361. நாளின் துவக்கம் எது?

இவ்வசனத்தில் (2:239) கூறப்படும் நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

இதைக் கொண்டு நாளின் துவக்கம் பகல் தான் என்று சிலர் புதிதாக வாதிடத் துவங்கியுள்ளனர்.

"நாளின் ஆரம்பம் பகல் என்றிருந் தால் தான் அஸர் தொழுகை நடுத் தொழுகையாக வர முடியும். இரவு என்று கூறினால், இரவின் முதல் தொழுகை மஃரிப், இதன்படி ஸுப்ஹுத் தொழுகை தான் நடுத் தொழுகையாக வர வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுப்ஹு என்று கூறாமல் அஸர் என்று கூறியிருப்பதால் நாளின் ஆரம்பம் பகலே!" என்று இவர்கள் கூறுகின்றனர்.

நபிகள் நாயகம் காலம் முதல் இன்று வரை முஸ்லிம் சமுதாயத்தில் "மஃரிப் தான் நாளின் துவக்கம்" என்பது கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவர்கள் இவ்வசனத்தைச் சான்றாகக் காட்டி, சுப்ஹ் தான் நாளின் துவக்கம் என்று புதிதாக வாதிடுகின்றனர்.

இதுவரை கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றை மறுத்து, புதிதாக ஒரு கருத்தை நிறுவ விரும்புபவர்கள், தங்களின் வாதத்தை சந்தேகத் திற்கு இடமின்றி நிரூபிக்கின்ற தெளி வான சான்றுகளைக் காட்ட வேண்டும்.

மேற்கண்ட வசனம் இவர்களின் கருத்தைத் தெளிவாக அறிவிக்கும் வகையில் இருக்கவில்லை. மாறாக, இதற்குப் பல கருத்துக்கள் அறிஞர்களால் சொல்லப்பட்டுள்ளன.

நடுத்தொழுகை என்பதில் "நடு" என்பது வரிசைக் கிரமத்தை மட்டும் குறிக்காது. நடுத்தரம், சிறப்பு என்ற கருத்திலும் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.

நடுத்தொழுகை என்று மொழி பெயர்த்த இடத்தில் நடு என்ற கருத்தைத் தர பயன்படுத்தப்பட்ட சொல் "அல் உஸ்தா" என்ற அரபிச் சொல்லாகும். இதற்கு "நடு" என்றும் சிறப்பிற்குரியது என்றும் பொருள் உண்டு. 2:239 வசனத்தில் சிறப்பிற்குரியது என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதை ஹதீஸ் கலை மேதை ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானீ தமது புகாரியின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில் தெளிவுபடுத்துகிறார்கள்.

ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் கூற்றுக்கு குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் சான்றாக உள்ளன. "அல் உஸ்தா" என்ற சொல்லின் மூலச்சொல்லி லிருந்து பிறந்த சொற்கள் இரண்டு பொருள்களுக்கு மத்தியில் உள்ளவை என்ற பொருளல்லாமல், "சிறந்தது" என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க: திருக்குர்ஆன் 68:28, 2:143)

மிஃராஜ் இரவில் தொழுகை கடமை யாக்கப்பட்டது. இவ்வாறு கடமையாக்கப்பட்ட பிறகு வந்த முதல் தொழுகை ஸுப்ஹு தான். கடமையாக்கப்பட்ட வரிசைப்படிப் பார்த்தால் அஸர் நடுத் தொழுகையாகின்றது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

இவ்விரண்டும் எந்த ஆதாரங்களுடனும் மோதாமலும் அறிவுக்குப் பொருத் தமான வகையிலும் அமைந்துள்ளன.

ஆனால் இவர்கள் புதிதாகக் கண்டுபிடித்த மூன்றாவது கருத்து, நாளின் துவக்கம் மஃரிப் தான் எனத் தெளிவாகக் கூறும் ஏராளமான சான்றுகளை மறுப்பதாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மஃரிப் தான் ஒரு நாளின் துவக்கம் என்று கூறப்பட்டு வந்தது.

"லைலதுல் கத்ர் இரவு பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது?" என்று பேசிக் கொண்டோம். இது ரமளான் மாதம் 21ஆம் காலையில் நடந்தது. நான் புறப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர் களுடன் மஃரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். லைலதுல் கத்ர் பற்றிக் கேட்டு வர என்னை பனூ ஸலமா கூட்டத்தினர் அனுப்பியதைத் தெரிவித்தேன். இது எத்தனையாவது இரவு என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். 22ஆம் இரவு என்று நான் குறிப்பிட்டேன். இது தான் அந்த இரவு என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் திரும்பி வந்து அடுத்த இரவும் எனக் கூறி 23ஆம் இரவைக் குறிப்பிட்டனர்.

