182. சூனியம் என்பது கற்பனையே!
சூனியம் என்ற வித்தை மூலம் பாரதூரமான காரியங்களைச் செய்ய முடியும் என்று பலரும் எண்ணுகின்றனர்.
இருப்பதை இல்லாமல் ஆக்கவோ, இல்லாததை உருவாக்கவோ, ஒன்றை வேறொன்றாக மாற்றவோ எந்த வித்தையும் கிடையாது.
தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இருக்கும் பொருளையே யாருக்கும் தெரியாத வகையில் மறைத்துப் பின்னர் எடுத்துக் காட்ட முடியும்.
திருக்குர்ஆனின் 7:116 வசனத்தில் "சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான்.
20:66 வசனத்தில் "பாம்பைப் போல் கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்தினார்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான். "கயிறுகளைப் பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள்" என்று அல்லாஹ் கூறவில்லை.
20:69 வசனத்தில் "சூனியம் என்பது ஒரு சூழ்ச்சி, தந்திரம்" என்று அல்லாஹ் கூறுகிறான்.
மேஜிக் எனப்படும் கலை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேறில்லை. கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும், இல்லாததை உண்டாக்குவேன் என்றும் புளுகக் கூடியவர்கள், தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடியவில்லை. மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர்களாக சிலர் ஆகியிருக்க முடியும்.
இதிலிருந்தே சூனியம் என்பது வெறும் பித்தலாட்டம் என அறிய முடியும்.
அதிக விபரத்திற்கு 28, 285, 357 ஆகிய குறிப்புகளைக் காண்க!