61. அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன?

இறைவனது பண்புகளையும், செயல்களையும் பேசும் வசனங்களை அதன் நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கை என்றால், அல்லாஹ்வின் ஆற்றல் என்று விளக்கம் கொடுக்கக் கூடாது. அல்லாஹ்வின் முகம் என்றால் முகம் என்று தான் பொருள்.

ஆனால் சில இடங்களில் அவ்வாறு நேரடிப் பொருள் கொள்வதால் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை தகர்க்கப்படும் என்றால், அல்லது கருத்துக் குழப்பம் வரும் என்றால் நேரடிப் பொருளைத் தவிர்த்து வேறு பொருளைக் கொடுக்க வேண்டும்.

"வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது ." என்ற (89:22) வசனத்திற்குப் பொருள் கொள்ளும் போது, நியாயத் தீர்ப்பு நாளில் மனிதர்களை விசாரிப்பதற்கு இறைவன் வருவான் என்ற நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும்.

ஆயினும் சில வசனங்களில் நேரடிப் பொருள் கொள்வது கருத்துக் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் அவ்வாறு நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.

நல்லடியார்களின் கையாக நான் ஆவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் கூறுவதை நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது. நல்லடியானுக்கு உதவுவேன் என்று அல்லாஹ் கூறுவதாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த (2:210, 13:41, 16:26) வசனங்களில் இறைவன் வருவான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு அல்லாஹ் நேரடியாக வருவான் என்று பொருள் கொள்ளாமல் அவனது கட்டளை வரும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்த வசனங்களில், அல்லாஹ் வருவான் என்ற சொற்றொடர், தீயவர்களை அழிப்பதற்காக வருவான் என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கூட்டத்தையோ, ஒட்டு மொத்த சமுதாயத்தையோ அழிக்க அல்லாஹ் நாடினால் அதற்காக அவன் இறங்கி வருவதில்லை. அவ்வாறு வரவேண்டிய அவசியமும் இல்லை. ஒரேயொரு உத்தரவின் மூலம் காரியத்தை முடித்து விடுவான். (பார்க்க: திருக்குர்ஆன் 36:28, 29)

"மேகக் கூட்டங்களில் அல்லாஹ் வருவான்" என்பது, அல்லாஹ்வின் தண்டனை மேகக் கூட்டங்களின் வாயிலாக வரும் என்று பொருள்படும். அதாவது பேரழிவை ஏற்படுத்தும் பெரு மழையுடன் மேகக் கூட்டங்களை அனுப்பி அழிப்பது என்று பொருள்.

இது போல் 13:41 வசனத்தில் பூமியை அதன் ஓரங்களில் குறைப்பதற்காக நாம் பூமிக்கு வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. நமது கட்டளைப்படி பூமியைக் குறைக்கிறோம் என்று அல்லாஹ் கூறுவதாக இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்களின் கட்டடங்களின் அடித் தளத்தின் வழியாக நாம் வந்தோம். கட்டடங்கள் வீழ்ந்தன என்று பூகம்பம் குறித்து அல்லாஹ் 16:26 வசனத்தில் கூறுகிறான்.

கட்டடத்துக்குக் கீழே வந்து அசைக்கிறான் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. கட்டடங்கள் விழுமாறு கட்டளையிட்டான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.