155. எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள்

திருக்குர்ஆன் 18:109, 31:27 ஆகிய வசனங்களில் "அல்லாஹ்வின் வார்த்தைகளை எழுத கடல்நீர் அளவுக்கு "மை" இருந்தாலும், அது போல் இன்னும் ஏழு கடல்கள் அளவுக்கு மை இருந்தாலும் போதாது" எனக் கூறப்படுகிறது. இவ்வசனங்களைச் சிலர் தவறாக விளங்கிக் கொள்கின்றனர். அதாவது, திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிட கடல்நீர் முழுவதும் மையாக ஆனாலும் எழுதி முடியாது என்பது அவர்களின் விளக்கம்.

இவ்விளக்கம் முற்றிலும் தவறாகும். திருமறைக்குர்ஆனை மக்கள் விளங்குவதற்கு எளிதாக இறைவன் ஆக்கியிருக்கிறான். கடல்நீர் அளவுக்கு உள்ள மைகளால் எழுதுமளவுக்கு குர்ஆனை இறைவன் கடினமானதாக வழங்கவில்லை.

எனவே இறைவனின் வார்த்தைகளை எழுத முடியாது என்பது திருக்குர்ஆனைக் குறித்து சொல்லப்படவில்லை. ஒவ்வொரு விநாடி நேரத்திலும் இறைவனிடமிருந்து புறப்படுகின்ற கோடிக்கணக்கான கட்டளைகளே இங்கே இறைவனின் வார்த்தைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன.

ஒரு விநாடி நேரத்தில் ஒரே ஒரு மனிதனுக்கு இடப்படுகின்ற கட்டளைகளே பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அவனுடைய ஒவ்வொரு உறுப்புகளின் இயக்கம், உடலிலுள்ள ஒவ்வொரு செல்களின் இயக்கம், உள்ளுறுப்புகளின் இயக்கம் என கோடிக் கணக்கான இயக்கங்கள் ஒரு மனிதனிடம் ஒரு விநாடி நேரத்தில் நடக்கின்றன. இதற்கான கட்டளைகள் யாவும் இறைவனிடமிருந்து தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுக் கொண்டே உள்ளன.

ஒரு மனிதனின் ஒரு விநாடி நேரத்திற்குள் அவனுக்கு பல்லாயிரக் கணக்கான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன என்றால் அகிலத்தில் நடைபெறுகின்ற கோடானு கோடி நிகழ்வுகளுக்கு இறைவன் பிறப்பிக்கின்ற கட்டளைகளை எழுதுவதாக இருந்தால் உண்மையிலேயே ஏழு கடல்கள் மையாக இருந்தாலும் போதாது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

இறைவனின் வார்த்தைகள் என்பது இது போன்ற கட்டளைகளையே குறிக்கும் என்பதற்குத் திருக்குர்ஆனின் 6:115, 8:7, 10:64, 10:82, 42:24, 66:12 ஆகிய வசனங்களைச் சான்றாகக் கொள்ளலாம். இவ்வசனங்களிலும் இறைவனின் வார்த்தைகள் என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. இங்கே இறைவனின் வார்த்தைகள் என்பதற்கு, திருக்குர்ஆன் என்று கருத்துக் கொள்ள இயலாது.