கஅபா:
முதல் மனிதர் படைக்கப்பட்டவுடன் அவர் இறைவனை வணங்கு வதற்காக எழுப்பிய ஆலயம் தான் கஅபா. (திருக்குர்ஆன் 3:96)
இதிலிருந்து ஆதம் (அலை) இங்கு தான் வசித்தார்கள் என்பதை அறியலாம்.
செவ்வகமான அக்கட்டடம் ஆதமும், அவரது பிள்ளைகளும் உள்ளே சென்று தொழப்போதுமானதாகும். ஆனால் இன்று அனைவரும் உள்ளே தொழ முடியாது என்பதால் அதைச் சுற்றி அதற்கு வெளியே தொழுகிறார்கள். அதைச் சுற்றியுள்ள வளாகமும், கட்டடமும் தான் மஸ்ஜிதுல் ஹராம் - புனிதப் பள்ளி எனப்படுகிறது.
ஆதமுக்குப் பின் கஅபா சிதிலமடைந்தது. பின்னர் இப்ராஹீம் நபியவர்கள் இறைக் கட்டளைப்படி அந்தப் பாலைவனத்தைக் கண்டு பிடித்து தமது மனைவியையும், மகன் இஸ்மாயீலையும் குடியமர்த்தினார்கள்.
இறைவனின் அற்புதமாக வற்றாத ஸம்ஸம் கிணறு ஏற்படுத்தப்பட்ட பின் கால் கோடி மக்களுக்கு அது தினமும் பயன்படுகிறது.
அந்தத் தண்ணீர் காரணமாக அந்தப் பாலைவனம், ஊராக ஆனது. எனவே அங்கே முதல் ஆலயத்தை தந்தையும், மகனுமாக மறுபடியும் கட்டினார்கள்.
(கஅபா பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் இடங்கள் எனும் உள் தலைப்பிலும், நபிமார்கள் (இப்ராஹீம்) எனும் உள் தலைப்பிலும் காண்க!)
காரூன்:
இவன் மூஸா நபியின் சமுதாயத்தைச் சேர்ந்தவன். இவனுக்கு இறைவன் கணக்கிலடங்காத செல்வங்களை வழங்கியிருந்தான். இவனது கருவூலங்களின் சாவிகள் வலிமை மிக்க ஒரு படையினர் சுமக்கும் அளவுக்கு இருந்ததாக இறைவன் குறிப்பிடுகிறான்.
செல்வத்தின் காரணமாக இவன் வரம்பு மீறியபோது இவனையும், இவனது வீட்டையும் பூமிக்குள் புதையச் செய்து இறைவன் அழித்தான்.
(காரூன் பற்றிய மேலும் விவரத்திற்கு பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நல்லோர் - தீயோர் எனும் உள் தலைப்பில் காண்க!)
கிப்லா:
கிப்லா என்றால் முன்னோக்குதல், முன்னோக்கும் இலக்கு என்பது பொருள். இஸ்லாமிய வழக்கில் அல்லாஹ்வைத் தொழும் போது நோக்கும் இலக்கு கிப்லா எனப்படுகிறது. முஸ்லிம்கள் மக்காவில் அமைந்துள்ள உலகின் முதல் ஆலயமான கஅபா ஆலயத்தை நோக்கியே தொழ வேண்டும்.
கஅபா ஆலயத்தையே தொழு வதாக எண்ணக் கூடாது. அது ஒரு கட்டடமே. அதற்கு இறைத்தன்மை ஏதும் கிடையாது. கஅபாவிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கக் கூடாது.
எதையும் நோக்காமல் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. அவ்வாறு நோக்குவது உலகில் ஏக இறைவனை வணங்குவதற்காக முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாக இருக்கட்டும் என்பது தான் இதற்குக் காரணம்.
பலரும் சேர்ந்து தொழும் இடங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் நோக்கினால் ஒழுங்கு கெடும். இதற்காகத் தான் அனைவரும் ஒன்றையே நோக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மேற்குத் திசையை வணங்குவதாக இந்தியாவில் சிலர் நினைக்கின்றனர். இந்தியாவுக்கு மேற்கே கஅபா ஆலயம் அமைந்திருப்பதே இதற்குக் காரணம். மற்ற நாடுகளில் வடக்கு, தெற்கு, கிழக்கு என்று பல திசைகளிலும் முஸ்லிம்கள் தொழுவார்கள்.
