341. பாக்கியம் நிறைந்த இரவு
திருக்குர்ஆனைப் பாக்கியம் நிறைந்த இரவில் அருளியதாக இவ்வசனம் (44:3) கூறுகிறது. பாக்கியம் பொருந்திய இரவு எதுவென்பதை வேறு சில வசனங்கள் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.
திருக்குர்ஆன் ரமலான் மாதத்தில் அருளப்பட்டது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (2:185)
இந்தப் பாக்கியம் பொருந்திய இரவு என்பது ரமலானில் தான் இருக்கிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.
ரமலானில் எந்த இரவு என்பதைத் திருக்குர்ஆனில் தேடிப் பார்க்கும் போது "லைலத்துல் கத்ர்" இரவில் திருக்குர்ஆனை அருளினோம் என்று அல்லாஹ் கூறுகிறான். (97:1)
எனவே இவ்வசனத்தில் கூறப்படும் பாக்கியம் பொருந்திய இரவு என்பதும், லைலத்துல் கத்ர் என்பதும் ரமலான் மாதத்தில் இருக்கின்ற ஒரே இரவு தான்.
சிலர் இது ஷாபான் மாதத்தின் 15வது இரவைக் குறிக்கிறது என வாதிடுவார்கள். அதற்கு குர்ஆனிலோ, ஏற்கத்தக்க நபி மொழிகளிலோ எந்தச் சான்றும் இல்லை.
திருக்குர்ஆன் ஷாபான் மாதத்தின் 15வது இரவில் அருளப்பட்டது என்று கூறுவது, ரமலானில் தான் அருளப்பட்டது என்ற இறைவனின் கூற்றுக்கு எதிரானது.
இந்த வசனத்தை அடிப்படையாக வைத்துத் தான் "பராஅத்" என்று ஒரு இரவை முஸ்லிம்கள் தாமாக உருவாக்கிக் கொண்டாடி வருகின்றனர்.
"பராஅத் இரவு" என்ற சொல் கூட திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளிலோ பயன்படுத்தப்படவே இல்லை. இல்லாத ஒரு இரவைக் கற்பனை செய்து, அல்லாஹ்வின் வசனத்திற்குப் பொருத்தமற்ற விளக்கம் கொடுத்து அந்த நாளுக்கென்று சில சடங்குகளை உருவாக்கி, அறியாத முஸ்லிம்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஷாபான் மாதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாக நம்புவது, ரமலானில் அருளப்பட்டது என்ற குர்ஆனின் கூற்றுக்கு எதிரானது என்பதை அவர்கள் விளங்க வேண்டும்.
அவர்கள் தங்களின் தவறான கருத்துக்கு மற்றொரு விளக்கத்தையும் தருகிறார்கள். அதாவது, பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து முதல் வானத்திற்கு திருக்குர்ஆன் அருளப்பட்டது ஒரு இரவு; அங்கிருந்து சிறிது சிறிதாக நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்டது மற்றொரு இரவு எனக் கூறுகிறார்கள். இதற்கு ஏற்கத்தக்க ஹதீஸ்களில் எந்தச் சான்றும் இல்லை.
447 வது குறிப்பையும் காண்க.