223. பலியிடப்பட்டவர் இஸ்மாயீல் தான்

இப்ராஹீம் நபி தமது மகன்களான இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரில் இஸ்மாயீலையே பலியிட முன்வந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

இப்ராஹீம் நபியவர்கள் பலியிட முன்வந்தது இஸ்ஹாக்கைத் தான் என்று சிலர் கூறியுள்ளனர். அது தவறு என்பதற்கு இவ்வசனம் (11:71) சான்றாகவுள்ளது.

இஸ்ஹாக் என்ற மகன் பிறக்கப் போவதைக் கூறும் போதே, யஃகூப் என்ற பேரன் பிறக்கப் போவது பற்றியும் முன்கூட்டியே இப்ராஹீம் நபிக்குக் கூறப்பட்டதாக இவ்வசனம் (11:71) கூறுகின்றது.

பேரனைப் பற்றி நற்செய்தி கூறப்பட்டதால் இஸ்ஹாக் சிறு வயதில் மரணிக்க மாட்டார் என்பதும், அவர் மணம் முடித்து யஃகூபைப் பெறுவார் என்பதும் இப்ராஹீம் நபிக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின் இஸ்ஹாக்கைப் பலியிடுமாறு கூறி இப்ராஹீம் நபியைச் சோதிக்க முடியாது. இஸ்ஹாக் இப்போது சாக மாட்டார் என்று இறைவனே கூறிய பிறகு இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனை அறுத்துப் பலியிட முன் வந்ததில் பெரிய தியாகம் ஏதும் இருக்காது.

தன் மகன் சாகவே மாட்டான் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் யார் வேண்டுமானாலும் இதைச் செய்ய முன் வருவர். எனவே இஸ்மாயீலை அறுத்துப் பலியிடுமாறு கூறுவது தான் இருவரையும் சோதித்துப் பார்ப்பதாக அமைய முடியும்.