(நூல்: அபூதாவூத் 1171)

அப்துல்லாஹ் பின் உனைஸ்(ரலி), 21ஆம் நாள் காலையில் புறப்பட்டு மஃரிபை அடைகிறார். நாளின் ஆரம்பம் ஸுப்ஹு தான் என்றால் அன்றைய மஃரிபை 21ஆம் நாள் மஃரிப் எனக் கூற வேண்டும். ஆனால் 22 ஆம் நாள் மஃரிப் என்று கூறுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதை அங்கீகரிக்கிறார்கள். இதிலிலிருந்து மஃரிப் தான் நாளின் துவக்கம் என்பதைச் சந்தேகமற அறியலாம்.

தண்ணீரில் பேரீச்சம் பழத்தை ஊற வைத்து மறு நாள் அந்தத் தண்ணீரை அருந்துவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கம். இது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) பின்வருமாறு கூறுகிறார்கள்.

திங்கட்கிழமை இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீரில் பேரீச்சம்பழத்தை நாங்கள் ஊற வைப்போம். அதைத் திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமை அஸர் வரையும் அருந்துவார்கள்.

(நூல்: முஸ்லிம் 3740.)

ஒரு நாளின் துவக்கம் ஸுப்ஹ் என்றால் திங்கள் இரவு ஊற வைத்ததைச் செவ்வாய் அன்று தான் அருந்த முடியும். திங்கள் அன்று அருந்த முடியாது. "திங்கள் இரவு ஊற வைத்ததைத் திங்கள் கிழமை அருந்துவார்கள்" என்ற சொற்றொடரிலிலிருந்து நாளின் துவக்கம் ஸுப்ஹ் அல்ல என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் நடுவில் உள்ள பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது வழக்கம். அவ்வழக்கப்படி ஒரு ஆண்டு இஃதிகாப் இருந்தனர். 21ஆம் இரவு வந்த போது, - அந்த இரவுக்குரிய காலையில் தான் இஃதிகாபிலிலிருந்து வெளியேறுவது அவர்களின் வழக்கம் - "என்னுடன் இஃதிகாப் இருந்தவர்கள் கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாப் இருக் கட்டும். அவ்விரவு எனக்குக் காட்டப்பட்டு பின்னர் மறக்கடிக்கப்பட்டு விட்டது. அன்று காலையில் சேற்றிலும், தண்ணீரிலும் ஸஜ்தாச் செய்வதாகக் (கனவு) கண்டேன். எனவே "கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங்கள்! ஒவ்வொரு ஒற்றைப்படை நாட்களிலும் தேடுங்கள்" என்றனர். அன்றிரவு மழை பொழிந்தது. பள்ளியின் பந்தலிலிலிருந்து தண்ணீர் வழிந்தது. 21ஆம் நாள் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெற்றியில் சேற்றையும், தண்ணீரையும் என் கண்கள் கண்டன.

(நூல்: புகாரி 2027)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 21ஆம் இரவில் மீண்டும் இஃதிகாப் இருந்தனர். அன்றிரவு மழை பெய்து அவர்களின் நெற்றியில் சேறு படிந்ததை ஸுப்ஹில் அபூஸயீத் (ரலி) பார்த்ததாகக் கூறுகிறார்.

நாளின் துவக்கம் ஸுப்ஹு என்றால் 22வது நாள் ஸுப்ஹு என்று தான் அதைக் கூற வேண்டும். ஆனால் நபித்தோழரோ 21ஆம் இரவுக்கு அடுத்து வரும் ஸுப்ஹை 21வது நாள் ஸுப்ஹ் எனக் கூறுகிறார். இதிலிலிருந்து நாளின் துவக்கம் இரவு தான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

மேலும் அன்று காலை தான் இஃதிகாபை விட்டு வெளியேறுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கம் என்ற சொல்லும் கவனிக்கத்தக்கது. ஸுப்ஹிலிலிருந்து தான் நாள் துவங்குகிறது என்றால் "மறு நாள் காலையில்" வெளியேறுவார்கள் என்று தான் கூற வேண்டும். "அன்று காலையில்" வெளியேறுவார்கள் எனக் கூற முடியாது. அன்று காலையில் என்று கூறியிருப்பதால் நாளின் துவக்கம் இரவு தான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது.

இது போல் இன்றும் ஏராளமான சான்றுகள் மஃரிப் தான் நாளின் துவக்கம் என்பதற்குச் சான்றாக உள்ளன.

நடுத்தொழுகை என்ற சொல்லை வைத்து, நாளின் துவக்கத்தை முடிவு செய்வதை விட கிழமையும், தேதியும் குறித்துப் பேசும் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.

நாளின் துவக்கம் பகல் தான் என்பதற்கு ஆதாரமாக இவர்கள் காட்டும் இந்த வசனம், இவர்களது கருத்தைத் தெளிவாகச் சொல்வதாக இல்லை. மேலும் அவர்களது இந்தக் கருத்து மேற்கண்ட ஆதாரங்களுக்கு முரணாகவும் அமைந்துள்ளதால் இது முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டிய நச்சுக் கருத்து என்பதில் ஐயமில்லை.