344. பிறக்கும் போதே நபியா?

இவ்வசனங்களில் (28:86, 42:52) "இதற்கு முன் ஈமான் என்றால் என்ன என்பதும், வேதம் என்றால் என்ன என்பதும் உமக்குத் தெரியாது" என்று கூறப்படுகிறது. இது இந்தச் சமுதாயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) குறித்து சொல்லப்பட்டு வரும் கட்டுக் கதைக்கு மரண அடியாக அமைந்துள்ளது.

முதல் மனிதரான ஆதம் நபியை இறைவன் படைப்பதற்கு முன்பே முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக அல்லாஹ் நியமித்து விட்டான் என்பதும், இதனால் அவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்தார்கள் என்பதும் தான் அந்தக் கட்டுக் கதைகள்.

பிறக்கும் போதே நபிகள் நாயகம் (ஸல்), இறைத் தூதராகப் பிறந்தார்கள் என்றால் நம்பிக்கை என்றால் என்ன வென்றும் உமக்குத் தெரியாது, வேதம் என்றால் என்னவென்றும் உமக்குத் தெரியாது என்று அல்லாஹ் கூறுவானா?

இறைத்தூதராக நியமிக்கப்பட்டவருக்கு ஈமான் இல்லாமல் இருக்குமா? வேதம் என்றால் என்ன என்று கூடத் தெரியாமல் இறைத்தூதராக இருக்க முடியுமா? என்று சிந்தித்துப் பார்த்தால் நபிகள் நாயகம் (ஸல்) தமது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன் நபியாக இருக்கவுமில்லை, தாம் இறைத்தூதராக நியமிக்கப்படுவோம் என்று அறிந்திருக்கவுமில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

இறைச்செய்தி வந்த பிறகும் கூட தமக்கு வந்தது இறைச் செய்தி தான் என்பதை ஆரம்பத்தில் அவர்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. (பார்க்க: புகாரி 4, 3392, 4954, 6982)