மக்காவுக்குச் சென்று கஅபாவை நேரில் கண்டால் அதைச் சுற்றி அனைத்துத் திசைகளிலும் முஸ்லிம்கள் தொழுவார்கள். எனவே திசையை முஸ்லிம்கள் வணங்குவதாகக் கருதுவது தவறாகும்.
(கிப்லா பற்றிய மேலும் விவரத்திற்கு பொருள் அட்டவணை பகுதியில் வணக்கங்கள் என்ற தலைப்பில் தொழுகை எனும் உள் தலைப்பில் காண்க!)
குர்பானி:
முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் இரண்டாவது பெருநாளாகக் கருதப்படும் ஹஜ் பெருநாளில் இறைவனுக்காக ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அறுத்துப் பலியிடுதல் குர்பானி எனப்படும்.
இவ்வாறு பலியிடுவது இறைவனைச் சென்றடையும் எனக் கருதக் கூடாது. ஏனெனில் அவற்றின் இரத்தங்களோ, இறைச்சிகளோ அல்லாஹ்வை அடையாது என்று திருக்குர்ஆன் அறிவிக்கிறது (22:37).
பொருளாதாரம் தொடர்பான எதையும் இறைவனுடன் தொடர்புபடுத்தினால் அவற்றை ஏழைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.
எனவே ஏழைகள் மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கொண்டாடவும், இப்ராஹீம் நபியைப் போல் எத்தகைய தியாகத்துக்கும் தயார் என்பதை உணர்த்தும் வகையிலும் தான் இது கடமையாக்கப்பட்டுள்ளது.
தமத்துஃ:
விளக்கம் பகுதியில் 56வது குறிப்பைக் காண்க!
தவாஃப்:
தவாஃப் என்றால் சுற்றுதல் எனப் பொருள்.
இஸ்லாமிய வழக்கில் தவாஃப் என்பது கஅபா ஆலயம் நமக்கு இடது கைப்பக்கம் இருக்குமாறு ஏழு தடவை சுற்ற வேண்டும். இது தான் தவாஃப் என்பது. இது ஹஜ் மற்றும் உம்ராவின் ஒரு பகுதியாகும்.
தவ்ராத்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அருளப்பட்டது போல மூஸா நபிக்கு அருளப்பட்ட வேதமே தவ்ராத். தவ்ராத் பற்றியும், மூஸா நபி பற்றியும் பல இடங்களில் குர்ஆனில் கூறப்பட்டாலும், மூஸா நபிக்குத் தான் தவ்ராத் வழங்கப்பட்டது என்று குர்ஆனில் கூறப்படவில்லை. ஆயினும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இதற்கு ஆதாரம் உள்ளது.
(தவ்ராத் பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில் வேதங்களை நம்புதல் எனும் உள் தலைப்பில் காண்க!)
தாலூத்:
தாவூத் நபி சாதாரணப் படை வீரராக இருக்கும் பொழுது இறைவனால் நியமிக்கப்பட்ட மன்னரே தாலூத். இவரது தலைமையில் ஜாலூத் என்ற கொடியவன் தோற்கடிக்கப்பட்டான். (திருக்குர்ஆன் 2:247-249)
தாவூத்:
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஸுலைமான் நபியின் தந்தையுமாவார். தாவீது ராஜா என்று கிறித்தவர்கள் இவரைக் குறிப்பிடுவார்கள்.
(தாவூத் பற்றிய மேலும் விவரத்திற்கு பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)
துப்பஃ:
துப்பஃ என்ற பெயரில் ஒரு சமுதாயம் இருந்ததாகவும், அவர்கள் குற்றம் புரிந்ததால் அழிக்கப்பட்டதாகவும் குர்ஆன் கூறுகிறது. அவர்களைப் பற்றி அதிகமான விபரம் ஏதும் கூறப்படவில்லை. (திருக்குர்ஆன் 44:37, 50:14)
துல் கர்னைன்:
இவர் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி புரிந்த நல்ல மன்னர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இவரைப் பற்றி குர்ஆன் 18:83 முதல் 18:98 வரை கூறப்பட்டுள்ளது.
துல் கிஃப்ல்:
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி 21:85, 38:48 ஆகிய இரு வசனங்களில் மட்டுமே திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. அதிகமான விபரம் எதையும் இவரைப் பற்றி கூறவில்லை.
நபிமார்கள்:
நபி என்ற சொல் அறிவிப்பவர் என்று பொருள்படும். இஸ்லாமிய மரபில் இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று மக்களுக்கு அறிவிப்பவர் என்று பொருள்.
