அந்த நிகழ்ச்சி

மொத்த வசனங்கள் : 96

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் வாகிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆக்கப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
56:1, 2, 3. அந்த நிகழ்ச்சி1 நடக்கும் போது, அது நிகழ்வதைத் தடுப்பதோ, (அதைத்) தாமதப்படுத்துவதோ, முற்படுத்துவதோ எதுவுமில்லை.26
56:4, 5, 6. பூமி ஒரேயடியாக அசைக்கப்படும் போது, மலைகள் தூள் தூளாக்கப்படும் போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.26
56:7. நீங்கள் மூன்று பிரிவினராக ஆவீர்கள்.
56:8. (முதல் வகையினர்) வலப்புறத்திலிருப்போர். வலப்புறத்தில் இருப்போர் என்றால் என்ன?
56:9. (இரண்டாம் வகையினர்) இடது புறத்தில் இருப்பவர்கள். இடது புறத்தில் இருப்போர் என்றால் என்ன?
56:10. (மூன்றாவது வகையினர்) முந்தியோர். (தகுதியிலும்) முந்தியோரே.
56:11. அவர்களே (இறைவனுக்கு) நெருக்கமானோர்.
56:12. இன்பமான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.
56:13, 14, 15. முதல் வகையினரில் (வலப் புறத்தார்) ஒரு தொகையினரும், கடைசி வகையினரில் சிறு தொகையினரும் அலங்க ரிக்கப்பட்ட கட்டில்களில் இருப்பார்கள்.26
56:16. ஒருவரையொருவர் எதிர் நோக்கி அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
56:17, 18. இளமை மாறாத சிறுவர்கள் நீரூற்றிலிருந்து நிரப்பப்பட்ட குவளையுடனும், கிண்ணங்களுடனும், கெண்டிகளுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள்.26
56:19. அதனால் அவர்களுக்குத் தலைவலி வராது. போதை மயக்கத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.
56:20, 21. அவர்கள் விரும்புகிற கனிகளுடனும், அவர்கள் ஆசைப்படும் பறவைகளின் மாமிசத்துடனும் (அச்சிறுவர்கள் சுற்றி வருவார்கள்).26
56:22, 23. ஹூருல் ஈன்களும்8 மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.26
56:24. அவர்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததற்கு இது கூலியாகும்
56:25. அங்கே வீணானதையோ, பாவமான சொல்லையோ செவியுற மாட்டார்கள்
56:26. ஸலாம் ஸலாம் என்ற சொல்லைத் தவிர.159
56:27. (அடுத்தது) வலது புறத்தில் இருப்பவர்கள்! வலது புறத்தில் இருப்போர் என்பது என்ன?
56:28, 29, 30, 31, 32, 33, 34. அவர்கள் முள் இல்லாத இலந்தை மரத்தினடியிலும், குலைகள் தொங்கும் வாழை மரத்தினடியிலும், நீண்ட நிழல்களின் அடியிலும், ஓட்டி விடப்படும் தண்ணீருக்கு அருகிலும், தடுக்கப்படாத, தீர்ந்து போகாத, ஏராளமான கனிகளுக்கு அருகிலும் உயரமான விரிப்புகளின் மீதும் இருப்பார்கள்.26
56:35. அப்பெண்களை (ஹூருல் ஈன்களை) நாமே அழகுறப் படைத்தோம்.
56:36, 37. அவர்களைக் கன்னியராகவும்,8 ஒத்த வயதினராகவும், நேசம்மிக்கோராகவும் ஆக்கினோம்.26
56:38, 39, 40. இது முதல் வகையினரில் ஒரு தொகையினரும், கடைசி வகையினரில் ஒரு தொகையினரும் ஆகிய வலது புறத்தில் இருப்போருக்கு உரியது.26
56:41. (அடுத்த சாரார்) இடது புறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன?
56:42, 43. அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள்.26
56:44. அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.
56:45. இதற்கு முன் அவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.
56:46. பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர்.
56:47, 48. "நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது உயிர்ப்பிக்கப்படுவோமா?" என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.26
56:49, 50. "முந்தையவர்களும், பிந்தையவர்களும் அறியப்பட்ட ஒரு நாளின்1 குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள்" என்று கூறுவீராக!26
56:51, 52. பொய்யெனக் கருதிக் கொண்டு வழிகேட்டில் இருந்தவர்களே! பின்னர், நீங்கள் ஸக்கூம் எனும் மரத்திலிருந்து உண்பீர்கள்.26
56:53. அதனால் வயிறுகளை நிரப்புவீர்கள்.
56:54. அதற்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர்கள்.
56:55. தாகம் கொண்ட ஒட்டகம் குடிப்பது போல் குடிப்பீர்கள்.
56:56. தீர்ப்பு நாளில் இதுவே அவர்களது விருந்து.
56:57. நாமே உங்களைப் படைத்தோம். நீங்கள் நம்ப மாட்டீர்களா?
56:58. நீங்கள் விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைச் சிந்தித்தீர்களா?
56:59. அதை நீங்கள் படைத்தீர்களா? அல்லது நாம் படைத்தோமா?
56:60, 61. உங்களுக்கிடையே மரணத்தை நாமே நிர்ணயித்தோம். உங்களைப் போன்றோரை நாம் மாற்றியமைக்கவும், நீங்கள் அறியாத வகையில் உங்களைப் படைக்கவும் இயலாதோர் அல்லர்.26
56:62. முதல் தடவை படைத்ததை நீங்கள் அறிந்துள்ளீர்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?
56:63. நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா?
56:64. நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?
56:65, 66, 67. நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். "நாம் கடன்பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம்" என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்.26
56:68. நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா?
56:69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா?
56:70. நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா?
56:71. நீங்கள் மூட்டுகிற நெருப்பைப் பற்றிச் சிந்தித்தீர்களா?
56:72. அதற்குரிய மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம் உருவாக்கினோமா?
56:73. இதனை ஒரு படிப்பினையாகவும், பயணிகளுக்குப் பயனளிப்பதாகவும் நாமே ஆக்கினோம்.
56:74. எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
56:75. நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.
56:76. நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம்.
56:77, 78. இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில்157 இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும்.26
56:79. தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள்.291
56:80. அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.
56:81. இந்தச் செய்தியையா அலட்சியம் செய்கிறீர்கள்?
56:82. உங்களுக்குச் செல்வம் வழங்கியிருப்பதற்கு (நன்றியாக) பொய்யெனக் கருதுகிறீர்களா?
56:83, 84. அது (உயிர்) ஒருவனது தொண்டைக் குழியை அடையும் போது, அந்நேரத்தில் (அவனை) நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.26
56:85. உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.49
56:86, 87. நீங்கள் (இம்மார்க்கத்தை) கடைப்பிடிக்காது இருந்தால், அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் அதை (உயிரை) திரும்பக் கொண்டு வரலாமே!26
56:88, 89. அவர் இறைவனுக்கு நெருக்கமானோரில் ஒருவராக இருந்தால், அவருக்கு உணவும், நறுமணமும், சுகமான சொர்க்கச் சோலையும் உள்ளன.26
56:90, 91. அவர் வலப்புறத்தைச் சேர்ந்தோராக இருந்தால் வலப்புறத்தாரிடமிருந்து உமக்கு ஸலாம்!"26
56:92, 93, 94. பொய்யெனக் கருதி வழி கெட்டவராக இருந்தால் கொதி நீரும், நரகில் கருகுவதும் விருந்தாகும்.26
56:95. இது உறுதியான உண்மை.
56:96. எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!