168. குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும்

இந்த அத்தியாயத்தில் (80:1-12) முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளில் முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தாழ்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் என்பார் வந்தார். "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அறிவுரை கூறுங்கள்" என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் புறக்கணித்து விட்டு அந்தப் பிரமுகரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் தான் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்டன. "தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்"(80:1-10)

நூல்கள் : திர்மிதீ 3254, முஸ்னத் அபீயஃலா 3123

நபிகள் நாயகம் கோபம் அடைந்ததோ, முகத்தைச் சுளித்ததோ கண் தெரியாத இந்த மனிதருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்காது.

ஆனால், உடனடியாக இறைவன் புறத்திலிருந்து எச்சரிக்கை வருகிறது.

உம்மை ஆர்வத்தோடு தேடி வருகிற இவரை உயர் குலத்தவர் களுக்காக விரட்டியடிக்கிறீரா? என்று அல்லாஹ் நபிகள் நாயகத்தைக் கண்டிக்கிறான். இதைக் கண்டித்த பிறகு தான் அந்தக் குருடருக்கே இந்தச் செய்தி தெரிகிறது.

இது ஒரு உண்மையை நமக்குச் சொல்கிறது.

குர்ஆனை முஹம்மது நபி, தாமே சொந்தமாக உருவாக்கியிருந்தால் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்கின்ற ஒரு வாசகத்தைத் தமக்கு எதிராக அவர்கள் உருவாக்கியிருக்க முடியாது.

காலாகாலத்திற்கும் இந்த வேதத்தைப் படிப்பவர்களெல்லாம் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து இது போன்றெல்லாம் உருவாக்காமல் இருந்திருப்பார்கள்.

இறைவன் புறத்திலிருந்து வந்தது என்பதால் தான் அந்தக் குருடர் மத்தியிலும், தம்மைப் பெரிதும் மதிக்கின்ற சமுதாயத்தின் மத்தியிலும் "அல்லாஹ்வே என்னைக் கண்டித்து விட்டான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள்.

திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய அறிவுப்பூர்வமான சான்றாக இதை எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமின்றி நபிகள் நாயகமே ஆனாலும் அவர்கள் இறைவன் விரும்பாததைச் செய்வதற்கு அதிகாரம் இல்லை என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்துள்ளது.

செய்பவர் யார் என்று பார்த்து அல்லாஹ் நீதி வழங்க மாட்டான்; செய்யப்படும் காரியத்தைத் தான் அவன் பார்ப்பான் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

ஒரு சாதாரண மனிதராகக் கருதப்பட்ட கண் தெரியாதவருக்காக தனது தூதரையே அல்லாஹ் கண்டிக்கிறான் என்றால் இது எவ்வளவு அற்புதமான ஒரு மார்க்கம்! இது போன்ற ஒரு கடவுள் கொள்கையினால் மனித குலத்திற்கு எவ்வளவு பயன் கிடைக்கும் என்பதையெல்லாம் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அது மட்டுமின்றி, கண் பார்வையற்ற இவர் விஷயத்தில் இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறை தான் இதை விடச் சிறப்பானது.

இதன் பின்னர் இவரைக் காணும் போதெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரியாதை செலுத்துவார்கள்.

நூல் : முஸ்னத் அபீ யஃலா 3123

இவர் மூலம் அல்லாஹ் எனக்கு நல்ல அறிவுரை வழங்கினான் என்று அவரை மிகவும் மரியாதையோடு நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்று மாமன்னராக உயர்ந்த பின் அமைத்துக் கொண்ட ஆட்சியில் இவருக்கு முக்கியப் பங்கையும் அளித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்க்களம் சென்ற போது இரண்டு தடவை இவரிடம் ஆட்சியை ஒப்படைத்துச் சென்றார்கள்.

நூல் : அஹ்மத் 11894, 12530, அபூதாவூத் 2542

நபிகள் நாயகத்தின் பள்ளிவாசலில் மக்களைத் தொழுகைக்கு அழைக்கும் பணியை பிலால் (ரலி), இப்னு உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இருவரிடம் தான் நபிகள் நாயகம் (ஸல்) ஒப்படைத்திருந்தார்கள்

நூல் : புகாரி 617, 620, 623, 1919, 2656, 7348