111. பாதிப்பு ஏற்படாத பங்கீடு
குத்து மதிப்பாக எதையும் பங்கீடு செய்யும் போது சிலர் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. இன்னாருக்கு இவ்வளவு என்று கணக்குப்படி பங்கீடு செய்யும் போது பாதிப்பு ஏற்பட வழியில்லை.
அவ்வாறு இருக்கும் போது "பாதிப்பு ஏற்படாத வகையில் பங்கீடு செய்ய வேண்டும் என்று இவ்வசனத்தில் (4:12) அல்லாஹ் ஏன் கூற வேண்டும்? இன்னாருக்கு இவ்வளவு என்று பங்கிடும் போது யாருக்கும் பாதிப்பு ஏற்படாதே என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்".
கணக்குப்படி பங்கீடு செய்யும் போதும் சில நேரங்களில் பாதிப்பு ஏற்படும் என்பது படைத்த இறைவனுக்குத் தெரியுமாதலால் தான் இவ்வாறு கூறியுள்ளான்.
ஒரு பெண் இறக்கும் போது,
கணவன்
இரண்டு பெண் குழந்தைகள்
தாய்
தந்தை
ஆகியோரை விட்டுச் சென்றால்
கணவனுக்கு நான்கில் ஒன்று 1/4
இரு பெண் குழந்தைகளுக்கு மூன்றில் இரண்டு 2/3
தாய்க்கு ஆறில் ஒன்று 1/6
தந்தைக்கு ஆறில் ஒன்று 1/6
எனப் பங்கிட வேண்டும் என்பது திருக்குர்ஆன் கூறும் சட்டம்.
மூன்றில் ஒரு பங்கும், நான்கில் ஒரு பங்கும் கொடுக்க வேண்டுமானால் இரண்டுக்கும் பொதுவான 12 பங்குகளாக மொத்தச் சொத்தைப் பிரித்தால் தான் இது சாத்தியமாகும்.
12 பங்கு வைத்து அதில் நான்கில் ஒரு பங்கு (கணவனுக்கு) - 3
12 பங்கில் மூன்றில் இரு பங்கு (இரு மகள்களுக்கு) - 8
12 பங்கில் ஆறில் ஒரு பங்கு (தந்தைக்கு) - 2
12 பங்கில் ஆறில் ஒரு பங்கு (தாய்க்கு) - 2
இவ்வாறு பங்கீடு செய்தால் 8+3+2+2 = 15 ஆகும்.
12 பங்கில் இந்தத் தொகையைக் கொடுத்தால் தான் அவரவருக்குரிய சதவிகிதம் கிடைக்கும். ஆனால் இப்போது 15 பங்கிலிருந்து தான் மேற்கண்ட பங்கைக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கொடுக்கும் போது அல்லாஹ் குறிப்பிட்ட பாகம் யாருக்கும் கிடைக்காது. 12ல் 3 கொடுத்தால் தான் அது கால் பாகமாக ஆகும். 15ல் 3 கொடுத்தால் அது கால் பாகமாக ஆகாது.
இப்படியே ஒவ்வொருவரின் பங்கும் குறைகிறது. ஒருவர் மட்டும் 12ல் 3 தான் எனக்கு வேண்டும் என்று அடம் பிடித்தால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இது போன்ற சூழ்நிலையில் சிலருக்கு மட்டும், உதாரணமாக கணவனுக்கு மட்டும் 12 பங்கில் 3 கொடுத்து விட்டு மற்றவர்களுக்குக் குறைத்தால் அது அவர்களுக்குக் கேடு தரும்.
15 பங்கிலிருந்து பங்கிட்டுக் கொடுத்தால் நால்வருக்கும் அவரவர் சதவிகிதத்திற்கேற்பச் சிறிது குறையும். ஒருவருக்குக் குறைந்து மற்றவருக்கு நிறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்படாது.
இவ்வாறு அவரவர் சதவிகிதத்திற்கேற்ப குறைத்துப் பங்கிட வேண்டும் என்பதற்காகத் தான் "பாதிப்பு ஏற்படாத வகையில்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இழப்பை அனைவரும் சமமான சதவிகிதத்தில் பிரித்துக் கொள்ளும் போது ஒருவருக்கு மட்டும் பாதிப்பு வராது. இது போன்ற நிலைமைகளுக்காகவே "யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்" என அல்லாஹ் கூறுகிறான்.
(இக்குறிப்புக்குரிய வசனம்: 4:12)