469. நெருப்புக் குண்டத்துக்கு உரியோர் என்றால் யார்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சத்திய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் சொல்லொணாத துன்பங்களுக்கு உள்ளானார்கள். பலவிதமான சித்திரவதைகளை அனுபவித்தனர்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காக நெருப்புக் குண்டத்தை வளர்த்து அனைவரும் சாட்சிகளாக இருந்து அவர்களை அதில் தள்ளினார்கள். அந்தக் கொடுமையைத் தான் அல்லாஹ் இவ்வசனங்களில் (85:4-8) சொல்லிக் காட்டுகிறான்.
இவ்வசனங்களை மேலோட்டமாக வாசித்தாலே இதை அறிந்து கொள்ளலாம்.
ஆனால் அதிகமான விரிவுரை நூல்களில் கடந்த காலத்தில் கொள்கைப்பிடிப்புடன் இருந்த ஒரு இளைஞனைப் பற்றி இவ்வசனம் பேசுகிறது என்று எழுதி வைத்துள்ளனர்.
அந்த இளைஞனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை முஸ்லிம் 7703வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. அந்தச் சம்பவத்துடன் இவ்வசனத்தைத் தொடர்புபடுத்துகின்றனர்.
இவ்வசனம் அந்தச் சம்பவத்தைச் சொல்கிறது என்பதற்கு இவ்வசனத்தில் எந்தக் குறிப்பும் இல்லை.
என்றைக்கோ நடந்தததைச் சொல்லிக் காட்டுவது போல் இவ்வசனங்கள் அமையவில்லை.
இப்படி ஒரு சம்பவம் அன்றைய அரபுகளால் பரவலாக அறியப்பட்டதாக இருந்தது என்பதற்கும் ஆதாரம் இல்லை.
எனவே இவ்வசனங்களை வாசிக்கும் போது இதிலிருந்து என்ன கருத்து கிடைக்கிறதோ அதுதான் இவ்வசனங்களின் விளக்கமாகும்.