அத்தி

மொத்த வசனங்கள் : 8

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
95:1. அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக!
95:2. தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக!
95:3. அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக!34
95:4. மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.
95:5. பின்னர் அவனை இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.
95:6. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவு இல்லாத கூலி உண்டு.
95:7. இதன் பின்னர் தீர்ப்பு நாளை1 உம்மால் எப்படிப் பொய்யெனக் கருத முடியும்?
95:8. தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் மேலான தீர்ப்பளிப்பவன் இல்லையா?