நபிமார்கள் எத்தனை பேர் என்பது குறித்து குர்ஆனிலோ, நபிகள் நாயகத்தின் போதனைகளிலோ குறிப்பிடப்படவில்லை.
நபிமார்கள் என்பதும், தூதர்கள் என்பதும் இருவேறு தகுதிகளை உடையது என சிலர் கூறுகின்றனர். இது ஆதாரமற்றதாகும்.
(இதுபற்றி விரிவான விபரங்கள் பொருள் அட்டவனை பகுதியில் வரலாறு என்ற தலைப்பிலும், கொள்கை என்ற தலைப்பில் நபிமார்களை நம்புதல் எனும் உள் தலைப்பிலும் காண்க!)
நூஹ்:
இவர் இறைத்தூதர்களில் ஒருவர் ஆவார். இவர் மிகவும் ஆரம்ப காலத்தில் அனுப்பப்பட்ட தூதராவார். குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களில் ஆதம், இத்ரீஸ் தவிர மற்ற எல்லா நபிமார்களுக்கும் இவர் முந்திய வராவார். இவர் 950 வருடங்கள் வாழ்ந்தார்.
(நூஹ் பற்றிய மேலும் விவரத்திற்கு பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)
பஜ்ரு:
பஜ்ர் என்பது ஐந்து நேரத் தொழுகைகளில் வைகறையில் தொழப்படும் முதல் தொழுகையின் பெயர் ஆகும். சில இடங்களில் வைகறை நேரத்தையும் இச்சொல் குறிக்கும்.
பாபில் நகரம்:
திருக்குர்ஆனில் இந்நகரம் பற்றி 2:102 வசனத்தில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இது எங்கே இருக்கிறது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலோர் இது ஈராக்கில் இருந்த நகரம் எனக் கூறுகின்றனர்.
பைத்துல் மஃமூர்:
இது வானுலகில் வானவர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்ட மாபெரும் ஆலயமாகும். (திருக்குர்ஆன் 52:4)
இதில் தினமும் எழுபதினாயிரம் வானவர்கள் தொழுவர் என்றும், ஒருமுறை தொழுதவர்கள் மறுபடி அங்கே செல்ல மாட்டார்கள் என்றும், இது ஏழாம் வானத்தில் இருப்பதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (பார்க்க புகாரி 3207)
கஅபாவுக்கு நேர் மேலாக அமைந் துள்ளது என்று சில அறிவிப்புக்கள் உள்ளன. அவை ஆதாரமற்ற பலவீனமான அறிவிப்பாகும். மேலும் பூமி சுழல்வதால் எப்போதும் கஅபாவுக்கு நேர் மேலாக பைத்துல் மஃமூர் இருக்க முடியாது.
மத்யன்:
இந்நகரம் ஷுஐப் நபி அவர்கள் வாழ்ந்த நகராகும். இந்நகர மக்கள் அளவு நிறுவைகளில் மோசடி செய்பவர்களாகவும், பல தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இவர்கள் இறுதி வரை திருந்தாததால் அழிக்கப்பட்டனர்.
(இது பற்றி மேலும் விபரங்களை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு எனும் தலைப்பில் நபிமார்கள் (ஷுஐப்) எனும் உள் தலைப்பிலும், இடங்கள் எனும் உள் தலைப்பிலும் காண்க!)
மர்யம்:
இவர் ஈஸாவின் தாயார். கிறித்தவர்கள் இவரை மேரி என்பர். திருக்குர்ஆனில் மிகச் சிறப்பித்துக் கூறப்படும் பெண்மணி இவர் தான்.
(மர்யம் பற்றிய மேலும் விவரத்திற்கு பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு எனும் தலைப்பில் நல்லோர் - தீயோர் எனும் உள் தலைப்பில் காண்க!)
