137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு
இவ்வசனத்தில் (5:5) குறிப்பிடப்பட்டுள்ள வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு என்பது அறுத்து உண்ணப்படும் பிராணிகளைக் குறிக்காது என்று சிலர் கூறுகின்றனர். இது தவறாகும்.
அறுத்து உண்ணப்படாத உணவுகளைப் பொறுத்த வரை வேதம் கொடுக்கப்படாதவர்களின் உணவு கூட அனுமதிக்கப்பட்டவை தாம். அரிசி, பருப்பு, காய்கறி போன்றவற்றை எவர் வீட்டிலும் உண்ணலாம்.
வேதம் கொடுக்கப்பட்டோர் அறுத்த பிராணிகள் பற்றியே இங்கே கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதர்களின் மாமிச உணவைச் சாப்பிட்டுள்ளனர். அவர்களைக் கொல்வதற்காக ஆட்டிறைச்சியில் விஷம் வைத்துக் கொடுத்தனர் என்று ஏற்கத்தக்க ஹதீஸ்கள் உள்ளன (நூல்: புகாரி 2617)
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதை உண்ணுங்கள் என்பதிலிருந்து யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் அறுத்தவை விதிவிலக்குப் பெறுகின்றன என்பதே சரியானதாகும்.
மேலும் இது மாற்றப்பட்டு விட்டது என்றும் கருத முடியாது. ஏனெனில் இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிக் கட்டத்தில் இறங்கிய வசனங்களில் ஒன்றாகும். (நூல்: நஸஈ 2434)
எனவே நமக்குத் தடை செய்யப்படாத உணவுப் பொருட்களை வேதக்காரர்கள் தந்தால் அதை நாம் உண்ணலாம். அல்லாஹ் அனுமதித்த ஒன்றை நாமாகத் தடை செய்யக் கூடாது. ஆனால் வேதம் கொடுக்கப்பட்டோர் யார் என்பதில் பலரும் தவறான விளக்கத்தையே தருகின்றனர்.
இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.
பொதுவாக யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர் களுக்காகவே வழங்கப்பட்டன.
(பார்க்க: திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6)
இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன் என்று ஈஸா நபி கூறியதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.
(பார்க்க: திருக்குர்ஆன் 3:49, 5:72, 43:59, 61:6)
இஸ்ரவேலர் அல்லாதவர்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ மாறியிருந்தால் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் தவ்ராத், இஞ்ஜீல் அவர் களுக்காகக் கொடுக்கப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக மக்கள் அனை வருக்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேலர் அறுத்ததை உண்ணலாம். இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்கள் அறுத்ததை உண்ணலாகாது.
அதிக விபரத்திற்கு இதே பகுதியில் 27, 138 ஆகிய குறிப்புகளைக் காண்க!