286. இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே?
இவ்வசனங்களில் (58:8, 9) "இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா?" என்று அல்லாஹ் கேட்கிறான்.
இவ்விரு வசனங்களும் கூறுவது என்ன என்பதைக் கவனமாகச் சிந்திக்க வேண்டும்.
* இரகசியம் பேசுவது முத-ல் அடியோடு தடை செய்யப்பட்டிருந்தது.
* இத்தடையைச் சிலர் மீறியதுடன் பாவமான காரியங்களை இரகசியமாகப் பேசினார்கள்.
* அறவே இரகசியம் பேசக் கூடாது என்ற தடை நீக்கப்பட்டு "கெட்ட காரியங்களை இரகசியம் பேச வேண்டாம்; நல்ல காரியங்களை இரகசியம் பேசலாம்" என்ற கட்டளை இதன் பின்னர் வந்தது,
இம்மூன்று செய்திகளையும் மேற்கண்ட வசனங்களிலிருந்து அறியலாம்.
"இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் காணவில்லையா?" என்று திருக்குர்ஆன் கேட்பதி-ருந்து ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்ததை விளங்கலாம். அந்தத் தடையை நீக்கும் இவ்விரு வசனங்கள் தான் குர்ஆனில் உள்ளன. தடை செய்யும் வசனங்கள் குர்ஆனில் இல்லை.
குர்ஆனில் தடுக்கப்படாத ஒன்று எப்படி தடுக்கப்பட்டதாக ஆகும்? இறைத்தூதர் தடை செய்ததைத் தான் இது குறிக்கின்றது என்பதைச் சாதாரண அறிவு படைத்தவர்களும் அறிந்து கொள்ளலாம்.
திருக்குர்ஆன் மட்டுமின்றி நபிகள் நாயகத்தின் வழி முறையும், விளக்கமும் அல்லாஹ்வின் செய்தி தான் என்பதைச் சந்தேகமற இது நிரூபிக்கிறது.