433. மத நல்லிணக்கம் பேணும் இஸ்லாம்
பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய அறிவுரையை இவ்வசனம் (22:40) கூறுகிறது
ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் பெரிதும் மதிக் கின்றனர். ஆனால் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தை இன்னொரு மதத்தினர் மதிக்க மாட்டார்கள். இது இயல்பான ஒன்று தான்.
இரு மதத்தவர்கள் மத்தியில் கலவரம் நடக்கும் போது எதிர் மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் தான் முக்கிய மாகத் தாக்கப்படுகின்றன. உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவுப் பூர்வமாகச் சிந்திக்காததன் விளைவாகத் தான் இந்த நிலை ஏற்படுகிறது.
ஒவ்வொரு மதத்தினரும் தமது வழிபாட்டுத் தலங்களை, தமது சொத்துக்களை விடப் பெரிதாக மதிப்பதால் தங்களின் வழிபாட்டுத் தலம் தாக்கப்படும் போது அது போன்ற எதிர்த் தாக்குதலில் இறங்குவார்கள்.
எனவே, பிற மத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தும் தாக்குதல் உண்மை யில் நம் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தும் தாக்குதலாக அமைந்து விடுகிறது.
"உங்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் பள்ளிவாசல் உட்பட அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களும் தகர்க்கப்பட்டு விடும்'' என்ற அறிவுப்பூர்வமான வழிகாட்டுதலை இவ்வசனம் நமக்கு வழங்குகிறது.
கோவில்களோ, சர்ச்சுகளோ முஸ்லிம்களின் பார்வையில் வழிபாட்டுத் தலங்களாக இல்லாத போதும் அவற்றைத் தாக்கும் உரிமை கிடையாது என்பதைக் காரணத்துடன் இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.