30. சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்?

இறைவன் அருளிய வசனத்தை அவனே ஏன் மாற்ற வேண்டும்? அவனுக்குத் தான் அனைத்தும் தெரியுமே? மாற்றுவதற்கு அவசியம் ஏற்படாத வகையில் முதலிலேயே சரியாகக் கூறி விட வேண்டியது தானே? என்று இவ்வசனங்களை வாசிக்கும் சிலர் நினைக்கலாம்.

இது இறைவனின் அறியாமையைக் குறிக்காது. அவனது அளவற்ற அறிவையே குறிக்கும் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வரலாறுகளிலும், வாக்குக் கொடுப்பதிலும் தான் முன்னர் சொன்னதை மாற்றிக் கொள்ளக் கூடாது.

சட்ட திட்டங்களைப் பொருத்தவரை இருக்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தான் சட்டம் போட வேண்டும். சூழ்நிலை மாறிய பின் சட்டத்தை மாற்றாவிட்டால் தான் அறியாமையாகும்.

நெருக்கடியான நேரத்தில் அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும். நெருக்கடி நீங்கியதும் ஊரடங்கை விலக்கிக் கொள்ளும். ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அதையே தொடர்வதும் அறிவுடமையாகாது. அல்லது நெருக்கடியான நேரம் வரும் போதும் ஊரடங்கு உத்தரவு போட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதும் விவேகமல்ல!

ஒரு தாய், இரண்டு வயதுப் பாலகனுக்குச் சில உணவுகளை மறுப்பாள்; சாப்பிடக் கூடாது எனத் தடுப்பாள். அதே குழந்தை 10 வயதை அடையும் போது, முன்பு தடுத்த உணவை உண்ணுமாறு கூறுவாள். இவ்வாறு கூறும் நிலை ஏற்படும் என்பது அவளுக்கு ஏற்கனவே தெரியும். இங்கு குழந்தையின் நிலை தான் மாறியதே தவிர தாயின் அறிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

மக்காவில் உயிர் வாழ்வதே பெரும் பிரச்சினையாக இருக்கும் போது "திருடினால் கையை வெட்டுங்கள்" எனச் சட்டம் போட முடியாது. அப்படிப் போட்டால் அதற்கு அர்த்தம் இருக்காது. ஆட்சி அதிகாரம் முஸ்லிம்கள் கையில் வந்த பிறகு தான் இந்தச் சட்டத்தைப் போட முடியும். எனவே மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப சட்டங்கள் வழங்குவது தான் அறிவுடமை.

ஒரு நிகழ்ச்சி 2002ல் நடந்தது எனக் கூறி விட்டு 1967ல் அந்த நிகழ்ச்சி நடந்தது என்று இன்னொரு நாள் கூறக் கூடாது. ஏனெனில் இது வரலாறு! நடந்ததை மாற்ற முடியாது. இத்தகைய மாறுதல் ஏதும் குர்ஆனில் இல்லை.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:106, 13:39, 16:101).