22. தூர் மலையை உயர்த்துதல்

திருக்குர்ஆனின் 2:63, 2:93, 4:154 ஆகிய வசனங்களில் தூர் மலையை அல்லாஹ் உயர்த்தி உடன்படிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளாமல் பல்வேறு விளக்கங்களைச் சிலர் கூறுகின்றனர். ஆனால் தூர் மலையை உயர்த்தியதாகக் கூறப்படுவதை அதன் நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

"தூர் மலையைப் பிடுங்கினோம்" என்றும், "மேலே மேகம் போல் அது நின்றது" என்றும், "தங்கள் மீது அது விழுந்து விடுமோ என்று அவர்கள் அஞ்சினார்கள்" என்றும் திருக்குர்ஆன் 7:171 வசனத்தில் கூறப்படுவதால் இதற்கு வேறு விதமான விளக்கம் கொடுப்பது தவறாகும். மலையை உயர்த்துவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானதே!