கவிஞர்கள்

மொத்த வசனங்கள் : 227

இந்த அத்தியாயத்தின் 221வது வசனம் முதல் 227 வரை கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் அல்லர் எனவும், அவர்களில் நல்ல கவிஞர்களும் கெட்ட கவிஞர்களும் உள்ளனர் என்றும் கூறப்படுவதால் கவிஞர்கள் எனப் பெயரிடப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
26:1. தா, ஸீம், மீம்.2
26:2. இவை தெளிவான வேதத்தின் வசனங்கள்.
26:3. அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்.
26:4. நாம் நினைத்தால் வானிலிருந்து அவர்களுக்கு அற்புதத்தை இறக்குவோம். அப்போது அவர்களின் கழுத்துக்கள் அதன் முன்னே பணிந்து விடும்.
26:5. அளவற்ற அருளாளனிடமிருந்து புதிதாக எந்த அறிவுரை வந்தாலும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
26:6. அவர்கள் பொய்யெனக் கருதினர். எதை அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது பற்றிய செய்திகள் அவர்களை வந்தடையும்.
26:7. பூமியில் மதிப்புமிக்க ஒவ்வொரு வகையிலும் எத்தனையோ முளைக்கச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் காணவில்லையா?
26:8. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:9. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:10, 11, 12. "அநீதி இழைக்கும் கூட்டமான ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தவரிடம் செல்வீராக! அவர்கள் அஞ்ச வேண்டாமா?" என்று உமது இறைவன் மூஸாவை அழைத்த போது "என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதுவார்கள் என நான் அஞ்சுகிறேன்" என்று அவர் கூறினார்.26
26:13. என் உள்ளம் நெருக்கடிக்கு உள்ளாகும். என் நாவும் எழாது. எனவே ஹாரூனைத் தூதராக அனுப்புவாயாக!
26:14. "அவர்களிடம் என் மீது ஒரு (கொலைக்) குற்றச் சாட்டு உள்ளது.375 எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்" (என்றும் கூறினார்.)
26:15. "அவ்வாறில்லை! நமது சான்றுகளுடன் இருவரும் செல்லுங்கள்! நாம் உங்களுடன் செவியுற்றுக் கொண்டிருப் போம்" என்று (இறைவன்) கூறினான்.
26:16, 17. ஃபிர்அவ்னிடம் சென்று "நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு!"181 என்று கூறுங்கள்! (என்றும் இறைவன் கூறினான்.)26
26:18. "குழந்தையாக இருந்த நிலையில் நாம் உம்மை எடுத்து வளர்க்கவில்லையா? உமது வாழ்நாளில் பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்தீரே!" என்று அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்.
26:19. "நீர் செய்த உமது செயலையும் செய்து முடித்தீர். நீர் நன்றி கெட்டவர்" (என்றும் கூறினான்.)
26:20. "நான் நேர் வழி பெறாதவனாக இருந்த நேரத்தில் அதைச் செய்தேன்" என அவர் கூறினார்.
26:21. "உங்களுக்கு அஞ்சி உங்களை விட்டு ஓடினேன். அப்போது என் இறைவன் எனக்கு ஞானத்தை வழங்கி தூதர்களில் ஒருவராக என்னை நியமித்தான்"
26:22. "இஸ்ராயீலின் மக்களை நீ அடிமைப்படுத்துவதற்கு (நியாயம் கற்பிக்க) எனக்குச் செய்த அருட்கொடையை நீ சொல்லிக் காட்டுகிறாய்!"181 (என்றும் கூறினார்)
26:23. "அகிலத்தின் இறைவன் என்றால் என்ன?" என்று ஃபிர்அவ்ன் கேட்டான்.
26:24. "நீங்கள் உறுதியாக நம்பினால் வானங்கள், பூமி, மற்றும் அவ்விரண் டுக்கும் இடைப்பட்டதற்கும் அவனே இறைவன்" என்றார்.
26:25. தன்னைச் சுற்றியிருந்தோரிடம் "(இதை) நீங்கள் செவிமடுக்கிறீர்களா?" என்று அவன் கேட்டான்.
26:26. "அவன் உங்களுக்கும் இறைவன். உங்கள் முன்னோர்களான மூதாதையருக்கும் இறைவன்" என்று அவர் கூறினார்.
26:27. "உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்கள் தூதர் பைத்தியக்காரர் தான்" என்று அவன் கூறினான்.
26:28. "நீங்கள் விளங்கிக் கொள்வோராக இருந்தால் கிழக்கு, மேற்கு, மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டதற்கும் அவன் இறைவன்" என்று அவர் கூறினார்.
