432. இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்?

இப்ராஹீம் நபியவர்கள் தமது ஊரிலுள்ள வழிபாட்டுத் தலத்தில் சிறிய சிலைகளை உடைத்து விட்டு, பெரிய சிலையை மட்டும் உடைக்காமல் விட்டு விட்டார்கள். இப்ராஹீம் நபியை அவர் களது சமுதாயத்தினர் பிடித்து விசாரித்த போது, "பெரிய சிலை தான் உடைத்தது" என்று கூறினார்கள். "சந்தேகமிருந்தால் உடைக்கப்பட்ட சிலைகளிடம் "உங்களை உடைத்தது யார்?" என்று கேட்டுப் பாருங்கள்" எனவும் கூறினார்கள். (பார்க்க: திருக்குர்ஆன் 21:63)

பெரிய சிலை தான் உடைத்தது என்று அவர்கள் கூறியது உண்மையல்ல! ஆயினும், சிலைகளுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதைப் புரிய வைப்பதற்காக அவர்கள் கையாண்ட தந்திரமே இது! சத்தியப் பிரச்சாரத்தின் போது இது போன்ற வழிமுறைகளைக் கையாள்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது அல்ல!

இப்ராஹீம் நபியவர்கள் இவ்வாறு கூறியது பொய்யில் சேராது. ஏனெனில், பெரிய சிலை உடைத்தது என்று அவர்கள் சொன்னது, அந்த மக்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அல்ல!

பெரிய சிலை உடைத்தது என்று இப்ராஹீம் நபியவர்கள் கூறியவுடன் சிலைகளைக் கடவுளாக நினைத்த அம்மக்கள், அப்படியா என்று ஏற்றுக் கொள்ளவில்லை.

சொல்பவருக்கும் பொய் சொல்கிறோம் என்று தெரிகிறது; கேட்பவருக்கும் வேறு ஒரு அர்த்தத்தில் சொல்லப் படுகின்ற பொய் என்று தெரிகிறது.

இப்படியிருந்தால் இது பொய் வடிவில் அமைந்த மெய் என்று தான் கூற வேண்டும்.

இது குறித்து அதிக விளக்கத்துக்கு 162, 236, 336 ஆகிய குறிப்புகளைக் காண்க!