281. முஹம்மது நபி உலகத் தூதர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்டது படிப்படியாக விரிவுபடுத்தப்படுகிறது.

முதலில் "நீர் ஓதுவீராக" என்று அவர்களை அல்லாஹ் ஓதச் சொல்கிறான்; புரிந்து கொள்ளச் சொல்கிறான். (திருக்குர்ஆன் 96:1)

இது ஒரு கால கட்டம்.

பிறகு, "நெருங்கிய உறவினரை எச்சரிப்பீராக" எனக் கூறி, உறவினர்கள் அளவுக்கு அவர்களது தூதுப் பணியை விரிவுபடுத்துகிறான். (திருக்குர்ஆன் 26:214)

இதன் பிறகு "உம்முல் குரா - நகரங்களின் தாய்" என்றழைக்கப்படும் மக்காவாசிகளையும், அதைச் சுற்றி இருப்பவர்களையும் எச்சரிக்க வேண்டும் என்று மேலும் விரிவுபடுத்துகிறான். (திருக்குர்ஆன் 6:92, 42:7)

அப்போது அவர்களின் கடமை மக்காவில் வாழ்பவர்களையும், மக்காவை சுற்றியுள்ள பகுதியில் வாழ்பவர்களையும் எச்சரிப்பது மட்டும் தான்.

பிறகு அன்றைக்கு வாழ்ந்த மனித குலத்திற்கெல்லாம் தூதராக அனுப்பப்பட்டிருக்கிறேன் எனக் கூறச் செய்ததன் மூலம் அவர்களின் தூதுப் பணியை மேலும் இறைவன் விரிவடையச் செய்தான். (திருக்குர்ஆன் 7:158, 21:107, 34:28)

அவர்கள் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு மட்டுமின்றி இனி வரும் மக்களுக்காகவும் அவர்களின் தூதுப் பணி விரிவடைந்திருப்பதை இவ்வசனத்தில் (62:2,3) அல்லாஹ் கூறுகிறான்.