26:29. "என்னைத் தவிர வேறு கடவுளை நீர் கற்பனை செய்தால் உம்மைச் சிறைப்படுத்துவேன்" என்று அவன் கூறினான்.
26:30. "தெளிவான ஒரு பொருளை நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா?" என்று அவர் கேட்டார்.
26:31. "நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்" என்று அவன் கூறினான்.
26:32. அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது.
26:33. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது.
26:34. "இவர் திறமைமிக்க சூனியக்காரர்" என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான்.
26:35. "தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்?" (என்றும் கேட்டான்).
26:36, 37. "இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! பல நகரங்களுக்கும் ஆள் திரட்டுவோரை அனுப்புவாயாக! அவர்கள் திறமையான ஒவ்வொரு சூனியக்காரனையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்" (என்றும் சபையோர் கூறினர்).26
26:38. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர்.
26:39, 40. சூனியக்காரர்கள் வெற்றி பெற்றால் அவர்களை நாம் பின்பற்றுவதற்காக நீங்கள் ஒன்று கூடுவீர்களா? என்று மக்களுக்கும் கூறப்பட்டது.26
26:41. சூனியக்காரர்கள் வந்தவுடன் "நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?" என்று ஃபிர்அவ்னிடம் கேட்டனர்.
26:42. "ஆம்! அப்போது நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்" என்று அவன் கூறினான்.
26:43. "நீங்கள் போடவிருப்பதைப் போடுங்கள்!" என்று அவர்களிடம் மூஸா கூறினார்.
26:44. அவர்கள் தமது கயிறுகளையும், கைத்தடிகளையும் போட்டனர். "ஃபிர்அவ் னின் கண்ணியத்தின் மீது சத்தியமாக! நாங்களே வெல்பவர்கள்" என்றனர்.
26:45. உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விட்டது.
26:46. சூனியக்காரர்கள் (இறைவனுக்கு) ஸஜ்தாச் செய்து, விழுந்தனர்.
26:47, 48. "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்" என்றனர்.26
26:49. "நான் உங்களுக்கு அனுமதியளிப் பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களின் குரு இவரே. (இதன் விளைவை) பின்னர் அறிவீர்கள். உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன்; உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்" என்று அவன் கூறினான்.
26:50. "கவலையில்லை. நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்கள்" என்று அவர்கள் கூறினர்.
26:51. "நம்பிக்கை கொண்டோரில் முதன்மை யானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை எங்கள் இறைவன் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்" (என்றும் கூறினர்).
26:52. "என் அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் (எதிரிகளால்) பின் தொடரப்படுவீர்கள்" என்று மூஸாவுக்கு அறிவித்தோம்.
26:53. ஆள் திரட்டுவோரைப் பல நகரங்களுக்கும் ஃபிர்அவ்ன் அனுப்பினான்.
26:54. அவர்கள் சிறிய கூட்டத்தினரே.
26:55. அவர்கள் நமக்குக் கோபத்தை ஏற்படுத்துகின்றனர்.
26:56. நாம் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவர்கள். (என்று ஃபிர்அவ்ன் கூறினான்)
26:57, 58. தோட்டங்கள், நீரூற்றுகள், பொக்கிஷங்கள், மற்றும் மதிப்புமிக்க தங்குமிடங்களை விட்டும் அவர்களை வெளியேற்றினோம்.26
26:59. இப்படித் தான் இஸ்ராயீலின் மக்களை அவற்றுக்கு வாரிசுகளாக்கினோம்.
26:60. காலையில் (ஃபிர்அவன் கூட்டத் தினர்) அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
26:61. இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது "நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்" என்று மூஸாவின் சகாக்கள் கூறினர்.
26:62. "அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்" என்று அவர் கூறினார்.
26:63. "உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக" என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.
26:64. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம்.
26:65. மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம்.
26:66. பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.
26:67. இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை.
26:68. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:69. அவர்களிடம் இப்ராஹீமின் வரலாறைக் கூறுவீராக!
26:70, 71. "எதை வணங்குகிறீர்கள்?" என்று தமது தந்தையிடமும் தமது சமுதாயத்தினரிடமும் அவர் கேட்ட போது "நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் உறுதியாக இருக்கிறோம்" என்றனர்.26
26:72, 73. "நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா?" என்று அவர் கேட்டார்.26
26:74. "எங்கள் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம்" என்று அவர்கள் கூறினர்.
