453. சொர்க்கம் அழிக்கப்பட்டு பூமியில் மீண்டும் அமைக்கப்படும்
இவ்வசனங்களில் (14:48, 21:104, 39:67) வானம் பூமி அனைத்தும் அழிக்கப்பட்டு பின்னர் வேறு வானமும் வேறு பூமியும் படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அப்படியானால் சொர்க்கமும் நரகமும் அழிக்கப்படுமா என்ற சந்தேகம் எழலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் போதும் இன்ன பிற சந்தர்ப்பங்களிலும் சொர்க்கத்தைப் பார்த்துள்ளதாக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களில் இருந்து சொர்க்கம் ஏற்கனவே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. அது வானத்தில் உள்ளது என்பதும் தெரிகிறது.
உயிர் தியாகிகள் உடனே சொர்க்கம் செல்வார்கள் என்று குர்ஆன் கூறுவதாலும், பச்சை நிற பறவைக் கூட்டுக்குள் சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுவதாலும் சொர்க்கம் முன்னரே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
ஆனால் உலகம் அழிக்கப்படும் போது வானம் பூமி உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும். சொர்க்கம் நரகமும் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும்.
இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ்வின் வழிமுறையே இது தான்.
உங்கள் அனைவரின் மீளுதல் அவனிடமே உள்ளது. (இது) அல்லாஹ் வின் உண்மையான வாக்காகும். அவனே ஆரம்பத்தில் படைத்தான். பின்னர், நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களுக்கு கூலியை நியாய மாக வழங்குவதற்காக மீண்டும் படைக்கிறான். (ஏக இறைவனை) மறுப்போருக்கு அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் கொதிக்கும் பானமும்,துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
திருக்குர்ஆன் 10:4
உங்கள் தெய்வங்களில் முதலில் படைப்பவனும், மீண்டும் அதைப் படைப்பவனும் உள்ளனரா?" என்று கேட்பீராக! "அல்லாஹ்வே முதலில் படைக்கிறான். பின்னர் மறுபடியும் படைக்கிறான்! எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?" என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 10:34
நீங்கள் இணை கற்பித்தவை சிறந்த வையா? அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? "நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!" என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 27:64
அல்லாஹ் முதலில் எவ்வாறு படைக்கிறான் என்பதை அவர்கள் அறியவில் லையா? பின்னர் மீண்டும் அதை உருவாக்குவான். இது அல்லாஹ்வுக்கு எளிதானது. (திருக்குர்ஆன் 29:19)
அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (திருக்குர்ஆன் 3011)
அவனே முதலில் படைத்தான். பின்னர் மீண்டும் படைப்பான். இது அவனுக்கு மிகவும் எளிதானது. வானங்களிலும்,பூமியிலும் அவனுக்கே உயர்ந்த பண்பு உள்ளது. அவன் மிகைத்தவன்; ஞானமுடையவன்.
திருக்குர்ஆன் 30:27
அவன் முதலில் படைக்கிறான். மீண்டும் படைக்கிறான்.
திருக்குர்ஆன் 85:13
படைக்கப்பட்ட பொருட்களை அழிப்பதும், அழித்ததை மீண்டும் படைப்பதும் இறைவன் என்பதற்கான ஆதாரமாக அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். இப்படி என்னைத் தவிர யாராலும் செய்ய முடியுமா என்று அறைகூவல் விடுவதில் இருந்து இதை அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு வானங்களுக்கும் சென்றார்கள் என்று ஹதீஸ் உள்ளதால் வானம் அழியாது என்று யாராவது கூற முடியுமா?
முதலில் எப்படி எதுவும் இல்லாமல் இருந்ததோ அது போன்ற நிலையை உலகம் அடையும். மீண்டும் ஆரம்பத் தில் இருந்து அல்லாஹ் படைப்பான் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறு கின்றன. இதில் சொர்க்கம் மட்டும் விதி விலக்கு என்று ஆதாரம் எதையும் நாம் காணவில்லை. எனவே தான் ஏற்கனவே சொர்க்கம் படைக்கப்பட்டிருந்தாலும் அந்த சொர்க்கம் அழிக்கப்பட்டு வேறு சொர்க்கம் படைக்கப்படும்; அந்த சொர்க்கத்துக்குத் தான் சொர்க்கவாதிகள் செல்வார்கள் என்று கூறுகிறோம். இது தான் சரியான கருத்தாகும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்தில் சொர்க்கத்தைப் பார்த்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன. உலகம் அழியும் போது வானம் என்னவாகும்? இது பற்றி திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்!
அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.
திருக்குர்ஆன் 14:48
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.
திருக்குர்ஆன் 11 21;104
உலகம் அழிக்கப்படும் போது வானம் வேறு வானமாகவும் பூமி வேறு பூமியாகவும் மாற்றப்படும் என்றால் அவை அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால் வானத்தில் இருந்த சொர்க்கமும் அழிந்து விடும் என்பதும் இதனுள் அடங்கியுள்ளது.