மன்னு, ஸல்வா:
மன்னு, ஸல்வா என்பது மூஸா நபியின் சமுதாயத்திற்கு இறைவன் வானிலிருந்து சிறப்பாக வழங்கிய இரண்டு உணவுகளாகும். இவ்வுணவுகள் யாவை என்பது குறித்து திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ விபரம் ஏதும் கூறப்படவில்லை. ஆயினும் காளான் என்பது மன்னு என்ற உணவைச் சேர்ந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (பார்க்க புகாரி 4478, 4639, 5708)
அவ்வுணவுகள் யாவை என்பதை அறிந்து கொள்வதால் எந்த நன்மையும் இல்லை. இறைவன் தன்புறத்திலிருந்து சிறப்பாக அந்தச் சமுதாயத்திற்கு உணவளித்தான் என்ற அடிப்படையை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது. (திருக்குர்ஆன் 2:57, 7:160, 20:80)
மனாத்:
நபிகள் நாயகம் காலத்தில் வாழ்ந்த பல கடவுள் நம்பிக்கை உடையவர்கள் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயரே மனாத். (திருக்குர்ஆன் 53:20)
மஷ்அருல் ஹராம்:
மஷ்அருல் ஹராம் என்பது மக்காவிற்கு வெளியே அமைந்துள்ள முஸ்தலிபா எனும் திடலில் இருக்கும் ஒரு மலைக் குன்றின் பெயராகும். (திருக்குர்ஆன் 2:198)
மஸீஹ்:
ஈஸா என்னும் சொல்லைப் பார்க்கவும்.
மஸ்ஜிதுல் ஹராம்:
கஅபா என்னும் சொல்லைப் பார்க்கவும்.
மீகாயில்:
ஒரு வானவரின் பெயரே மீகாயில். இவர் ஜிப்ரீலுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்துடன் குறிப்பிடப்படுகிறார். ஆயினும் இவரது பணிகள் பற்றி அதிகமான விபரங்கள் எதுவும் கூறப்படவில்லை. (திருக்குர்ஆன் 2:98)
முஸ்லிம் - முஸ்லிம்கள்:
முஸ்லிம் என்பது பிறப்பின் அடிப் படையில் கிடைக்கும் பெயர் அல்ல. நடத்தையின் மூலம் ஒருவனுக்குக் கிடைக்கும் பெயராகும். இச்சொல்லின் பொருள் கட்டுப்பட்டு நடப்பவன்.
இஸ்லாமிய நம்பிக்கைப்படி இதன் பொருள் 'அல்லாஹ் கடமையாக்கியவைகளைச் செயல்படுத்தி, அல்லாஹ் தடை செய்தவற்றை விட்டும் விலகி அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்' என்பதாகும்.
இச்சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்துக்கு மட்டுமின்றி அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்களை ஏற்று அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தான் இச்சொல்லைத் தமிழ்ப்படுத்தாமல் எல்லா இடங்களிலும் முஸ்லிம் என்றே குறிப்பிட்டுள்ளோம்.
இச்சொல்லை தமிழக முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் முஸ்லீம் என்று நெடிலாக உச்சரித்தும் எழுதியும் வருகின்றனர். அது தவறாகும். முஸ்லிம் என்பதே சரியாகும்.
மூஸா:
திருக்குர்ஆனில் மிக அதிகமான இடங்களில் குறிப்பிடப்படும் இறைத்தூதர் ஆவார்கள். ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்கள். மூஸாவிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசினான். கிறித்தவர்கள் இவரை மோஸே என்பர்.
(மூஸா பற்றிய மேலும் விவரத்திற்கு பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க)
யஃகூப்:
இஸ்ராயீல் என்னும் சொல்லைப் பார்க்கவும்
யஃஜூஜ், மஃஜூஜ்:
இது ஒரு கூட்டத்தினரின் பெயராகும். இக்கூட்டத்தினர் துல்கர்ணைன் என்ற ஆட்சியாளரின் காலத்தில் மிகவும் அக்கிரமங்கள் செய்து வந்தனர். அவர்களை இரு மலைகளுக்கு அப்பால் வைத்து இரண்டுக்குமிடையே இரும்புச் சுவர் எழுப்பி அவர் தடுத்து விட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது. (திருக்குர்ஆன் 18:94, 21:96)
யஸ்ரிப்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு, தஞ்ச மடைந்த ஊரின் பெயர் தான் யஸ்ரிப். (திருக்குர்ஆன் 33:31)
பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவ் வூரில் செல்வாக்குப் பெற்றவுடன் மதீனத்துன் நபி (நபியின் நகரம்) என்று பெயர் மாறி பின்னர் மதீனா எனச் சுருங்கியது.
யஹ்யா:
இவர் ஸகரிய்யா நபியின் மகனும் இறைத்தூதருமாவார். இவர் ஸகரிய்யா நபியின் தள்ளாத வயதில் பிறந்தவர். யூத, கிறித்தவர்கள் இவரை யோவான் என்பர்.
(யஹ்யா பற்றிய மேலும் விவரத்திற்கு பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க)
யூஸுஃப்:
இவர் இறைத்தூதர்களில் ஒரு வராவார். மற்ற இறைத்தூதர்களிலிருந்து பல வகையான தனிச்சிறப்புக்கள் இவருக்கு உள்ளன.