26:75, 76, 77. "அகிலத்தின் இறைவனைத் தவிர நீங்களும், முந்திச் சென்ற உங்கள் முன்னோர்களும் எதை வணங்குவோராக இருக்கிறீர்கள்?" என்பதைக் கவனித்தீர்களா? அவை எனது எதிரிகள்26
26:78. அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர் வழி காட்டுகிறான்.
26:79. அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகத் தருகிறான்.463
26:80. நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.
26:81. அவனே என்னை மரணிக்கச் செய்வான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்.
26:82. "தீர்ப்பு நாளில்1 என் தவறை அவன் மன்னிக்க வேண்டும்" என ஆசைப்படுகிறேன்.
26:83. என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக!
26:84. பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!
26:85. இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!
26:86. என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார்.247
26:87. (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில்1 என்னை இழிவுபடுத்தி விடாதே!
26:88, 89. அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.26
26:90. (இறைவனை) அஞ்சுவோருக்கு சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்.
26:91. வழி கெட்டவர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்.
26:92, 93. "அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே?" அவர்கள் உங்களுக்கு உதவுவார்களா? அல்லது தமக்குத் தாமே உதவிக் கொள்வார்களா? என்று அவர்களிடம் கேட்கப்படும்.26
26:94, 95. அவர்களும், வழி கெட்டவர்களும், இப்லீஸின் படையினர் அனைவரும் அதில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள்.26
26:96, 97, 98. "உங்களை அகிலத்தின் இறைவனுக்குச் சமமாக்கிய போது அல்லாஹ்வின் மீது ஆணையாக தெளிவான வழிகேட்டில் இருந்தோம்" என்று அங்கே தர்க்கம் செய்து கொண்டே கூறுவார்கள்.26
26:99. இந்தக் குற்றவாளிகளே எங்களை வழி கெடுத்தனர்.
26:100. எங்களுக்குப் பரிந்துரை செய்வோர் எவருமில்லை.17
26:101. உற்ற நண்பனும் இல்லை.
26:102. உலகுக்குத் திரும்பிச் செல்லுதல் எங்களுக்கு இருக்குமானால் நம்பிக்கை கொண்டோரில் ஆகியிருப்போம் (என்றும் கூறுவார்கள்).
26:103. இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:104. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:105. நூஹுடைய சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.
26:106. "(இறைவனை) அஞ்ச மாட்டீர்களா? என்று அவர்களின் சகோதரர் நூஹு அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
26:107. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர்;
26:108. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!
26:109. உங்களிடம் நான் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே இருக்கிறது.
26:110. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!" (என்றும் கூறினார்.)
26:111. "மிகவும் தாழ்ந்தோர் உம்மைப் பின்பற்றியுள்ள நிலையில் உம்மை நம்புவோமா?" என்று அவர்கள் கூறினர்.
26:112. "அவர்கள் செய்து கொண்டிருப்பது (பற்றிய முடிவு என்ன என்பது) எனக்குத் தெரியாது" என்று அவர் கூறினார்.
26:113. "அவர்களை விசாரிப்பது எனது இறைவனின் பொறுப்பாகும். விளங்க மாட்டீர்களா?"
26:114. "நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாக இல்லை"
26:115. "நான் தெளிவாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை" (என்றும் கூறினார்.)
26:116. "நூஹே! நீர் விலகிக் கொள்ளவில்லையானால் கல்லால் எறிந்து கொல்லப்படுவீர்!" என்று அவர்கள் கூறினர்.
26:117. "என் இறைவா! என் சமுதாயத்தினர் என்னைப் பொய்யரெனக் கருதுகின்றனர்" என்று அவர் கூறினார்.
26:118. "எனக்கும், அவர்களுக்கும் இடையே தெளிவான தீர்ப்புக் கூறுவாயாக! என்னையும், என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக!" (என்றும் கூறினார்).
26:119. எனவே அவரையும், அவருடன் இருந்தோரையும் நிரப்பப்பட்ட கப்பலில் காப்பாற்றினோம்.
26:120. பின்னர் எஞ்சியோரை மூழ்கடித்தோம்.
26:121. இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:122. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:123. ஆது சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.
26:124. "இறைவனுக்கு அஞ்ச மாட்டீர்களா" என்று அவர்களின் சகோதரர் ஹூது, அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
26:125. நான் உங்களுக்கு நம்பிக்கையுள்ள தூதர்.
26:126. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!
26:127. நான் உங்களிடம் இதற்காக எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.
26:128. ஒவ்வொரு உயர்ந்த இடத்திலும் வீணாக சின்னங்களை எழுப்புகிறீர்களா?
