59. தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம்

ஹஜ் கடமையின் போது ஒன்பதாம் நாள் மக்கள் அனைவரும் "அரஃபாத்" எனும் திடலில் தங்குவார்கள். ஆனால் உயர்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட குரைஷி குலத்தினர் மற்ற மக்களோடு தங்காமல் "முஸ்தலிஃபா" எனும் இடத்தில் தங்குவார்கள். "முஸ்தலிஃலிபா" என்பது புனித ஆலயத்தின் எல்லைக்கு உள்ளேயும், "அரஃபாத்" என்பது புனித ஆலயத்தின் எல்லைக்கு வெளியேயும் அமைந்துள்ளன.

உயர்ந்த குலத்தவரான தாங்கள் மட்டும் புனித எல்லையில் தங்கி விட்டு மற்றவர்களை அங்கே தங்குவதைத் தடுத்து வந்தனர். "அரஃபாத்" என்பது ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டவர்களுக்கான இடமாக அவர்களால் கருதப்பட்டது.

இஸ்லாம் இந்தத் தீண்டாமையையும் ஒழித்துக் கட்டியது. உயர்ந்த குலத்தைச் சேர்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், உயர்ந்த குலத்தைச் சேர்ந்த முஸ்லிம்களையும் மற்ற மக்களுடன் போய் "அரஃபா" திடலில் தங்குமாறு இவ்வசனத்தின் (2:199) மூலம் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஒதுக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில் உலக மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டி சாதி, குலம், மொழி, இனம் காரணமாகக் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகளை இஸ்லாம் குழி தோண்டிப் புதைத்தது.

இது பற்றி புகாரி (4520), முஸ்லிம் ஆகிய நூல்களில் ஹதீஸ்கள் உள்ளன.

"மக்களெல்லாம் புறப்படும் இடத்திலிருந்து நீங்களும் புறப்படுங்கள்" என்பதை விளங்கிட நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் என்பதற்கு இவ்வசனமும் சான்றாக உள்ளது.