230. ஷைத்தான் யாரை மறக்கச் செய்தான்?
இவ்வசனத்திற்கு (12:42) "தனது இறைவனை நினைவு கூர்வதை விட்டும் ஷைத்தான் அவரை மறக்கடிக்கச் செய்தான்" என்று சிலர் பொருள் கொள்கிறார்கள்.
ஏனெனில், சிறையிலிருந்த யூசுஃப் நபி, தமது இறைவனிடம் உதவி தேடாமல் சக கைதியிடம், "உன் எஜமானிடம் என்னைப் பற்றிக் கூறு" என்று உதவி தேடினார்.
இவ்வாறு உதவி தேடியது இறைவனை மறந்த செயல் என்பதால் மேற்கண்டவாறு பொருள் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறு கின்றனர். ஆனால் இது தவறாகும்.
ஏனெனில், இவ்வுலகில் மனிதர்களிடம் உதவி பெற வேண்டிய விஷயங்களில் உதவி பெறுவது இறைவனை மறப்பதில் சேராது. "என்னைப் பற்றி உன் எஜமானிடம் கூறு!" என்பன போன்ற சொற்கள் ஈமானை (இறை நம்பிக்கையை) எந்த வகையிலும் பாதிக்காது. "நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்" என்று அல்லாஹ் அனுமதித்துள்ளான். (பார்க்க: திருக்குர்ஆன் 5:2)
எனவே மேற்கண்டவாறு பொருள் செய்வது திருக்குர்ஆனுக்கு மாற்றமாகும்.
யூஸுஃப் நபி இவ்வாறு கூறியது தவறு என்றால் நாமும் இவ்வுலகில் எவ ரிடமும் உதவி தேடவே கூடாது என்று கூற வேண்டும். எனவே இக் கருத்து அறியாமையால் விளைந்ததாகும்.
இவ்வசனத்தில் "திக்ர ரப்பிஹி" என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. ரப்பு என்ற சொல் இறைவனையும் குறிக்கும். மனிதர்களிலுள்ள தலைவர்கள், எஜமானர்கள் போன்றோருக்கும் பயன்படுத்தப்படும்.
அது போல் மற்றொரு சொல்லான திக்ர் என்பது, நினைவு கூர்வதையும், வாயால் சொல்வதையும் குறிக்கும்.
"திக்ர ரப்பிஹி" என்பதற்கு "தனது இறைவனை நினைவு கூர்தல்" என்றும் பொருள் கொள்ளலாம்.
"தனது எஜமானிடம் கூறுதல்" என்றும் பொருள் கொள்ளலாம்.
எனவே இந்த வசனத்திற்கு, "தனது இறைவனை நினைவு கூர்வதை விட்டும் ஷைத்தான் அவரை மறக்கடிக்கச் செய்தான்" எனவும் பொருள் கொள்ளலாம்.
அல்லது "தனது எஜமானரிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் அவரை மறக்கச் செய்தான்" எனவும் பொருள் கொள்ளலாம்.
மொழி மரபில் இரண்டு விதமாகப் பொருள் கொள்வதற்கும் இடமிருந்தாலும், முதல் விதமாகப் பொருள் கொண்டால், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் என்ற குர்ஆன் வசனத்தை மறுப்பதாக அமைந்து விடும். எனவே, இரண்டாவது வகையான பொருளைத் தான் நாம் கொள்ள வேண்டும்.