பாரம்பரியம், குலம் என்ற அடிப்படையில் மிகச் சிறந்தவர் ஒருவர் இருக்க வேண்டுமானால் அதற்கு முதல் தகுதி பெற்றவர் இவராகத்தான் இருக்க முடியும்.
இவரும் இறைத் தூதராக இருந்தார். இவரது தந்தை யஃகூபு என்றழைக்கப்படும் இஸ்ராயீல். இவரும் இறைத் தூதராவார். அவருடைய தந்தை இஸ்ஹாக். அவரும் இறைத்தூதராவார். அவருடைய தந்தை இப்ராஹீம். அவரும் இறைத்தூதராவார். இந்தக் கருத்தில் நபிமொழியும் உள்ளது.
(புகாரி 3382, 3390, 4688)
குர்ஆனில் இவருடைய வரலாறு தான் சிறுபிராயம் தொடங்கி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. யூஸுஃப் என்ற பெயரில் அமைந்த அத்தியாயம் பெரும் பகுதி இவரது வரலாறால் நிரம்பியுள்ளது. இவருடைய வரலாற்றை அழகிய வரலாறு என்று அல்லாஹ்வும் சிலாகித்துக் கூறியுள்ளான்.
இவரைப் பற்றி அறிந்து கொள்ள சிரமப்படத் தேவையில்லை. யூஸுஃப் அத்தியாயத்தில் ஒரே இடத்தில் இவரது வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளதைக் காண்க.
யூனுஸ்:
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரது சமுதாயத்தினர் கடுமையாக எதிர்த்தாலும் இறைவனின் தண்டனை வரப் போகும் அறிகுறிகள் தென்பட்டவுடனே அவர்கள் திருந்திக் கொண்டனர். அறிகுறிகள் தென்பட்டவுடன் திருந்திக் கொண்ட வேறு எந்தச் சமுதாயமும் கிடையாது.
இவருக்கே தெரியாமல் இவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இவர் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார். எனவே அவரை அல்லாஹ் தண்டித்தான்.
(யூனுஸ் பற்றிய மேலும் விவரத்திற்கு பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க)
ருகூவு:
பணிதல் என்பது இதன் பொருள். இஸ்லாமிய வழக்கத்தில் தொழுகையில் குனிந்து சிறிது நேரம் நின்று கூற வேண்டியவற்றைக் கூறுவது ருகூவு எனப்படும். பணிதல் என்ற பொருளிலும், தொழுகையின் ஒரு நிலை என்ற பொருளிலும் திருக்குர்ஆனில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த இடங்களில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதைச் சற்றுக் கவனித்தால் கண்டு கொள்ளலாம்.
ரூஹ், ரூஹுல் குதுஸ்:
வானவர்களின் தலைவராக திகழ்பவர் ஜிப்ரயீல் எனும் வானவர். இவர் திருக்குர்ஆனில் பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறார். ரூஹ், ரூஹுல் குதுஸ் என்றும் குறிப்பிடப்படுகிறார். ரூஹ் என்றால் உயிர் என்றும், ரூஹுல் குதுஸ் என்றால் பரிசுத்த உயிர் என்றும் பொருள்.
(இவரைப் பற்றி பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை எனும் தலைப்பில் வானவர்களை நம்புதல் (ஜிப்ரீல்) எனும் உள் தலைப்பில் காண்க)
லாத்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல கடவுள் நம்பிக்கையுடையவர்கள் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயரே லாத். (திருக்குர்ஆன் 53:19)
லூத்:
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் இப்ராஹீம் நபியின் சமகாலத்தவராக இருந்தார். ஆயினும் வேறு பகுதியில் இவர் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்.
இவரது சமுதாயம் பல கடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைத்தது மட்டுமின்றி ஆண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.
(இவரைப் பற்றி பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு எனும் தலைப்பில் நபிமார்கள் என்ற உள் தலைப்பில் காண்க.)
வஹீ:
வஹீ என்றால் அறிவித்தல் என்பது பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் வஹீ என்பது இறைவன் தான் கூற விரும்பும் செய்திகளைத் தனது அடியார்களுக்குத் தெரிவித்தல் என்பது பொருளாகும்.
(இது பற்றி மேலும் விபரங்கள் அறிய, விளக்கம் பகுதியில் 359வது குறிப்பைக் காண்க.)