348. தூதர்களின் வருகைக்கு முற்றுப் புள்ளி
யூஸுஃப் நபிக்குப் பிறகு அல்லாஹ் எந்தத் தூதரையும் அனுப்பவே மாட்டான் என்று சிலர் கூறியதை அல்லாஹ் இவ்வசனத்தில் (40:34) எடுத்துக் காட்டுகிறான்.
சில தவறான கொள்கையுடையோர் இதைச் சான்றாகக் கொண்டு நபிகள் நாயகத்துக்குப் பின் இறைத் தூதர்கள் வரலாம் என்று வாதிடுகின்றனர்.
யூஸுஃப் நபிக்குப் பிறகு இறைத் தூதர்களின் வருகை முற்றுப் புள்ளி வைக்கப்படாத காரணத்தால், அவருக்குப் பிறகு தூதரே வர மாட்டார் எனக் கூறுவது குற்றமாகும்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை அவர்களுடன் தூதர்களின் வருகைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதற்குப் பிறகு தூதர்கள் வருவார்கள் என்று சொன்னால் அது தான் குற்றமாகும்.
எனவே யூஸுஃப் நபிக்குப் பிறகு தூதர்கள் வர மாட்டார்கள் என்று கூறுவது தான் குற்றமே தவிர நபிகள் நாயகத்துக்குப் பின் தூதர்கள் வர மாட்டார்கள் என்று கூறுவது இவ்வசனத்திற்கு எதிரானது அல்ல.
இதில் முக்கியமான கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் நபிகள் நாயகத்துக்குப் பின் சில போலிகளை இறைத் தூதர்கள் என்று நம்பிய அந்தக் கூட்டத்தினர், அந்தப் போலிகளுக்குப் பிறகு தூதர்கள் வர முடியாது என்று சாதிக்கிறார்கள். இதிலிருந்து அவர்களின் போலித்தனம் தெளிவாகப் புரிகிறது.
நபிகள் நாயகத்துக்குப் பின் தூதர்கள் வர மாட்டார்கள் என்பதை விரிவாக அறிய 187வது குறிப்பைக் காண்க!