45. மரண சாசனத்தை மாற்றிய வாரிசுரிமைச் சட்டம்
வாரிசுரிமைச் சட்டம் அருளப் படுவதற்கு முன்னால் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டிருந்தது (திருக்குர்ஆன் 2:180, 2:240)
பின்னர், எந்தெந்த உறவினருக்கு எவ்வளவு சொத்துக்கள் கிடைக்கும் என்ற சட்டம் (4:11-12, 4:176) அருளப்பட்ட பின் மரண சாசனம் எழுதுவது கடமை இல்லை என்று ஆகிவிட்டது.
மரண சாசனம் செய்யும் கடமை தான் நீக்கப்பட்டுள்ளது. ஒருவர் விரும்பினால் தமது சொத்துக்கள் குறித்து மரண சாசனம் செய்வதற்கு அனுமதி உள்ளது.
திருக்குர்ஆன் 4:11-12 வசனங்களில் "பாகப்பிரிவினைக்கு முன் மரண சாசனத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று குறிப்பிடப்படுவதிலிருந்து இதனை அறியலாம்.
ஆயினும் இவ்வாறு செய்யும் மரண சாசனம் மூன்றில் ஒரு பகுதியைத் தாண்டக் கூடாது. மூன்று லட்சம் ரூபாய் சொத்துக்களை விட்டுச் செல்பவர் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்குத் தான் மரண சாசனம் செய்யும் உரிமை படைத்துள்ளார்.
ஒருவர் முழுச் சொத்துக்கும் மரண சாசனம் எழுதி வைத்தாலும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்குத் தான் அது செல்லும். எஞ்சியவை இஸ்லாம் கூறும் முறைப்படி வாரிசுகளுக்குப் பங்கிடப்படும்.
"நான் எனது முழுச் சொத்தையும் அறப்பணிகளுக்காக மரண சாசனம் செய்யட்டுமா?" என்று ஸஃது (ரலி) அவர்கள் கேட்ட போது "மூன்றில் ஒரு பகுதி அளவு செய்! அதுவே அதிகம் தான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (புகாரி 3936, 4409, 5668, 6373, முஸ்லிம்)
எனவே உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுக் காரியங்களுக்கு மரணசாசனம் செய்வோர் 33 சதவிகிதத்துக்கு மிகாத வகையில் வஸிய்யத் எனும் மரண சாசனம் செய்யலாம்.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:180; 2:240; 4:11-12; 5:106).