60. இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள்
அல்லாஹ்வை எப்போதும் நினைக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அவனை நினைத்து விட்டு மற்ற நாட்களில் நினைக்காமல் இருக்கலாம் என்ற கருத்து இவ்வசனத்தில் (2:203) அடங்கியுள்ளது.
எனவே இதன் பொருள் பொதுவாக அல்லாஹ்வை நினைப்பது அல்ல. மாறாக குறிப்பிட்ட ஒரு வணக்கத்தை குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டும் என்பது தான் இதன் பொருள். குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டிய அந்தக் குறிப்பிட்ட வணக்கம் என்ன என்பது குர்ஆனில் கூறப்படவில்லை.
"குறிப்பிட்ட இடத்தில் கல் எறிதல்" என்ற வணக்கத்தைத் தான் இந்த வசனம் குறிக்கிறது என்று ஹதீஸ் அடிப்படையில் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
ஹதீஸ்கள் தேவை இல்லை என்போர் குறிப்பிட்ட நாட்களையும் குர்ஆனிலிருந்து காட்ட முடியாது. குறிப்பிட்ட வணக்கத்தையும் குர்ஆனிலிருந்து காட்ட முடியாது. மொத்தத்தில் ஹதீஸ்கள் தேவை இல்லை என்று கூறுவதன் மூலம் குர்ஆன் தெளிவானது அல்ல என்று இவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்.
அடுத்ததாக "இரண்டு நாட்களில் விரைவோர் மீது குற்றம் இல்லை" என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. இரண்டு நாட்களில் எங்கே விரைவது? எதற்கு விரைவது? இக்கேள்விக்கு குர்ஆனில் விடை இல்லாவிட்டாலும் நபிகள் நாயகத்தின் விளக்கத்தில் விடை உள்ளது.
கல் எறிதல் என்ற வணக்கத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இயலாமல் அவசர வேலை உள்ளவர்கள் இரண்டு நாட்கள் மட்டும் கல் எறிந்து விட்டு புறப்பட்டால் அது குற்றம் இல்லை என்று ஹதீஸ்கள் விளக்குகின்றன.