212. நபிகள் நாயகத்தின் தூய வாழ்க்கை

எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது.

மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் "நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது" என்ற சொல்வழக்கு இங்கு உள்ளது.

தாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே இருந்தது.

இதை முன் வைத்தே இறைத்தூதர் என்பதை நிலை நாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.

இறைத் தூதர் என்று தம்மை அறிமுகப்படுத்துவதற்கு முன் பொய், பித்தலாட்டம், ஒழுக்கக் கேடு, தீய பழக்கங்கள் போன்ற அனைத்திலிருந்தும் அவர்கள் விடுபட்டு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு இவ்வசனம் (10:16) சான்றாகவுள்ளது.

இறைத் தூதராக ஆன பின்பு அதை விடத் தூய்மையான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.