249. கெண்டைக் கால் திறக்கப்பட்டு' என்பதன் பொருள்

இவ்வசனத்தில் (68:42) "கெண்டைக் கால் திறக்கப்பட்டு" என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது.

இறைவன் இவ்வுலகில் உள்ள மனிதர்கள் யாருடைய கண்களுக்கும் தென்பட்டதில்லை என்பதை இஸ்லாம் கூறுகிறது. ஆனால் அதற்காக இறைவன் ஒன்றுமில்லாத சூனியம் என்று கூறவில்லை. மாறாக மனிதன் திரும்ப உயிர்ப்பிக்கப்பட்ட பின் மறுமை நாளில் இறைவனைக் காண முடியும் என்றும் கூறுகிறது.

மறுமையில் விசாரணை நடத்துவதற்காக "வானவர்கள் புடை சூழ இறைவன் வருவான்" என்றும் கூறப்படுகிறது. (திருக்குர்ஆன் 89:22)

அவ்வாறு வரும் போது தன் காலில் விழுந்து பணியுமாறு மக்களுக்கு உத்தரவிடுவான். அது தான் இங்கே கூறப்படுகிறது.

"கெண்டைக் கால் திறக்கப்படும் நாளில்" என்றால், இறைவன் தனது கெண்டைக் காலில் விழுந்து மக்களைப் பணியச் சொல்வான் என்று பொருள்.

இவ்வுலகில் இறைவனுக்குப் பணிவதை யார் வழக்கமாகக் கொண்டிருந்தார்களோ அவர்கள் பணிவார்கள்; மற்றவர்கள் இறைவன் காலில் விழ முடியாது. இது நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விளக்கம். (பார்க்க: புகாரி 4919)