461. ஸுஹுபும் கிதாபும் ஒன்றா?
திருக்குர்ஆன் 80:13, 98:2 வசனங்களில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூய்மையான ஸுஹுஃபுகளை ஓதுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் கிதாப் என்று கூறப்படுவது போல் 98:2 வசனத்தில் ஸுஹுஃபு என்று கூறப்பட்டுள்ளது.
தனித்தனி ஏடுகளாக இருக்கும் போது ஸுஹுஃபு என்றும், அந்த ஏடுகள் அனைத்தையும் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கும் போது அது கிதாப் என்றும் சொல்லப்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் வரை திருக்குர்ஆன் ஸுஹுஃபு என்ற தொகுக்கப்படாத ஏடுகள் வடிவத்தில் தான் இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் திருக்குர்ஆன் முழுமையாக எழுதப்பட்டிருந்தாலும் அனைத்து வசனங்களும் வரிசைப்படி அமைக்கப்பட்டிருந்தாலும், அத்தியாயங்களைப் பொறுத்த வரை ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கப்படாமல் இருந்தது. இப்படி இருப்பதைத் தான் ஸுஹுஃபு என்பார்கள்.
லவ்ஹுல் மஹ்ஃபூல் எனும் பதிவேட்டில் இருந்து எடுத்து வரப்படுகிறது என்ற அடிப்படையில் இதைக் கிதாப் என்றும் சொல்லலாம்.
ஸுஹுஃபு என்றால் சிறு வேதம், கிதாப் என்றால் பெரிய வேதம் என்று சிலர் கூறுவார்கள். பெரிய வேதமாகிய திருக்குர்ஆனும் ஸுஹுஃப் என்று இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளதால் இந்தக் கூற்று தவறு என்பதை அறிந்து கொள்ளலாம்.
312வது குறிப்பையும் காண்க!