26:129. நிரந்தரமாக இருப்பதற்காக வலிமையான கட்டடங்களை உருவாக்குகிறீர்களா?
26:130. நீங்கள் பிடிக்கும் போது அடக்குமுறை செய்வோராகப் பிடிக்கிறீர்கள்.
26:131. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!
26:132. உங்களுக்குத் தெரிந்தவை மூலம் உங்களுக்கு உதவியவனை அஞ்சுங்கள்!
26:133, 134. கால்நடைகள், மக்கள், நீரூற்றுகள் மற்றும் தோட்டங்கள் மூலம் அவன் உங்களுக்கு உதவினான்.26
26:135. "மகத்தான நாளின்1 வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்" (என்றும் கூறினார்.)
26:136. "நீர் அறிவுரை கூறுவதும், கூறாமல் இருப்பதும் எங்களுக்குச் சமமானதே" என்று அவர்கள் கூறினர்.
26:137. இது முன்னோர்களின் கட்டுக் கதைகள் தவிர வேறில்லை.
26:138. நாங்கள் தண்டிக்கப்படுவோரும் அல்லர் (என்றும் கூறினர்.)
26:139. அவரை அவர்கள் பொய்யரெனக் கருதினர். எனவே அவர்களை அழித்தோம். இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:140. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:141. ஸமூது சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.
26:142. அஞ்ச மாட்டீர்களா? என்று அவர்களிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹ் கூறியதை நினைவூட்டுவீராக!
26:143. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர்.
26:144. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!
26:145. இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே இருக்கிறது.
26:146, 147, 148. இங்கே நீங்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும், விளை நிலங்களிலும், குலை தள்ளிய பேரீச்சை மரங்களிலும், அச்சமற்றோராக விட்டு வைக்கப்படுவீர்களா?26
26:149. மிகத் திறமையுடன் மலைகளை வீடுகளாகக் குடைகிறீர்கள்!
26:150. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!
26:151. வரம்பு மீறியோரின் கட்டளைகளுக்குக் கட்டுப்படாதீர்கள்!
26:152. அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிப்பார்கள். சீர் செய்ய மாட்டார்கள் (என்றும் கூறினார்).
26:153. "நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்" என்று அவர்கள் கூறினர்.
26:154. "நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!" (என்றும் கூறினர்)
26:155. "இதோ ஒட்டகம்! நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாள் பருகுவது அதற்குரியது. இன்னொரு நாள் உங்களுக்குரியது" என்றார்.
26:156. அதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! உங்களை மகத்தான நாளின்1 வேதனை பிடித்துக் கொள்ளும் (என்றும் கூறினார்).
26:157. அதை அவர்கள் அறுத்தனர். இதனால் கைசேதம் அடைந்தனர்.
26:158. உடனே அவர்களை வேதனை பிடித்துக் கொண்டது. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ளவில்லை.
26:159. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:160. லூத்துடைய சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.
26:161. "அஞ்ச மாட்டீர்களா" என்று அவர்களின் சகோதரர் லூத் அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
26:162. "நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர்.
26:163. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!
26:164. இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.
26:165, 166. உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனை வியரை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? இல்லை! நீங்கள் வரம்பு கடந்த கூட்ட மாக இருக்கிறீர்கள்!" (என்றும் கூறினார்.)26
26:167. "லூத்தே நீர் விலகிக் கொள்ளா விட்டால் வெளியேற்றப்படுவோரில் நீரும் ஒருவர்!" என்று அவர்கள் கூறினார்கள்.
26:168. "உங்கள் செயலை நான் வெறுப்பவன்" என்று அவர் கூறினார்.
26:169. "என் இறைவா! என்னையும், என் குடும்பத்தினரையும் இவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக!" (என்றும் கூறினார்)
26:170, 171. எனவே அவரையும், (தீயோருடன்) தங்கி விட்ட கிழவியைத் தவிர, அவரது குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்றினோம்.26
26:172. பின்னர் ஏனையோரை அழித்தோம்.
26:173. அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்.412 எச்சரிக்கப்பட்டோரின் இந்த மழை மிகவும் கெட்டதாக இருந்தது.
26:174. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.
26:175. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:176. தோப்பு (மத்யன்) வாசிகளும் தூதர்களைப் பொய்யர்களெனக் கருதினர்.
26:177. "அஞ்ச மாட்டீர்களா?" என்று அவர்களிடம் ஷுஐபு கூறியதை நினைவூட்டுவீராக!
26:178. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர்.
26:179. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!
26:180. இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.
