342. இறுதிக் காலத்தில் ஈஸா நபி வருவார்

இவ்வசனம் (43:61) ஈஸா நபியைப் பற்றிக் கூறுகின்ற வசனம். அவர் கியாமத் நாளின் அடையாளம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

கியாமத் நாளின் அடையாளம் என்று ஒருவரைப் பற்றிக் கூறுவதென்றால் அவர் அந்த நாளுக்கு மிக நெருக்கத்தில் உலகத்தில் வாழ வேண்டும். அப்போது தான் அவரை கியாமத் நாளின் அடையாளம் எனக் கூற முடியும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரை கியாமத் நாளின் அடையாளம் என்று எப்படிக் கூற முடியும்?

ஈஸா நபியைப் பொறுத்த வரையில் அவர்கள் அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டார்கள்; ஆள் மாறாட்டம் செய்து வேறொருவரைத் தான் ஈஸா நபியின் எதிரிகள் கொன்றனர். உயர்த்தப்பட்டவர், இறுதிக் காலத்தில் யுக முடிவு நாளுக்கு நெருக்கத்தில் மீண்டும் வருவார்; மரணிப்பதற்காக அவர் இந்த உலகத்திற்கு மீண்டும் அனுப்பப்படுவார் என நபிகள் நாயகத்தின் ஏற்கத்தக்க ஏராளமான பொன்மொழிகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பொன்மொழிகள் இந்த வசனத்திற்கு மிகச் சிறந்த விளக்கமாகத் திகழ்கின்றன.

மேலும் இது பற்றி விபரம் அறிய 101, 133, 134, 151, 278 ஆகிய குறிப்புகளைக் காண்க!