ஓர் ஊர்

மொத்த வசனங்கள் : 99

ஹிஜ்ர் என்பது ஸமூது சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரின் பெயர். இந்தச் சமுதாயத்தினரைப் பற்றி இந்த அத்தியாயத்தின் 80 முதல் 84 வரை உள்ள வசனங்களில் குறிப்பிடப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
15:1. அலிஃப், லாம், ரா2 இது வேதமாகிய தெளிவான குர்ஆனின் வசனங்கள்.
15:2. "தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கலாமே" என்று சில நேரங்களில் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புவார்கள்.
15:3. அவர்கள் உண்டு, சுகித்து, ஆசை அவர்களைத் திசை திருப்புமாறு அவர்களை விட்டு விடுவீராக! பின்னர் அறிந்து கொள்வார்கள்.
15:4. எந்த ஊரையும் அதற்கென்று உள்ள கால நிர்ணயத்தின் படியே அழித்துள்ளோம்.
15:5. எந்தச் சமுதாயமும் தனது காலக் கெடுவை முந்தாது; பிந்தாது.
15:6. "அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்"468 என்று அவர்கள் கூறுகின்றனர்.
15:7. "நீர் உண்மையாளராக இருந்தால் எங்களிடம் வானவர்களைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?" (எனவும் கூறுகின்றனர்)
15:8. தக்க காரணத்துடனே வானவர்களை அனுப்புவோம்.153 அப்போது இவர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.
15:9. நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.143
15:10. (முஹம்மதே!) உமக்கு முன் சென்ற பல சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம்.
15:11. எந்தத் தூதர் அவர்களிடம் வந்தாலும், அவர்கள் கேலி செய்யாமல் இருந்ததேயில்லை.
15:12. குற்றவாளிகளின் உள்ளங்களில் இவ்வாறே இதைப் புகுத்துகிறோம்.
15:13. அவர்கள் இதை நம்ப மாட்டார்கள். முன்னோர்கள் (மீது எடுத்த) நடவடிக்கை முன் உதாரணமாகச் சென்று விட்டது.
15:14, 15. அவர்களுக்காக வானத்தில் ஒரு வாசலை நாம் திறந்து விட்டு, அதன் வழியாக அவர்கள் மேலேறிச் சென்றாலும், "எங்கள் பார்வைகள் மயக்கப்பட்டு விட்டன. இல்லை நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகி விட்டோம்" என்றே கூறுவார்கள்.26
15:16. வானத்தில் நட்சத்திரங்களை அமைத்தோம். பார்ப்போருக்கு அதை அழகாக்கினோம்.
15:17, 18. ஒட்டுக் கேட்பவனைத் தவிர, விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் அதைப் பாதுகாத்துள்ளோம். அவனை ஒளி வீசும் தீப்பந்தம் விரட்டும்.26
15:19. பூமியை விரித்தோம். அதில் முளைகளை நட்டினோம்.248 அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம்.
15:20. உங்களுக்கும், நீங்கள் யாருக்கு உணவளிப்போராக இல்லையோ அவர்களுக்கும் அதில் வாழ்வதற்குத் தேவையானவற்றை அமைத்தோம்.
15:21. எந்தப் பொருளாயினும் அதன் கருவூலங்கள் நம்மிடமே உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே அதை இறக்குகிறோம்.
15:22. சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
15:23. நாமே உயிர்ப்பிக்கிறோம். மரணிக்கச் செய்கிறோம். நாமே உரிமையாளர்களாவோம்.
15:24. உங்களுக்கு முன் சென்றவர்களையும் அறிவோம். பின் வருவோரையும் அறிவோம்.
15:25. உமது இறைவனே அவர்களை ஒன்று திரட்டுவான். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.
15:26. சேற்றிலிருந்த கருப்புக் களி மண்ணால் வடிவமைத்து மனிதனைப் படைத்தோம்.368
15:27. கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
15:28. "சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைத்து, நான் மனிதனைப் படைக்கவுள்ளேன்" என்று வானவர்களுக்கு உமது இறைவன் கூறியதை நினைவூட்டுவீராக!368
15:29. "அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது,90 அவருக்குப் பணிந்து விழுங்கள்!"11 (என்று கூறினான்)
15:30, 31. இப்லீஸைத் தவிர வானவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகப் பணிந்தனர். அவன் பணிந்தவனாக இருக்க மறுத்து விட்டான்.26
15:32. "இப்லீஸே! பணிந்தோருடன் நீ சேராமல் இருப்பது ஏன்?" என்று (இறைவன்) கேட்டான்.