இன்னும் சொல்லப் போனால் வானத்தில் இருந்த சொர்க்கத்தை விட மிகப் பிரம்மாண்டமானதாக சொர்க்கம் இருக்கும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
உங்கள் இறைவனிடமிருந்து கிடைக் கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க் கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. (திருக்குர் ஆன் 3:133)
உங்கள் இறைவனின் மன்னிப் பிற்கும், சொர்க்கத்திற்கும் முந்துங்கள்! அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. அதை, தான் நாடியோருக்கு அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
திருக்குர் ஆன் 57:21
வானத்தில் இருந்த சொர்க்கம் வேறு; வானத்தையும் பூமியையும் உள்ளடக்கும் அளவிலான சொர்க்கம் வேறு என்பது இதில் இருந்து தெரிகிறது.
உலகம் அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள் என்பதை நாம் அனை வரும் அறிந்து வைத்துள்ளோம். எங்கி ருந்து எழுப்பப்படுவார்க்ள்? இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
இதிலிருந்தே உங்களைப் படைத் தோம். இதிலேயே உங்களை மீளச் செய் வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.
திருக்குர்ஆன் 20;55
பூமியில் இருந்து தான் மீண்டும் மனிதர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதற்குத் தான் ஆதாரம் உள்ளது. மேலே எடுத்துச் செல்லப்படுவார்கள் என்று நாம் அறிந்தவரை எந்த ஆதாரத்தையும் காணவில்லை.
மேலும் கீழ்க்காணும் வசன்ங்களிலும் இனி படைக்கப்படும் சொர்க்கம் பூமியில் தான் அமைக்கப்படும் என்பதை பின்வரும் வசனங்களும் சொல்கின்றன.
நாம் மலைகளை இடம் பெயரச் செய்யும் நாளில் பூமியை வெட்ட வெளியாகக் காண்பீர்! அவர்களை ஒன்று திரட்டுவோம். அவர்களில் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். உமது இறைவனிடம் அவர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். ஆரம்பத்தில் உங்களை நாம் படைத்தது போலவே நம்மிடம் வந்து விட்டீர்கள். எச்சரிக்கப்பட்ட இடத்தை உங்களுக்கு ஏற்படுத்த மாட்டோம் என்று நினைத்தீர்கள் (எனக் கூறப்படும்)
திருக்குர் ஆன் 18:47, 48
முஹம்மதே!) மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "என் இறைவன் அவற்றைத் தூள் தூளாக்கு வான்" என்று கூறுவீராக! பின்னர் அதை வெட்ட வெளிப்பொட்டலாக ஆக்குவான். அதில் மேடு பள்ளத்தைக் காண மாட்டீர்! எவ்வித மறுப்புமின்றி அந்நாளில் அழைப்பாளரைப் பின் தொடர்வார்கள். அளவற்ற அருளாளனிடம் ஓசைகள் யாவும் ஒடுங்கி விடும். காலடிச் சப்தம் தவிர வேறெதனையும் நீர் செவியுற மாட்டீர்! (திருக்குர்ஆன் 20:105-108)
ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள். பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர் ஆன் 39:68,69
இதிலிருந்தே உங்களைப் படைத் தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதி லிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.
திருக்குர்ஆன் 20:55
"அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலி ருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்" என்றும் கூறினான்.
திருக்குர்ஆன் 7:25
அல்லாஹ் உங்களைப் பூமியி லிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான்" "பின்னர் அதிலேயே உங்களை மீட்டுவான். (அதிலிருந்தே) உங்களை வெளியேற்றுவான்"
திருக்குர்ஆன் 71:17,18
அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப் போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 30:25
எனவே அவர்களைப் புறக்கணிப்பீராக. (அவர்கள்) வெறுக்கும் காரியத்திற்கு அழைப்பவர் அழைக்கும் நாளில் அவர்களின் பார்வைகள் பணிந்திருக்கும். பரவிக் கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியாவார்கள். அழைப்பாளரை நோக்கி விரைவார்கள். "இது கஷ்டமான நாள் தான்" என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 54:6,7,8
இந்த ஆதாரங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது வானம் பூமி, சொர்க்கம் நரகம் உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். என்பதும், அழிக்கப்பட்ட பின் வானம் வேறு வானமாகவும் பூமி வேறு பூமியாகவும் மாற்றப்படும் என்பதும் மனிதர்கள் பூமியில் இருந்து எழுப்பப் படுவதால் அங்கு தான் சொர்க்கம் அமைக்கப்படும் என்பதும், அந்தப் பூமி வானம் பூமியை விட மிகப் பெரிதாக இருக்கும் என்பதும் தெரிகிறது.
சொர்க்கம் நரகம் குறித்து பலரும் பலவிதமாகக் கூறியுள்ளனர் என்றாலும் நாம் கூறி இருப்பதர்கு எதிராக உரிய ஆதாரம் இல்லை என்பதால் இதையே சரியானது என்கிறோம். இதில் இஸ்லாத்தின் எந்த அடிப்படையும் மீறப்படவில்லை. இக்குறிப்புக்கான வசன எண்கள் 14:48, 21:104, 39:67