமிக்க திருக்குர்ஆன்"" எனக் கூறப்படுகிறது. அடுத்த வசனத்தில் "இதைத் தொட மாட்டார்கள்"" என்று கூறப்படுகிறது.
எனவே "பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள திருக்குர்ஆன், எங்கிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதோ அங்குள்ள மூலப் பிரதி" என்பது தான் இதன் பொருள்.
தூய்மையானவர்கள் என்பது வானவர்களைக் குறிக்கும்.
இவ்வாறு தான் பொருள் கொள்ள வேண்டும் என்பதற்குப் பல காரணங்களும் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதை 312, 152 ஆகிய குறிப்புகளில் தெளிவுபடுத்தி உள்ளோம்.
திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை எனும் போது எழுத்து வடிவில் அருளப்படாததைத் தொடுகின்ற பேச்சுக்கே இடமில்லை.
தொடும் விதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தால் மட்டுமே "இந்தக் குர்ஆனைத் தொட மாட்டார்கள்" என்று கூற முடியும்.
திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஓதிக் காட்டப்பட்டதே தவிர எழுத்து வடிவில் அருளப்படவில்லை.
இறைவனிடமிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தியைப் பெற்ற பிறகு எழுத்தர்களிடம் சொல்லி எழுதி வைத்துக் கொண்டதால் திருக்குர்ஆன் எழுத்து வடிவம் பெற்றது.
எனவே "இதைத் தொட மாட்டார்கள்" என்பது இவ்வுலகுக்கு அருளப்பட்ட குர்ஆனைக் குறிக்காது. எங்கிருந்து அருளப்பட்டதோ அந்த மூலப் பிரதியைத் தான் குறிக்கும்.
இந்தக் குர்ஆனைத் தூய்மையானவர்கள் தான் தொட வேண்டும்; மற்றவர்கள் தொடக் கூடாது என்றெல்லாம் இவ்வசனத்தை அடிப்படையாகக் கொண்டு பலரும் சட்டங்களை வகுத்துள்ளனர்.
ஆனால் இந்தக் திருக்குர்ஆன் எல்லா மக்களுக்கும் வழி காட்டுவதற்காக அருளப்பட்டது. எல்லா நிலையிலும் வாசிப்பதற்காக அருளப்பட்டது. எல்லா மாந்தர்களும் படிப்பதற்காக அருளப்பட்டது.
முஸ்லிம் அல்லாதவர்கள் இந்தக் குர்ஆனை வாசித்தால் தான் அவர்கள் நேர்வழி பெற முடியும். "நீங்கள் தூய்மையாக இல்லை; நீங்கள் குர்ஆனைத் தொடக் கூடாது"" என்று கூறினால், எந்த நோக்கத்திற்காக குர்ஆனை அல்லாஹ் அருளினானோ அந்த நோக்கத்தைச் சிதைப்பதாக ஆகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாடுகளின் தலைவர்களுக்கு, திருக்குர்ஆன் வசனங்களை எழுதி இஸ்லாத்தின் பால் அழைப்புக் கொடுத்துள்ளனர். (புகாரி 7, 2941, 4553)
அந்த மன்னர்கள் அதைத் தம் கையால் தொட்டு வாசிப்பார்கள் என்பதை அறிந்தே திருக்குர்ஆன் வசனங்களை எழுதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பியிருக்கும் போது, திருக்குர்ஆனைத் தூய்மையுடன் தான் தொட வேண்டும் என்று கூறுவது தவறாகும். குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்படுத்தி விடும்.
குர்ஆனைத் தூய்மையானவர்கள் தான் தொட வேண்டும் என்று கூறுவதற்கு எந்த வகையிலும் சான்றாக இவ்வசனம் அமைந்திருக்கவில்லை.
எல்லா நிலையிலும், எல்லா மனிதர்களும் குர்ஆனைத் தொடலாம்; படிக்கலாம்; வாசிக்கலாம் என்பது தான் குர்ஆனிலிருந்து பெறப்படுகின்ற, நபிகள் நாயகத்தின் வழி முறைகளிலிருந்து பெறப்படுகின்ற முடிவாகும்.