77. அலங்காரப் பெட்டியும் புனிதத் தன்மையும்

பெரியார்கள், மகான்கள் பயன்படுத்திய பொருட்களைப் பாதுகாக்கலாம்; அவற்றை வைத்துக் கொண்டால் மன நிறைவு ஏற்படும் என்று இவ்வசனத்தை (2:248) சான்றாகக் கொண்டு மார்க்க அறிவு குறைந்தோர் நினைக்கின்றனர்.

சிலரை மகான்கள் என்று இவர்களாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் முடிவு செய்து கொண்டு அவர்கள் பயன்படுத்திய செருப்பு, அவர்கள் உட்கார்ந்த இடம் என்றெல்லாம் கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த வசனத்தைத் தான் அவர்கள் தமக்குரிய ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

கவனமாகச் சிந்தித்தால் இது அவர்களுக்கு எதிரான கருத்தையே தருவதை உணர்வார்கள். மூஸா நபி, ஹாரூன் நபி ஆகியோரின் குடும்பத்தார் விட்டுச் சென்றதை அவர்களின் சமுதாயத்து நல்லடியார்கள் பாதுகாத்து வைக்கவில்லை. அதனால் தான் வானத்திலிருந்து வானவர்கள் அதைக் கொண்டு வந்தனர்.

தம்மை விட தகுதிக் குறைவானவருக்கு எப்படி அதிகாரம் கிடைக்கலாம் என அம்மக்கள் ஆட்சேபித்தனர்; சந்தேகப்பட்டனர். தாலூத்தை இறைவன் தான் நியமித்தான் என்பதற்குச் சான்றாகவே வானிலிருந்து அலங்காரப்பெட்டி வந்தது. சான்றாக அது வந்ததால் மனநிறைவுடன் அவரது தலைமையை ஏற்றனர். படை திரண்டு சென்றனர்.

அந்தப் பெட்டியைப் புனிதப்படுத்த வேண்டும் என்பதற்காக அதை இறைவன் இறக்கவில்லை. இந்தப் பெட்டியைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் இறைவன் கட்டளையிடவில்லை.

எப்பொருளையும் புனிதப்படுத்தும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது. ஸபா, மர்வா போன்றவற்றை அவன் புனிதப்படுத்தியதால், உஹது மலையை நாம் புனிதமாக்கி விட முடியாது.

எனவே எதையாவது புனிதப் பொருள் என யாரேனும் கூறுவார்களானால் அதற்கான திருக்குர்ஆன், நபிமொழிச் சான்றுகளை அவர்கள் முன்வைக்க வேண்டும்.