15:33. "சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு நீ படைத்த மனிதனுக்கு நான் பணிபவனாக இல்லை" என்று அவன் கூறினான்.
15:34. இங்கிருந்து நீ வெளியேறு! நீ விரட்டப்பட்டவன்.
15:35. தீர்ப்பு நாள்1 வரை உன் மீது சாபம் உள்ளது (என்று இறைவன் கூறினான்)
15:36. "இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை எனக்கு அவகாசம் தருவாயாக!" என்று அவன் கேட்டான்.
15:37, 38. "குறிப்பிட்ட நேரம் வரும் நாள்1 வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்" என்று (இறைவன்) கூறினான்.26
15:39, 40. "என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்" என்று கூறினான்.26
15:41. "இதோ என்னிடம் நேரான வழி உள்ளது" என்று (இறைவன்) கூறினான்.
15:42. எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
15:43. நரகமே அவர்கள் அனைவருக்கும் எச்சரிக்கப்பட்ட இடம்.
15:44. அதற்கு ஏழு வாசல்கள் உள்ளன. அவர்களில் பங்கிடப்பட்ட ஒரு தொகையினர் ஒவ்வொரு வாசலுக்கும் உள்ளனர்.
15:45. (இறைவனை) அஞ்சுவோர் சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
15:46. "அச்சமற்று நிம்மதியுடன் இதில் நுழையுங்கள்!" (என்று கூறப்படும்)
15:47. அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதங்களை நீக்குவோம். கட்டில்களில் நேருக்கு நேர் நோக்கி சகோதரர்களாக இருப்பார்கள்.
15:48. அதில் அவர்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாது. அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.
15:49. "நான் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்" என்பதை எனது அடியார்களுக்குக் கூறுவீராக!
15:50. "எனது வேதனை தான் துன்புறுத் தும் வேதனை" (என்பதையும் கூறுவீராக!)
15:51. இப்ராஹீமின் விருந்தினர் பற்றியும் அவர்களுக்குக் கூறுவீராக!
15:52. அவர்கள், அவரிடம் சென்று ஸலாம் கூறினர்.159 அதற்கு அவர் "நாம் உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம்" என்றார்.
15:53. "நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்" என்று அவர்கள் கூறினர்.
15:54. "எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?" என்று அவர் கேட்டார்.
15:55. "உண்மையின் அடிப்படையிலேயே உமக்கு நற்செய்தி கூறுகிறோம். நம்பிக்கை இழந்தவராக நீர் ஆகி விடாதீர்!" என்று அவர்கள் கூறினர்.
15:56. "வழி கெட்டவர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்?471" என்று அவர் கேட்டார்.
15:57. "தூதர்களே!161 உங்கள் செய்தி என்ன?" என்றும் கேட்டார்.
15:58. நாங்கள் குற்றம் புரிந்த கூட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளோம்.
15:59, 60. "லூத்துடைய குடும்பத்தாரில் அவரது மனைவியைத் தவிர அவர்கள் அனைவரையும் நாங்கள் காப்பாற்றுவோம். அவள் அழிபவள் என்று நிர்ணயித்து விட்டோம்" என்றனர்.26
15:61, 62. அத்தூதர்கள்161 லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்த போது "நீங்கள் அறிமுகமற்ற சமுதாயமாக இருக்கிறீர்களே" என்று அவர் கூறினார்.26
15:63, 64, 65. (அதற்கவர்கள்) "அவ்வாறில்லை! அவர்கள் சந்தேகித்ததை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்; உண்மையையே உம்மிடம் கொண்டு வந்தோம்; நாங்கள் உண்மை கூறுபவர்கள்; இரவின் ஒரு பகுதியில் உமது குடும்பத்தாருடன் செல்வீராக! அவர்களைப் பின் தொடர்ந்து (கடைசியில்) நீர் செல்வீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். கட்டளையிட்டவாறு செய்து முடியுங்கள்!" என்று கூறினார்கள்.26
15:66. "அவர்கள் அனைவரும் காலைப் பொழுதில் வேரறுக்கப்பட்டு விடுவார்கள்" என்ற தீர்ப்பையும் அவருக்கு அறிவித்தோம்.
