122. கனவுகள்
இந்த அத்தியாயத்தில் யூஸுஃப் நபியின் கனவு, இரண்டு கைதிகளின் கனவு, மன்னரின் கனவு எனப் பல கனவுகளும் அதற்கான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலர் கனவுகளுக்கு விளக்கம் சொல்கிறோம் என்ற பெயரில் பல விதமாக உளறி வருகின்றனர்.
ஆனால் 12:37 வசனத்தில் யூஸுஃப் நபியவர்கள் கனவுகளுக்கு விளக்கம் கூறும் திறனை அல்லாஹ் தமக்குக் கற்றுத் தந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். எனவே இது இறைவன் புறத்திலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி என்பது தெரிய வரும்.
இன்னின்ன கனவுகளுக்கு இன்ன பலன்கள் என்றெல்லாம் குர்ஆனிலோ, நபிகள் நாயகத்தின் ஹதீஸ்களிலோ எந்தப் பட்டியலும் போடப்படவில்லை. கனவுகளுக்குப் பலன் சொல்பவர்கள் அவர்களாகக் கற்பனை செய்த பொய்களைத் தான் கூறி வருகின்றனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.