350. மூன்று வஹீ

இவ்வசனத்தில் (42:51) இறைவன் தனது தூதுச் செய்தியை மூன்று வழிகளில் மனிதர்களுக்கு அருளுவான் எனக் கூறப்படுகிறது.

* வஹீயின் மூலம் பேசுவது

* திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது

* தூதரை அனுப்பி அவர் மூலம் செய்தியைத் தெரிவிப்பது

ஆகியவை அம்மூன்று வழிகளாகும்.

இரண்டவதாகக் கூறப்படும் திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவதற்கு மூஸா (அலை) அவர்களுடன் அல்லாஹ் நேருக்கு நேர் உரையாடியதை உதாரணமாகக் கூறலாம்.

மூஸா (அலை) அவர்கள் இறைவனை நேரில் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் கூறியதைத் தமது செவிகளால் கேட்டார்கள் என்பதைத் திருக்குர்ஆன் பல வசனங்களில் எடுத்துக் காட்டுகிறது.

(பார்க்க: திருக்குர்ஆன் 4:164, 7:143,144, 19:51,52, 28:30, 20:11,12,13)

ஒரு தூதரை அனுப்பிப் பேசுவான் என்பது, ஜிப்ரீல் போன்ற வானவர்கள் மூலம் இறைத்தூதர்களுக்குச் செய்தி அறிவிப்பதாகும்.

(பார்க்க: திருக்குர்ஆன் 2:97, 3:39, 3:42, 3:45, 11:69, 11:77, 15:52,53, 15:61,62, 16:2, 16:102, 19:19, 20:21, 22:75, 26:193, 29:31, 51:28, 53:56, 81:19)

மனிதர்களுடன் அல்லாஹ் பேசுவதற்குரிய மூன்று வழிகளில் இரண்டு வழிகளைப் பார்த்தோம். நேரடியாகப் பேசுவது என்பதன் பொருள் நமக்கு விளங்குகிறது. வானவர்கள் வழியாகச் சொல்லி அனுப்புவதன் பொருளும் நமக்கு விளங்குகிறது. வஹீயின் மூலம் பேசுதல் என்பது மற்றொரு வழிமுறையாக மேற்கண்ட 42:51 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக வஹீ எனும் சொல் இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் அனைத்து வகைச் செய்திகளையும் குறிக்கும் என்றாலும் இவ்வசனத்தில் அவ்வாறு பொதுவான கருத்தைக் கொடுக்க முடியாது.

இரண்டு வகையான வஹீயை வேறு வார்த்தைகளால் கூறிவிட்டு மூன்றாவதாக "வஹீயின் மூலம்" எனக் கூறப்பட்டுள்ளதால் அவ்விரண்டு வகையிலும் சேராத மற்றொரு வகை வஹீயை மட்டுமே இது குறிக்க முடியும். இவ்விரு வகை தவிர ஏதேனும் வஹீ இருக்கிறது என்றால் "தான் கூற விரும்புவதைத் தனது தூதரின் உள்ளத்தில் இறைவன் பதிவு செய்தல்" என்பது தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

வஹீயில் இப்படி ஒரு வகை உள்ளது என்பதைத் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.

தேனீக்கள் எவ்வளவு தொலைவு பறந்து சென்றாலும் எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தனது கூட்டுக்கு வந்து விடும் என்பதைப் பற்றி திருக்குர்ஆன் பேசும் போது 16:68 வசனத்தில் "தேனீக்களுக்கு உமது இறைவன் வஹீ அறிவித்தான்" என்று கூறுகிறது.

அதாவது, தான் கூற விரும்பும் செய்தியைத் தேனீக்களுக்கு உள்ளுணர்வாக இறைவன் ஏற்படுத்தினான் என இவ்வசனம் கூறுகிறது. இது போன்ற வஹீ மூலமும் இறைவன் தனது தூதர்களிடம் பேசுவான். இது மூன்றாவது வகையாகும்.

இந்த மூன்று வகையான வஹீயையும் நம்புபவர் தான் உண்மையில் குர்ஆனை நம்பியவராவார். இதை விடுத்து, குர்ஆன் மட்டும் போதும் என யாரேனும் வாதிட்டால் அவர்கள் இந்த வசனத்தை மறுக்கிறார்கள்.

இறைவன் நேருக்கு நேராகப் பேசி அருளிய செய்தியை மறுக்கின்றனர். உள்ளுணர்வு மூலம் இறைவன் அறிவிக்கும் செய்தியையும் மறுக்கின்றனர். வானவர்கள் வழியாகக் குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் வந்திருக்கலாம். அவற்றையும் இவர்கள் மறுத்தவர்களாகின்றனர்.

இறைவன் அருளியதைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையில் பெரும்பகுதியை இவர்கள் மறுக்கின்றனர். ஹதீஸ்களைப் பின்பற்றுவோர் தான் அல்லாஹ் அருளியதை முழுமையாக நம்புகின்றனர்.