26:181. அளவை முழுமைப்படுத்துங்கள்! குறைத்து விடாதீர்கள்!
26:182. நேர்மையான தராசு மூலம் நிறுத்துக் கொடுங்கள்!
26:183. மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!
26:184. உங்களையும், முந்தைய படைப்புகளையும் படைத்தவனுக்கு அஞ்சுங்கள்! (என்றார்)
26:185. "நீர் சூனியம் செய்யப்பட்டவர் தான்" என்று அவர்கள் கூறினர்.
26:186. "நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்."
26:187. "நீர் உண்மையாளராக இருந்தால் வானத்தின் ஒரு துண்டை எங்கள் மீது விழச் செய்வீராக!" (என்றும் கூறினர்)
26:188. "நீங்கள் செய்பவற்றை என் இறைவன் நன்கறிபவன்" என்று அவர் கூறினார்.
26:189. அவரைப் பொய்யரெனக் கருதினர். எனவே (மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை அவர்களைத் தாக்கியது. அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது.
26:190. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.
26:191. (முஹம்மதே!) உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:192. இது அகிலத்தின் இறைவனால் அருளப்பட்டது.
26:193, 194, 195. எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில்152 & 312 தெளிவான அரபு மொழியில்227 நம்பிக்கைக்குரிய ரூஹ்444 இதை இறக்கினார்.26 & 492
26:196. இது முன்னோரின் வேதங்களிலும் உள்ளது.
26:197. இஸ்ராயீலின் மக்களில் உள்ள அறிஞர்கள் இதை அறிந்து (ஏற்று) இருப்பது இவர்களுக்குச் சான்றாக இல்லையா?
26:198, 199. இதை அரபியர் அல்லாத ஒருவருக்கு அருளி, அவர் இவர்களுக்கு அதை ஓதிக் காட்டியிருந்தாலும், அதை நம்யிருக்க மாட்டார்கள்.26
26:200. இவ்வாறே குற்றவாளிகளின் உள்ளங்களில் இதைப் புகுத்தி விட்டோம்.
26:201. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் காணாத வரை அதை நம்ப மாட்டார்கள்.
26:202. அவர்கள் அறியாத நிலையில் திடீரென்று அவர்களிடம் அது வந்து விடும்.
26:203. "எங்களுக்கு அவகாசம் அளிக்கப்படுமா?" என்று (அப்போது) அவர்கள் கேட்பார்கள்.
26:204. நமது வேதனையையா அவர்கள் அவசரமாகத் தேடுகின்றனர்?
26:205, 206, 207. அவர்களைப் பல வருடங்கள் நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டது அவர்களிடம் வருமானால் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தவை அவர்களைக் காப்பாற்றாது என்பதை அறிவீரா?26
26:208. எச்சரிக்கை செய்வோரில்லாமல் எந்த ஊரையும் நாம் அழித்ததில்லை.
26:209. (இது) அறிவுரை! நாம் அநீதி இழைத்ததில்லை.
26:210. இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை.
26:211. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது.
26:212. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.307
26:213. அல்லாஹ்வுடன் மற்றொரு கடவுளை நீர் அழைக்காதீர்! அப்போது நீர் தண்டிக்கப்படுபவராக ஆகி விடுவீர்!
26:214. (முஹம்மதே!) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!281
26:215. உம்மைப் பின்பற்றிய நம்பிக்கை கொண்டோருக்கு உமது சிறகைத் தாழ்த்துவீராக!251
26:216. "அவர்கள் உமக்கு மாறு செய்தால் நீங்கள் செய்பவற்றை விட்டு நான் விலகியவன்" என்று கூறுவீராக!
26:217. மிகைத்தவனையும், நிகரற்ற அன்புடையோனையுமே சார்ந்திருப்பீராக!
26:218, 219. நீர் நிற்கும் நேரத்திலும், ஸஜ்தாச் செய்வோருடன் நீர் இயங்கும் போதும் அவன் உம்மைப் பார்க்கிறான்.26
26:220. அவனே செவியுறுபவன்;488 அறிந்தவன்.
26:221. ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
26:222. இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.
26:223. அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள்.
26:224. கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள்.
26:225. அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா?
26:226. அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர்.
26:227. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து அல்லாஹ்வை அதிகம் நினைத்து, அநீதி இழைக்கப்பட்ட பின் பழி தீர்த்துக் கொண்ட(புல)வர்களைத் தவிர. எந்த இடத்திற்குத் தாங்கள் செல்லவிருக்கிறோம் என்பதை அநீதி இழைத்தோர் பின்னர் அறிந்து கொள்வார்கள்.