147. பிற சமுதாயங்களை விட கிறித்தவர்களை உயர்த்திப் பேசுவது ஏன்?

இவ்வசனத்தில் (5:82) கிறித்தவர்கள் மற்ற சமுதாயத்தினரை விடப் புகழ்ந்து சொல்லப்பட்டுள்ளனர்.

மற்ற எல்லா சமுதாயத்தையும் குர்ஆன் தாழ்த்திப் பேசுவதாக இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஒரு சமுதாயத்தின் வரலாறு பற்றி குர்ஆனில் கூறப்படுமானால் குர்ஆன் அருளப்படும் போது உள்ள நிலை என்று மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும்.

யூதர்களைப் புகழ்ந்து ஒரு வசனம் இருந்தால் அந்தப் புகழ் அவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களை மட்டுமே குறிக்கும். அதை ஆதாரமாகக் கொண்டு காலாகாலத்துக்கும் யூதர்களிடம் அந்தச் சிறப்பு உள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

கிறித்தவர்களைப் பற்றி கூறப்படும் வசனமும் அத்தகையது தான். அன்றைக்கு இருந்த யூதர்களை விட மக்காவின் நிராகரிப்பாளர்களை விட கிறித்தவர்கள் முஸ்லிம்களிடம் நெருக்கமாக இருந்ததால் அவர்கள் புகழ்ந்து பேசப்பட்டனர்.

இவ்வசனத்திலேயே "நாங்கள் கிறித்தவர்கள் எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்" என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் கிறித்தவத் தலைமையும் கிறித்தவ ஆட்சியும் தான் முஸ்லிம்களின் முதல் எதிரிகளாக மாறினர். நடந்து முடிந்த பல சிலுவைப் போர்கள் இதற்குச் சான்று. இன்றும் கூட கிறித்தவ சமுதாயத்தின் பொதுமக்கள் முஸ்லிம்களிடம் இணக்கமாக இருந்தாலும் கிறித்தவ ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் பகிரங்க எதிரிகளாக உள்ளனர்.

தமது ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நாடு பிடிக்கவும், பிற நாட்டின் வளங்களைச் சுரண்டவும் கிறித்தவ மார்க்கத்தைத் தவறாகப் பயன்டுத்தி வரும் அதிகார வர்க்கத்தை இது குறிக்காது.