430. எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி

நீங்கள் எங்கே இருந்தாலும் அதன் திசையையே முன்னோக்குங்கள் என்று 2:144 வசனம் கூறுகின்றது.

நீ எங்கிருந்து புறப்பட்டாலும் உனது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்பு என்று 2:149 வசனம் கூறுகின்றது.

நீ எங்கிருந்து புறப்பட்டாலும் உனது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்பு, நீங்கள் எங்கே இருந்தாலும் அதன் திசையிலேயே உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என 2:150 வது வசனம் கூறுகின்றது.

"இவ்வசனங்களில் எந்த இடத்திலும் தொழுகைக்காக மஸ்ஜிதுல் ஹராமை முன்னோக்குங்கள் எனக் கூறப்படவில்லை. பிரயாணம் செய்யும் போது கஃபாவை நோக்கியே பிரயாணம் செய்ய வேண்டும்; வடக்கு, தெற்கு, கிழக்குத் திசைகளில் எந்தப் பயணமும் மேற்கொள்ளக் கூடாது; அது மட்டுமின்றி நாம் எங்கே இருந்தாலும் கஃபாவை மட்டுமே நோக்க வேண்டும்" என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

இவ்வசனங்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தக் கருத்தைச் சொல்வது போல் அமைந்திருந்தாலும் இது தொழுகை குறித்து அருளப்பட்ட வசனங்களே என்பதை ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்கிறோம்.

குர்ஆனைச் சரியான முறையில் விளங்கிட நபிகள் நாயகம் அவர்களின் விளக்கம் அவசியம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.