218. நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா?
வேதத்தில் சந்தேகம் வந்தால் அது குறித்து முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் கேட்குமாறு இவ்வசனம் கூறுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தமக்கு அருளப்பட்ட வேதத்தில் கைவரிசை காட்டியவர்கள்.
(பார்க்க: திருக்குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41)
இப்படி இருக்கும் போது அவர்களிடம் கேட்டால் அவர்கள் உண்மை பேச மாட்டார்கள். எனவே பொதுவாக வேதத்தில் சந்தேகம் ஏற்படும் போது அது குறித்து அவர்களிடம் கேட்க வேண்டும் என்பது இதன் அர்த்தமாக இருக்க முடியாது.
மாறாக இதற்கு முந்தைய வசனத்தில் யூதர்களுக்கு இறைவன் செய்து கொடுத்திருந்த சிறப்புக்கள் கூறப்படுகின்றன. அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு மிகச்சிறந்த நிலப்பரப்பு எனவும் அவர்களுக்குத் தூய்மையான உணவுகள் தாரளமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதைக் கூறி விட்டுத் தான் இதில் சந்தேகம் இருந்தால் வேதம் அருளப்பட்ட அவர்களிடமே கேட்டுப் பார் என்று அல்லாஹ் அடுத்த வசனத்தில் கூறுகிறான்.
இதைப் பற்றிக் கேட்டால் அவர்கள் உண்மையைத் தான் சொல்வார்கள். அவர்களின் பெருமை சம்மந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் மற்ற விஷயங்களை மறைப்பது போல் இதை அவர்கள் மறைக்க முடியாது. இதனால் தான் அவர்களிடம் கேட்குமாறு அல்லாஹ் இவ்வசனத்தில் 10:94 கூறுகிறான்.