வைகறை

மொத்த வசனங்கள் : 30

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபஜ்ரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராகச் சூட்டப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
89:1. வைகறையின் மீது சத்தியமாக!
89:2. பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!387
89:3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக!
89:4. கடந்து செல்லும் இரவின் மீது சத்தியமாக!
89:5. அறிவுடையோருக்கு (போதிய) சத்தியம் இதில் இருக்கிறதா?
89:6, 7. ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?26
89:8. உலகில் அவர்களைப் போல் (யாரும்) படைக்கப்படவில்லை.
89:9, 10. மலையடிவாரத்தில் பாறையைக் குடைந்(து வாழ்ந்)த ஸமூது சமுதாயத்தையும், படைகளுடைய ஃபிர்அவ்னையும் (எப்படி ஆக்கினான்?)26
89:11. அவர்கள் உலகில் வரம்பு மீறிக் கொண்டிருந்தனர்.
89:12. அதில் குழப்பத்தை அதிகமாக்கினார்கள்.
89:13. எனவே உமது இறைவன் வேதனையின் சாட்டையைச் சுழற்றினான்.
89:14. உமது இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.
89:15. மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும் போது484 "என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்" என்று கூறுகிறான்.
89:16. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது484 "என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்" எனக் கூறுகிறான்.
89:17. அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை.
89:18. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை.
89:19. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள்.
89:20. செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள்.
89:21. அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் போது,
89:22. வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும்488 போது,
89:23. அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?
89:24. "எனது வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா?" என்று கூறுவான்.
89:25. அந்நாளில் அவன் தண்டிக்கு மளவுக்கு யாரும் தண்டிக்க முடியாது.
89:26. அவன் கட்டுவது போல் யாரும் கட்ட முடியாது.
89:27, 28. அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உனது இறைவனிடம் செல்வாயாக!
89:29. எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக!
89:30. எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (எனக் கூறப்படும்).