462. காதுகளில் அடித்தோம் என்றால் என்ன?
இவ்வசனத்தில் (18:11) ளரப்னா அலா ஆதானிஹிம் என்ற சொல்லுக்கு உறங்கச் செய்தோம் என்று நாம் தமிழாக்கம் செய்துள்ளோம்.
இதன் நேரடிப் பொருள் காதுகளில் அடித்தோம் அல்லது காதுகளில் வருடிக்கொடுத்தோம் என்பதாகும். சில மொழிபெயர்ப்பாளர்கள் இச்சொல்லுக்கு காதுகளில் அடித்தோம் என்று நேரடியாக மொழிபெயர்த்துள்ளனர்.
வள்ளல் என்பதைக் குறிக்க கை நீளமானவன் என்ற சொல்லை அரபியில் பயன்படுத்துவார்கள். இதற்கு அப்படியே பொருள் செய்தால் தமிழ் பேசும் மக்கள் திருடன் என்று புரிந்து கொள்வார்கள். கை நீளமானவன் என்பதைத் திருடன் என்ற பொருளில் தமிழ் கூறும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே கை நீளமானவன் என்ற சொல்லுக்கு வள்ளல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டால் வள்ளல் என்று தான் மொழிபெயர்க்க வேண்டும்.
அது போல் காதுகளில் அடித்தோம் என்ற சொல்லை அரபுமொழியில் தூக்கத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்துவார்கள். தமிழில் இச்சொல்லை இந்தப் பொருளில் பயன்படுத்துவதில்லை. எனவே இச்சொல்லை அரபுமொழி பேசுவோர் எந்தப் பொருளில் புரிந்து கொள்வார்களோ அதே பொருளில் மற்றவர்களும் புரிந்து கொள்வது தான் முக்கியம். எனவே தான் உறங்கச் செய்தோம் என்று மொழிபெயர்த்துள்ளோம்.