227. அரபு மொழியில் வேதம்

திருக்குர்ஆன் 12:2, 13:37, 16:103, 20:113, 25:4,5, 26:198, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3 ஆகிய வசனங்கள் திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டதாகக் கூறுவதால் அரபு மொழி தான் சிறந்த மொழி என்று இஸ்லாம் கூறுவதாக நினைக்கக் கூடாது.

எல்லா மொழிகளிலும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர். எல்லா மொழிகளிலும் வேதங்கள் அருளப்பட்டன (பார்க்க: திருக்குர்ஆன் 14:4)

அரபு மொழியில், அதுவும் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டதாக அல்லாஹ் ஏன் கூற வேண்டும்? இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் வேதம் என்று அறிமுகப்படுத்திய திருக்குர்ஆன் மிகவும் உயர்ந்த தரத்தில் அமைந்துள்ளதாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்ததாலும் இதை நபிகள் நாயகம் (ஸல்) சுயமாகக் கற்பனை செய்து கூறுகிறார் என்று அம்மக்களால் நினைக்க இயலவில்லை.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அடிக்கடி சந்திக்கும் ஒருவர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுப்பதாகக் கூறினார்கள். ஆனால் யார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதாகக் கூறினார்களோ அவரது தாய் மொழி அரபியல்ல. குர்ஆனோ தெளிவான அரபு மொழியில் அமைந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக அரபு மொழியில் அருளப்பட்டதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 16:103)

எழுதவும், படிக்கவும் தெரியாத முஹம்மதுக்கு இது அருளப்பட்டது. ஆனால் இதுவோ மிகவும் உயர்வான நடையழகுடைய அரபு மொழியில் அருளப்பட்டுள்ளது. முஹம்மது நபியால் இந்த நடையில் கற்பனை செய்து கூற முடியாது என்று தெளிவுபடுத்துவது மற்றொரு காரணம்.

அரபு மொழி தான் சிறந்த மொழி என்று எந்த இடத்திலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ திருக்குர்ஆன் கூறவில்லை.