401. கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம்
இவ்வசனத்தில் (2:178) கொலை செய்தவனை, கொல்லப்பட்டவனின் வாரிசுகள் மன்னிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கொலை செய்தவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டமாகும்.
ஆயினும் கொல்லப்பட்டவனின் வாரிசுகள், கொலையாளியை மன்னித்து விட்டால் கொலையாளி மரண தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்.
ஆனால் அதற்கான இழப்பீட்டை கொல்லப்பட்டவனின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும். கொல்லப்பட்ட வனுக்குப் பல வாரிசுகள் இருந்து, ஒரே ஒருவர் மன்னித்தால் கூட கொலை யாளிக்கு மரண தண்டனை கிடையாது.
இதனால் தான் "ஏதேனும் மன்னிக் கப்பட்டால்" என்று இவ்வசனத்தில் கூறப்படுகின்றது.
கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதைச் சட்டமாகக் கொண்டுள்ள பல நாடுகளில் கொலையாளியை மன்னிக்கும் அதிகாரத்தை நாட்டின் அதிபருக்கு வழங்கியிருப்பதைக் காண்கிறோம்.
ஒருவன் கொல்லப்பட்டால் அதனால் அவனது வாரிசுகள் தான் பாதிக்கப்படுகின்றனர். அதனால் ஏற்படும் கஷ்டங்களும், வேதனையும், வலியும் அவர்களுக்குத் தான் தெரியும்.
எனவே இந்த மன்னிக்கும் அதிகாரம் பாதிக்கப்பட்டவனிடம் தான் இருக்க வேண்டும். ஒருவன் கொல்லப்பட்டதால் எந்தப் பாதிப்பும் அடையாத, நாட்டின் அதிபர்களிடம் இந்த அதிகாரத்தை அளிப்பது மாபெரும் அநீதியாகும்.
தனது தந்தையைக் கொன்றவனுக்கு மரண தண்டனைதான் அளிக்க வேண்டும் என்று அவனது மகன் நினைக்கும் போது, அதற்கு எதிராக, நாட்டின் அதிபர் கருணை காட்டுவது மிகப் பெரும் அக்கிரமமாகும்.
இந்த அறிவுப்பூர்வமான, நியாயமான சட்டம் தான் இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது.