420. குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி?

இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன், அவனாலேயே பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். முஸ்லிம்களின் இந்த நம்பிக்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மேற்கத்திய உலகம், குறிப்பாக கிறித்தவ மிஷனரிகள் குர்ஆனுடைய எழுத்துக்களில் உள்ள சில மாற்றங்களை எடுத்துக் காட்டி, குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திருக்குர்ஆனில் சில இடங்களில் நெடில்குறி தேவையில்லாத இடங்களில் நெடில்குறி எழுதப்பட்டுள்ளது, ஒரு எழுத்துக்குப் பதிலாக அதற்கு நெருக்கமான உச்சரிப்புடைய வேறொரு எழுத்து இடம் பெற்றுள்ளது. இவைகளை எடுத்துக் காட்டி குர்ஆனில் பிழை உள்ளது, குர்ஆன் பாதுகாக்கப் படவில்லை என்று கூறுகின்றனர். இது குறித்து, முன்னுரையில் இடம் பெற்றுள்ள "திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" பகுதியில் "எழுத்துப் பிழைகள்" என்ற தலைப்பில் காண்க!

இத்தகைய விஷமப் பிரச்சாரத்திற்கு இவ்வசனம் (29:49) தெளிவாகப் பதிலளிக்கின்றது.

திருக்குர்ஆனை அல்லாஹ்வே எழுதி, புத்தகமாகவோ, ஏடுகளாகவோ கொடுத்திருந்தால் அதில் இது போன்ற எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது என்பது சரி தான்.

ஆனால் திருக்குர்ஆன் எழுத்து வடிவமாக அருளப்படவில்லை. ஒலி வடிவில் அதாவது ஓசை வடிவில் தான் அருளப்பட்டது.

ஒவ்வொரு வசனத்தையும் ஜிப்ரீல் எனும் வானவர் வந்து கூறுவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கேட்டு மனனம் செய்து கொள்வார்கள். தமது தோழர்களையும் மனனம் செய்ய வைப்பார்கள்.

பின்னர், பாதுகாப்புக் காரணத்திற்காக தமது தோழர்களில் எழுதத் தெரிந்தவர்களை அழைத்து, தமக்கு அருளப்பட்ட வசனங்களை எழுதச் செய்வார்கள்.

எழுத்து வடிவில் ஆக்கியது மனிதர்களின் செயல் என்பதால் அதில் பிழை ஏற்படுவது இறைவேதத்தில் ஏற்படும் பிழையாக ஆகாது.

எனவே தான் "கல்வியாளர்களின் உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது" என்று இவ்வசனம் கூறுகின்றது.

உதாரணமாக, 37:68 வசனத்தில் "லா இலல் ஜஹீம்" என்று நெடிலாக எழுதப்பட்டுள்ளது. இந்த இடத்தில் "ல இலல் ஜஹீம்" என்று குறிலாகத் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இந்த இடத்தில் நெடிலுக்கான குறி எழுதப்பட்டிருந்தாலும், உலக முஸ்லிம்கள் அனைவரும் இதை, "ல இலல் ஜஹீம்" என்று குறிலாகத் தான் வாசிக்கிறார்கள்.

குர்ஆனுடைய ஓசையும் உச்சரிப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சான்று.