245. ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை
இறைவனின் தூதர்களில் இப்ராஹீம் நபியை உயர்ந்த இடத்தில் வைத்து திருக்குர்ஆன் பேசுகிறது. அவர்கள் அல்லாஹ்வுக்கே உற்ற நண்பராக இருந்தார்கள் என்ற அளவுக்கு அவர்களின் தகுதியை உயர்த்துகிறது. அவர்களது வழியைப் பின்பற்றுமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையும் இடுகிறது.
இத்தகைய உயர்ந்த இடத்தில் இருக்கின்ற இப்ராஹீம் நபியவர்கள், சிலை வணங்காது தமது வழித் தோன்றல்களைப் பாதுகாக்குமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள். (திருக்குர்ஆன் 14:35) ஆனால் அவர்களின் வழித் தோன்றல்கள் சிலை வணங்குவோரானார்கள்.
மேலும் தமது வழித் தோன்றல்கள் நல்லவர்களாக நடக்க வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள். இறைவனோ இதனை நிராகரித்து அநியாயம் செய்தவர்கள் விஷயத்தில் உமது பிரார்த்தனை ஏற்கப்படாது என்று அறிவிக்கிறான். (திருக்குர்ஆன் 2:124)
எவ்வளவு பெரிய தூதராக இருந்தாலும் அவர்களது பிரார்த்தனைகள் அனைத்தும் ஏற்கப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இறைவன், தான் நாடியதை மட்டுமே செய்வான் என்ற ஏகத்துவக் கோட்பாட்டை இவ்வசனம் உறுதியாக நிலை நாட்டுகிறது.