487. கருக்கலைப்பு குழந்தைக் கொலையாகுமா?

இவ்வசனங்களில் (6:140, 6:151, 17:31, 60:12, 81:8,9) குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்பதன் நேரடிப் பொருள் எளிதாகப் புரிகிறது. ஆனால் குழந்தை பிறப்பதற்கு முன் கருவைக் கலைப்பது குழந்தைக் கொலையில் சேருமா என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்ற வசனம் அருளப்பட்ட காலத்தில் கருவை அழிக்கும் தொழில் நுட்பம் இருக்கவில்லை. குழந்தையைப் பெற்ற பின்னர் கொல்வது தான் வழக்கமாக இருந்தது. இந்த வசனங்கள் இதைத் தான் நேரடியாகக் குறிக்கின்றன.

இஸ்லாத்தின் பார்வையில் உயிர்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிரை இயக்குவதற்கான உயிர் ஒரு வகை. உணர்வுகளை இயக்குவதற்கான உயிர் இன்னொரு வகை.

இது குறித்து விபரமாக அறிய 486வது குறிப்பைப் பார்க்கவும்.

கருவில் உருவாகும் குழந்தைக்கு உயிர் இருப்பதால் தான் அது வளர்கிறது; பல்வேறு நிலைகளை அடைகிறது. ஆனாலும் 120வது நாளில் தான் உயிர் ஊதப்படுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

உணர்வுடன் கூடிய உயிர் 120வது நாளில் தான் ஊதப்படுகிறது என்பதை இந்த நபிமொழி கூறுகிறது. (பார்க்க : புகாரி 3208, 3332, 6594, 7454)

120வது நாளில் தான் உயிர் ஊதப்படுகிறது என்றால் அதற்கு முன் அது மனிதக் கருவாக இருக்கவில்லை என்று தெரிகிறது. 120 நாட்களுக்கு முன்னர் உள்ள கருவைக் கலைத்தால் அது குழந்தையைக் கொன்ற குற்றமாக ஆகாது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்கிறோம்.

காண்டம் போன்றவற்றைப் பயன்படுத்தும் அதில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்களைக் குழந்தையாக உருவாகாமல் நாம் தடுக்கிறோம். இது குழந்தையைக் கொன்றதாக ஆகாது. அது போல் அடுத்த மூன்று நிலைகளில் வளர்ச்சியடையும் போதும் கலைப்பது குழந்தையைக் கொன்றதாக ஆகாது.

ஆனால் மனிதர்கள் தமக்குக் கேடு விளைவிப்பவற்றைச் செய்யக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளனர். உருவான குழந்தையைக் கலைப்பது பெண்ணுக்கு பெரும் கேடு விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். அந்த வகையில் 120 நாட்களுக்கு முன்னுள்ள கருவை அழிப்பதும் தடுக்கப்பட்டதாகும். குழந்தையைக் கொல்வது என்ற அடிப்படையில் அல்ல. தாயின் உடல் நலனுக்குக் கேடு என்பதால் அது கூடாது.

உயிருக்கு ஆபத்து அல்லது தாயின் நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால் பெரிய தீங்கில் இருந்து தப்பிக்க சிறிய தீங்கைச் செய்யலாம் என்ற அடிப்படையில் அது குற்றமாகாது.

இது குறித்து மேலும் அறிய 296, 314, 486 ஆகிய குறிப்புகளைக் காண்க!