442. மன்னு ஸல்வா

இவ்வசனங்களில் இஸ்ரவேலர்களுக்கு மன்னு, ஸல்வா எனும் இரு உணவுகள் இறைவன் புறத்தில் இருந்து இறக்கியருளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவ்விரண்டு சொற்களும் அரபு மொழிச் சொற்கள் அல்ல. இவ்விரு உணவுகளும் அரபுகளிடையே அறிமுகமாகி இருந்த உணவும் அல்ல. எனவே இவ்வுணவு எது என்பதைப் பற்றி பல விரிவுரையாளர்கள் பல்வேறு விளக்கங்களைக் கூறியுள்ளனர். அவை அனைத்தும் ஆதாரமற்ற கற்பனையாகவே உள்ளன.

இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு விளக்கவில்லை. நாம் தேடிப் பார்த்தவரை உணவாக உட் கொள்ளப்படும் ஒரு வகை காளானை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னு வகையைச் சேர்ந்தது எனக் கூறியுள்ளனர்.

கும்அத் எனும் உணவுக்காளான் மன்னு வகையைச் சேர்ந்ததாகும். அதன் நீர் கண் நோய்க்கு நிவாரணமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

பார்க்க : புகாரி 4478, 4639, 5708

காளான் வகையைச் சேர்ந்த உண வையும், ஸல்வா எனும் மற்றொரு வகை உணவையும் அல்லாஹ் இறக்கி அருள் செய்தான்; அதற்கு அவர்கள் நன்றியுடன் நடக்கவில்லை என்று புரிந்து கொள்வதே நமக்குப் போதுமானதாகும்.