55. புனித மாதங்கள் எவை?
இந்த (9:36) வசனத்தில் கூறப்படும் பல விஷயங்கள் யாருடைய விளக்கமும் இல்லாமல் விளங்கி விடுகிறது.
மாதங்களின் எண்ணிக்கை 12 என்பது எளிதாக விளங்குகிறது.
நான்கு மாதங்கள் புனிதமானவையாக உள்ளதால் அம்மாதங்களில் போர் செய்யக் கூடாது என்பதும் விளங்குகிறது.
ஆனால் அந்தப் புனித மாதங்கள் எவை என்பது இந்த வசனத்தி-ருந்து விளங்காது. வாழ்நாள் முழுதும் ஒருவர் சிந்தித்தாலும் அந்த மாதங்கள் யாவை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் இது சிந்தனை வட்டத்துக்குள் வரக் கூடியது அல்ல. எந்த இறைவன் அம்மாதங்களைப் புனிதமானவை என அறிவித்தானோ அவன் அறிவித்தால் தவிர அதை நம்மால் அறிய முடியாது.
அந்த நான்கு மாதங்கள் யாவை என்பது இந்த வசனத்தில் கூறப்படாவிட்டாலும் வேறு வசனங்களில் அது பற்றிக் கூறப்பட்டுள்ளதா என்றால் குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. நான்கு மாதங்களில் போர் செய்யக் கூடாது என்று கூறப்படுவதால் அந்த நான்கு மாதங்கள் யாவை என அறியும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது.
குர்ஆன் மட்டும் போதும் எனக் கூறுவோர் அந்த நான்கு மாதங்களைக் குர்ஆனி-ருந்து எடுத்துக் காட்ட முடியாது.
குர்ஆனில் சில விஷயங்கள் பொதுவாகக் கூறப்பட்டுள்ளன. அதன் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குவார்கள் என்று 16:44, 16:64 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை விளக்கி விட்டார்கள். அந்த ஹதீஸ்களின் துணையுடன் தான் இவ்வசனத்தை விளங்க முடியும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். மற்றொன்று ரஜப் மாதமாகும்.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 3197, 4406, 4662, 5550
திருக்குர்ஆன் மட்டும் போதும்; நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவை இல்லை எனக் கூறுவோர் மேற்கண்ட நபிமொழியின் துணை இல்லாமல் அந்த நான்கு மாதங்கள் யாவை என்பதை குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும். அவர்களால் ஒருக்காலும் எடுத்துக் காட்டவே முடியாது.
(இக்குறிப்புக்கான வசனங்கள்: 2:194, 2:217, 5:2, 5:97, 9:5, 9:36)