75. அல்லாஹ்வுக்குக் கடனா?

"அல்லாஹ்வுக்கு அழகிய கடன் வழங்குதல்" என்பதற்கு "பள்ளிவாசல் உண்டியலில் போடுவது" என்று பொருளில்லை. பொருளாதாரம் சம்பந்தமாக அல்லாஹ்வுடன் தொடர்புபடுத்திக் கூறும் கட்டளைகள் அனைத்துக்கும் தேவையுடைய மனிதர்களுக்கு வழங்குவது என்பதே பொருளாகும்.

அல்லாஹ்வுக்காக ஆயிரம் ரூபாய் செலவு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவர் அதை ஏழைகளுக்குத் தான் அளிக்க வேண்டும். அழகிய கடன் என்பதும் இது தான்.

இச்சொற்பிரயோகத்தின் மூலம் இறைவன் இரண்டு செய்திகளைக் கூறுகிறான். "நீங்கள் ஏழைகளுக்காக உதவினால் அதற்கான பிரதிபலனை நான் உங்களுக்குத் தருவேன்; பல மடங்காகப் பெருக்கித் தருவேன்" என்பது முதலாவது செய்தி.

சிலர், ஒரு ஏழைக்கு உதவி விட்டு அவனிடம் நன்றிக் கடன் எதிர்பார்ப்பர்; செய்த உதவிகளைச் சொல்லிக் காட்டுவர்; உதவி பெற்றவனை மட்டமாகக் கருதுவர். இது தவறாகும்.

நாம் உண்மையில் ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை; அல்லாஹ்வுக்குத் தான் கொடுத்தோம் என்ற எண்ணம் வேரூன்றும் போது இந்தத் தீய எண்ணங்கள் விலகும் என்பது மற்றொரு நன்மையாகும்.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20).