164. வேதத்தையும் அதிகாரத்தையும்

இவ்வசனங்களில் (3:79, 6:89, 19:12, 45:16) நபிமார்களைப் பற்றிக் கூறும் போது அவர்களுக்கு "வேதத்தையும் ஹுக்மையும்" வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான்.

"ஹுக்ம்" என்றால் அதிகாரம் என்று பொருள். திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்ற நபிமார்களை நாம் எடுத்துக் கொண்டால் அந்த நபிமார்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படவில்லை.

குழந்தைப் பருவத்திலேயே யஹ்யாவுக்கு ஹுக்மை (அதிகாரத்தை) வழங்கியதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். (திருக்குர்ஆன் 19:12)

வேதத்துடன் சேர்த்து அதிகாரத்தைக் கொடுக்காமல் இருக்கும் போது, அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுவது ஏன்?

இது ஆட்சி அதிகாரத்தைக் குறிக்க முடியாது. மாறாக வேதத்திற்கு விளக்கமாகச் சட்டமியற்றி மார்க்கத் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு ஆணையிடுகின்ற அதிகாரத்தைத் தான் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

இவ்வாறு பொருள் கொள்ளாவிட்டால் அல்லாஹ் அதிகாரம் வழங்கியதாகக் குறிப்பிடுவதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.

ஆட்சி அதிகாரம் என்று நாம் அர்த்தம் கொடுத்தால் அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் அதிகாரம் பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும்.

ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொலை செய்து விட்டார்கள் என்று குர்ஆனே சொல்கிறது. எல்லா நபிமார்களும் வெற்றி பெற்று பின்னாளில் ஆட்சி அமைத்தார்கள் என்று சொல்ல முடியாது.

நபிமார்களில் ஒரு சாராரை ஏற்றீர்கள்; பெரும்பாலானவர்களைக் கொன்று விட்டீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (திருக்குர்ஆன் 2:87, 2:91)

அதனால் இந்த அதிகாரம் என்பது சட்டம் இயற்றும் அதிகாரத்தையே குறிக்கிறது. வேறு விதமான வஹீயின் மூலம் இந்தச் சட்டம் அவர்களுக்கு வந்து சேரும்.

அதனால் தான் வேதத்தை மட்டும் கொடுத்தோம் என்று சொல்லாமல் வேதத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவர்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் அளித்தோம். அவர்கள் இதனை மறுத்தால் இதனை மறுக்காத ஒரு சமுதாயத்தை இதற்குப் பொறுப்பாளிகளாக்குவோம். (திருக்குர்ஆன் 6:89)

வேதம் தவிர வேறு எதுவும் நபிமார்களுக்கு வழங்கப்படவில்லை என்றிருந்தால் வேதத்தையும், நுபுவ்வத்தையும், ஹுக்மையும் வழங்கியதாக அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.

இறுதியாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் செய்தி முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். "இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத - காஃபிர்களாக இல்லாத - ஒரு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்போம்" என்பது தான் அந்தப் பகுதி.

வேதம் மட்டும் தான் நமக்கு அருளப்பட்டது. ஹுக்மு என்ற அதிகாரமோ, நபி எனும் தகுதியோ நமக்குத் தேவையில்லை என்று அந்த நபிமார்கள் கருதுவார்களானால் இம்மூன்றையும் ஏற்கக் கூடிய மற்றவர்களுக்கு அதைக் கொடுத்து அனுப்புவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

மூன்றையும் சேர்த்து வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். மூன்றில் ஒன்றோ, இரண்டோ தான் வேண்டும் எனக் கூறினால் வேறு யாருக்காவது மூன்றையும் தந்து விடுவேன் என்ற தோரணையில் இவ்வசனம் அமைந்துள்ளது.

இம்மூன்றையும் மறுப்பவர்கள் காஃபிர்கள் என்றும் இவ்வசனத்தில் தெளிவுபடுத்தப்படுகிறது.

இந்த வசனங்கள், "வேதத்தோடு நபிமார்களின் விளக்கமும் அவசியம்" என்று உறுதி செய்கின்ற வசனங்கள் ஆகும்.

(இக்குறிப்புக்கான வசனங்கள்: 3:79, 6:89, 19:12, 45:16)