414. முந்தைய வேதங்களுக்கு குர்ஆன் என்ற பெயர்
குர்ஆன் என்ற சொல் பெரும்பாலும், திருக்குர்ஆனைக் குறிப்பிடுவதற்கே பயன்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் இறைவனால் அருளப்பட்ட முந்தைய வேதங்களைக் குறிப்பிடும் போதும் குர்ஆன் என்ற சொல் பயன்படுத்தப்படும்.
திருக்குர்ஆனில் அனைத்து இடங்களிலும் "குர்ஆன்" என்ற சொல், நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனையே குறிக்கிறது.
இவ்வசனத்தில் (15:91) மட்டும் "குர்ஆன்" என்ற சொல் திருக்குர்ஆனைக் குறிக்காது.
திருக்குர்ஆன் என்று பொருள் செய்தால் அது இந்த இடத்தில் பொருந்தாது என்பது இந்த வசனத்தைப் படிப்பவர்கள் அனைவருக்கும் எளிதில் விளங்கும்.
அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் குர்ஆன் என்ற சொல்லை முந்தைய வேதத்தைக் குறிப்பிடு வதற்குப் பயன்படுத்தியுள்ளார்கள்.
தாவூத் நபிக்கு, குர்ஆன் ஓதுவது எளிதாக்கப்பட்டிருந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(பார்க்க: புகாரி 3417)
தாவூத் நபி காலத்தில் குர்ஆன் அருளப்பட்டிருக்கவில்லை. அவருக்கு ஸபூர் என்ற வேதம் தான் வழங்கப்பட்டிருந்தது. ஸபூர் வேதத்தைத் தான் அவர் ஓதியிருக்க வேண்டும். எனவே இந்த ஹதீஸில் குர்ஆன் என்ற வார்த்தைக்கு ஸபூர் என்று பொருள் கொள்ள வேண்டும்.