338. சடலமாகப் போட்டோம் என்பதன் பொருள்
இவ்வசனத்திற்கு (38:34) பெரும்பாலான மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழிபெயர்த்துள்ளனர்.
ஸுலைமானின் சிம்மாசனத்தின் மீது முண்டத்தைப் போட்டோம்; சடலத்தைப் போட்டோம் என்று தங்கள் மொழி பெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கேற்ப கட்டுக்கதைகளையும் விளக்கவுரை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வசனத்தில் "ஸுலைமானை ஒரு சடலமாகப் போட்டோம்" என்று கூறப்படுகிறது. இது, நோயுற்று பலவீனப்பட்டு படுக்கையில் விழுந்து கிடக்கும் நிலையைக் குறிக்கும் சொல்லாகும்.
ஸுலைமான் நபி ஒரு தவறு செய்ததாகவும் அத்தவறிலிருந்து பின்னர் திருந்திக் கொண்டதாகவும் இவ்வசனமும் இதற்கு அடுத்த வசனமும் கூறுகிறது.
சோதிக்கும் முகமாக ஸுலைமான் நபிக்கு நோயை ஏற்படுத்தினோம் என்பது தான் அவரைச் சடலமாகப் போட்டோம் என்பதன் கருத்து.
நடைப்பிணமாக இருக்கிறான் என்று தமிழில் நாம் கூறுவது போன்ற வார்த்தைப் பிரயோகமே இந்தச் சொல்.
இவ்வாறு நோயுற்று செயல்பட முடியாத நிலையை அடைந்தவுடன் அவர் திருந்தினார். இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார் என்பது இதன் கருத்து.