15:67. அவ்வூர் வாசிகள் மகிழ்ச்சியுடன் வந்தனர்.
15:68, 69. "இவர்கள் எனது விருந்தினர்கள். எனவே எனக்கு அவமானத்தை ஏற்படுத்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! என்னை இழிவுபடுத்தாதீர்கள்!" என்று (லூத்) கூறினார்.26
15:70. "உலகத்தாரை விட்டும் (மற்றவருக்காகப் பரிந்து பேசுவதை விட்டும்) உம்மை நாங்கள் தடுக்கவில்லையா?" என்று அவர்கள் கேட்டனர்.
15:71. "நீங்கள் (ஏதும்) செய்வதாக இருந்தால் இதோ எனது புதல்விகள் உள்ளனர்" என்று அவர் கூறினார்.
15:72. உமது வாழ் நாளின் மீது சத்தியமாக! அவர்கள் தமது (காம) போதையில் தட்டழிந்தனர்.
15:73. அவர்கள் வெளிச்சத்தை அடைந்த போது, பெரும் சப்தம் அவர்களைத் தாக்கியது.
15:74. அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல் மழை பொழிந்து, அவ்வூரின் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம்.412
15:75. சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
15:76. அவ்வூர் (நீங்கள் சென்று வரும்) நிலையான சாலையில் தான் உள்ளது.
15:77. நம்பிக்கை கொண்டோருக்கு இதில் தக்க சான்று இருக்கிறது.
15:78. அடர்ந்த தோப்புகளில் வசித்தோரும் (மத்யன் வாசிகளும்) அநீதி இழைத்தனர்.
15:79. அவர்களையும் தண்டித்தோம். அவ்விரண்டு(ஊர்களு)ம் (அனைவருக்கும்) தெரிந்த வழியில் தான் உள்ளன.
15:80. (ஸமூது எனும்) ஹிஜ்ர் வாசிகளும் தூதர்களைப் பொய்யர்களெனக் கருதினர்.
15:81. நமது சான்றுகளை அவர்களுக்கு வழங்கினோம். அவர்கள் அதைப் புறக்கணித்தனர்.
15:82. அவர்கள் மலைகளை வீடுகளாகக் குடைந்து அச்சமற்று இருந்தனர்.
15:83. அதிகாலைப் பொழுதில் அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது.
15:84. அவர்கள் செய்து கொண்டிருந் தவை அவர்களைக் காப்பாற்றவில்லை.
15:85. வானங்களையும், பூமியையும் அவற்றுக்கு இடையே உள்ளவற்றையும் தக்க காரணத்துடனேயே படைத்துள்ளோம். யுக முடிவு நேரம்1 வந்தே தீரும். எனவே அழகிய முறையில் அவர்களை அலட்சியப்படுத்துவீராக!
15:86. உமது இறைவன் நன்கு படைப்பவன்; அறிந்தவன்.
15:87. (முஹம்மதே!) திரும்பத் திரும்ப ஓதப்படும் (வசனங்கள்) ஏழையும் மகத்தான குர்ஆனையும் உமக்கு வழங்கினோம்.250
15:88. அவர்களில் பல்வேறு கூட்டத்தினர் அனுபவிப்பதற்காக நாம் வழங்கியுள்ளதை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! நம்பிக்கை கொண்டோரிடம் உமது சிறகைத் தாழ்த்துவீராக!251
15:89, 90, 91. சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுத்து, குர்ஆனை414 (முந்தைய வேதத்தை)க் கூறு போட்டோர் மீது நாம் (வேதனையை) இறக்கியது போலவே (இவர்களுக்கும் இறக்குவோம் என்ற இறைச் செய்தி குறித்து) "நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவன்" என (முஹம்மதே!) கூறுவீராக!26
15:92, 93. உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்.26
15:94. உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
15:95. கேலி செய்வோரை விட்டும் நாமே உம்மைக் காப்போம்.
15:96. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுளைக் கற்பனை செய்கின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள்.
15:97. அவர்கள் (உம்மைப் பற்றிப்) பேசுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம்.
15:98. உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! ஸஜ்தா செய்வீராக!
15:99. உறுதியானது (மரணம்) வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக!252