435. வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா?
ஏழ்மையைக் காரணம் காட்டி திருமணத்தைத் தவிர்க்க வேண்டாம் என்று முதல் வசனம் கூறுகிறது. ஏழ்மை தீரும் வரை திருமணம் செய்யாமல் இருக்கலாம் என்று இரண்டாம் வசனம் கூறுகிறது என்பதால் இவ்விரு வசனங்களும் (24:32,33) முரண் போல் தோன்றலாம்.
ஆனால் இவ்விரு வழிகாட்டுதலும் வெவ்வேறு நிலையில் உள்ளவர்களுக்கு உரியது என்பதால் இதில் முரண்பாடு இல்லை.
நம்மிடம் அடிமைகளாக இருப்பவர் களுக்கு நாம் நமது பொறுப்பில் திருமணம் செய்து வைக்க வேண்டும். அவர்கள் ஏழைகளாக இருந்தால் இதன் பிறகு இறைவன் அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்குவான் என்பது முதல் வசனத்தின் கருத்து.
அதாவது, திருமணத்துக்குப் பிறகு தன்னிறைவு பெற்றோராக ஆக்குவதை முதல் வசனம் கூறுகிறது. அடிமை களாக இருப்பவர்களுக்கு அவர்களின் எஜமானர்கள் தமது செலவில் திருமணம் செய்து வைத்தால் அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்குரியதை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான் என்பது இதன் கருத்து.
அடிமையாக இல்லாதவர்கள், தமது சொந்தச் செலவில் மஹர் உள்ளிட்டவற்றைக் கொடுத்து திருமணம் செய்ய வசதி இல்லா விட்டால் அவர்கள் அதற்கான வசதி வரும் வரை மனக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பது இரண்டாவது வசனத்தின் கருத்து.
திருமணம் செய்த பின் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான் என்பது இவர்களுக்கும் உரியது தான்.
இரண்டும் வெவ்வேறு செய்திகளைக் கூறுவதால் இரண்டும் முரண்பாடு இல்லை.